நன்றி சொல்லாத நாக்கு!
எங்களை யாராவது புகழ்ந்து பேசினால் நாங்கள் அவர்களுக்கு எல்லா உதவியும் செய்வோம். நாம் செய்த உதவிக்கு நன்றி சொல்லாதவர்களுக்கு திரும்பவும் நாம் உதவப் போகமாட்டோம். இது மனித இயல்பு அப்படி வாழக்கூடாது. நாம் நல்லவர்கள் என்றால் ஒருநாள் கூட எம்மைப் புகழ்ந்து பேசாதவர்களுக்கும் தொடர்ந்து உதவி செய்ய வேண்டும். அது எங்கள் கடமை.
தினமும் சுவையான உணவை எங்கள் கையானது நாவுக்கு ஊட்டி விடுகின்றது. எப்போதாவது எங்கள் நாக்கு கையைப் புகழ்ந்து நன்றி சொல்லியிருக்கிறதா? வாங்கி உண்டு கொண்டே இருக்கின்றது. அதற்காக கை வருத்தப்படுவதில்லை. பிரதிபலன் கருதாது மூன்று வேளையும் தன் கடமையைச் செய்து கொண்டுதான் இருக்கின்றது.
என்றும் முகமன் இயம்பாதவர் கண்ணும்
சென்று பொருள்கொடுப்பார் தீதற்றோர் – துன்றுசுவை
பூவில் பொலிகுழலாய் பூங்கை புகழவோ
நாவிற்கு உதவும் நயந்து.
(சிவப்பிரகாச சுவாமிகளின் நன்நெறி)