எழுத்தாளர் குரு அரவிந்தன்
கல்லாத பலபேரின் நூல்கள் தோன்றிக்
களியாட்டம் போட்டாலும் கனடா மண்ணில்
நல்லாக எழுதுபவர் சிலபேர் தானே
நம்மனத்தில் இருக்கின்றார் அவர்கள் உள்ளும்
பொல்லாத தமிழெழுதும் சிலரை நீக்கிப்
புடம்போட்ட மானுடர்கள் என்று பார்த்தால்
எல்லோரும் விரும்புகிற குருவே நீதான்
இருக்கின்றாய் முதலிடத்தில் எழுத்தால் இங்கே!
தென்னகத்து இதழ்களிலே உனது ஆக்கம்!
தெருவெங்கும் கடைதோறும் உந்தன் நூல்கள்!
என்னகத்துப் புலம்பெயர்ந்த சிறார்கள் வீட்டில்
எத்தனையோ குறுந்தட்டு உந்தன் பேரில்!
புன்னகைத்துப் பார்ப்பதற்குத் திரைகள் தோறும்
புதுப்படங்கள் கதையெல்லாம் உந்தன் பேரில்!
தன்னலத்துச் சுயநரிகள் கடித்த காயக்
கட்டவிழ்த்துத் தமிழ்நடக்க வைத்தாய் வாழி!
யாரோடும் பகைகொள்ளா இனிய வாழ்க்கை
பலரோடும் சேர்ந்தியங்கும் கனிந்த பண்பு
ஊரோடு போகட்டும் எல்லாம் என்ற
உணர்வோடு ஒதுங்காமல் கனடா மண்ணில்
பேரோடும் புகழோடும் சிறார்கள் வாழ
பெரியவனே நீயாற்றும் பணியே போதும்
சீரோடு உன்பேரை நிறுவிக் காக்க!
சிறப்போடு பல்லாண்டு வாழி நீயே!