தமிழ்ச் சேவல் நான்!
தமிழ்ச் சேவல் நான்!
மூடி மறைத்ததலை தாடி வளர்த்த முகம்
கோடி கருணைமிகு – இருகண்ணும்
நாடி வருமடியர் வலிமைபெற அசைந்து
நன்மை புரிந்துநிற்கும் – இருகையும்
வாடி நைந்துருகி நூல்கள் கிழிந்தறுந்த
வடிவில் அணிந்திருக்கும் – மேலாடை
கூடி நிலமசையக் குந்தி இருந்தெழுந்து
குறைகள் தீர்த்ததன்றி – வாணாளில்
சாடிச் சலமன்றி தனக்கென்றோர் பொருள்தேடாச்
சாது சீரடியின் – பாபாவை
பாடித் தமிமெழுதப் பரந்த கவிதைநெறி
பரிந்து எனக்களித்தாள் – தமிழன்னை
தேடிச் சொற்பொறுக்கி தீட்டும் கவிதையல்ல
தீயின் வெளிச்சமடா – என்கவிதை
ஓடி நடைபயிலும் ஓடை நதிவெள்ள
ஓசை இதுவென்று – தமிழ்சொல்ல
கூடி எதுகைகளும் மோனைத் தொடையுமென
கூவும் தமிழ்ச்சேவல் – நான்தானே!