|

சங்க இலக்கியமும் சந்தன மரமும்!

உன்னோடு நிறையப் பேசவேண்டும் வா தினை அறுத்த வயற்புறத்துக்கு போய் வருவோம் என்றாள் தோழி. வீட்டிலே பேச முடியாத காதல் விடயங்கள் அவை. வயற்புறத்திலே யாரும் இருக்க மாட்டார்கள். தோழியின் பின்னே நடந்தாள் அவள்.

நடந்து செல்லும் போதே தோழி சொன்னாள். உனக்காக உன் காதலனிடம் யாரையாவது தூதாக அனுப்பிப் பார்க்கலாம் என்று நினைக்கின்றேன்.

அந்த வேலையெல்லாம் வேண்டாம். அவன் போனால் போகட்டும் விடு. அவள் சொன்னாள்.

இல்லை. நீ உனக்குள்ளே கவலைப்பட்டு வருந்துகின்றாய். எவ்வளவு அழகாக இருந்த உன் கோலத்தை இன்று பார். ஒருமுறை அவனோடு பேசித்தான் பார்ப்போமே என்றாள் தோழி. அவள் வேதனையோடு சிரித்தாள்.

காதலித்தவளை எந்தச் சூழ்நிலையிலும் நான் கைவிடக்கூடாது என்ற மன வைராக்கியம் அவனுக்கு இருந்திருக்க வேண்டும். அந்த எண்ணம் இல்லாதவனை கட்டாயப்படுத்தி என்னோடு சேர்த்து வைப்பதன் மூலம் எந்தப் பயனும் இல்லை அதை நீ முதலில் தெரிந்து கொள்.

அவன் நல்ல குணமுள்ளவன். பழகுவதற்கு இனிமையானவன். பிறர் மனத்தை நோகடிக்காதவன். அப்படியியிருந்தும் ஏன் இந்த மாற்றம் நீ அகத் தடைகளை மட்டுமே பேசிக்கொண்டிருக்கின்றாய். புறத் தடைகளைப் பற்றிச் சிந்திக்கவே மாட்டாயா அது தான் அவனை ஒரு முறை சந்தித்துப் பேசினால் நல்லது. பின்பு தப்பு எங்கள் மீது விழாதல்லவா.

தனிமையில் சந்தித்த போதெல்லாம் என் அளவு கடந்த அன்பை அவனுக்குச் சொல்லியிருக்கின்றேன் தன் பிரிவை நான் தாங்கிக்கொள்ள மாட்டேன்; என்பதும் அவனுக்குத் தெரியும்.. அப்படி இருந்தும் இந்த முடிவை அவன் எடுத்து என்னை வந்து காண்பதைத் தவிர்க்கின்றான் என்றால் அவன் அப்படியே இருந்து விட்டுப் போகட்டும். இந்த உருக்கி ஒட்ட வைக்கும் வேலையெல்லாம் வேண்டாம்.

இப்போது அவர்கள் வயல் புறத்தையும் கடந்து சந்தன மரங்கள் வளர்ந்த மலை அடிவாரத்துக்கு வந்துவிட்டார்கள். பாவப்பட்ட இந்தச் சந்தன மரங்களைப் பார் என்றாள் அவள்.

தோழி திரும்பிப் பார்த்தாள். அந்த மரங்கள் எல்லாம் பட்டைகள் உரிக்கப்பட்ட நிலையில் அவற்றின் சாறும் நீரும் மேற்பகுதிகளுக்கு செல்ல முடியாமல் கீழ் நோக்கி வழிந்து காணப்பட்டன. அந்த மரங்களும் சிறிது சிறிதாக தங்கள் உயிரை விட்டுக்கொண்டிருந்தன.

ஐயோ இந்தக் கொடுமையை யார் செய்தது. ஏன் மரங்களின் பட்டைகளை உரித்திருக்கின்றார்கள் என்றாள் தோழி பதைப்புடன்.

நம் இனத்துக் குறவர்கள் தான் செய்திருக்கிறார்கள். மரப் பட்டைகளை நனையப் போட்டு நார்களாக்கி அவற்றால் உடை பின்னி அணிவதற்காக இந்த உயர்ந்த சந்தன மரங்களைச் சிதைத்திருக்கின்றார்கள். சந்தன மரத்துக்கும் வேறு மரங்களுக்கும் உள்ள வேறுபாட்டை உணராத முட்டாள் பயல்கள்.

தோழி எதுவும் பேசவில்லை. அந்த மரங்களைத்தான் கவலையோடு பார்த்துக்கொண்டு நின்றாள்.

இந்தச் சந்தன மரங்கள் இனி மணம் வீச மாட்டா அவை அழிந்து போகும். இது போலத்தான் என் வாழ்வும் இருக்கின்றது. நானும் இளமை வளத்துடன் சிலிர்த்துக் கிடந்த காலம் ஒன்று உண்டு. என் வனப்பெல்லாம் அறிவில்லாத ஒருவனால் உரித்தெடுக்கப்பட்டு விட்டது. என் கண்களும் அழுது காய்ந்து விட்டன. என் உடலும் அழகொழிந்து போய்விட்டது. உணர்வுகளும் என்னைக் கொன்றொழித்து விட்டன.

என் காதலன் மனம் திருந்தி மீண்டும் என்னிடம் வந்தாலும் என்னால் அவன் அடையப் போகும் சுகம் அவனுக்கு எதுவும் இல்லை. அவனால் நான் அடையப்போவதும் இனி எதுவும் இல்லை. அவன் வந்தாலும் ஒன்றுதான் வராவிட்டாலும் ஒன்றுதான்.

அது முடிந்து போன கதை. எனவே அவன் என் கண்முன் வராமல் தன் ஊரிலேயே இருந்து கொள்ளட்டும்.

இப்போது என் பிரச்சனை எல்லாம் எனக்குப் பெற்றோர்கள் இருக்கின்றார்கள். என்னைச் சுற்றி உறவினர்கள் இருக்கின்றார்கள். என் காதல் தோல்வியை எப்படி அவர்களுக்கு மறைத்து வாழப்போகின்றேன் என்ற பயம் தான்.

அதற்கு ஏதாவது வழி தெரிந்தால் நீ சொல் என்றாள் அவள்.

என்னர்ஆயினும் இனி நினைவு ஒழிக!

அன்னவாக இனையல் தோழி! யாம்

இன்னமாக நத் துறந்தோர் நட்பு எவன்?

மரல் நார் உடுக்கை மலை உறை குறவர்

அறியாது அறுத்த சிறியிலைச் சாந்தம்

வறனுற்று ஆர முருக்கி பையென

மரம் வறிதாகச் சோர்ந்து உக்காங்கு என்

அறிவும் உள்ளமும் அவர் வயின் சென்றென

வறிதால், இகுளை! என் யாக்கை; இனி அவர்

வரினும் நோய் மருந்து அல்லர்; வாராது

அவணர் ஆகு, காதலர்! இவண் நம்

காமம் படர் அட வருந்திய

நோய் மலி வருத்தம் காணன்மார் எமரே!

இந்தப் பாடல் சங்க இலக்கியமான நற்றிணையிலே 64வது பாடலாக உள்ளது. உலோச்சனார் என்ற புலவர் பாடியிருக்கின்றார்.

இனிய மணம் வீசும் சந்தன மரங்களை வெறும் நாருக்காக மலைவாழ் குறவர்கள் கொன்றழித்ததை என்றும் அன்பு மணம் வீசக்கூடிய ஒரு பெண்ணை வெறும் காதல் சுகத்துக்காக ஒருவன் பயன்படுத்தி அழித்த அறிவீனத்தோடு ஒப்பிட்டுப் பாடல் செய்திருக்கின்றது சங்க இலக்கியம்.

இரா.சம்பந்தன்

(தமிழர் தகவல் இதழ் கனடா 5.8. 2023)

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.