வினையும் பயனும்!
வினையும் பயனும்!
குழந்தைகள் வெளிக்குப் போனால் பசுவின் சாணத்தைக் கொண்டு அந்த இடத்தை மெழுகிச் சுத்தப்படுத்துகின்றோம். அங்கே மலத்தை மலத்தால் சுத்தப்படுத்துகின்றோம்
ஒரு குழந்தையின் காலிலே முள்ளொன்று தைத்துவிட்டால் இன்னொரு முள்ளாலே அதை வெளியில் எடுத்து விடுகின்றோம் அங்கே முள்ளை முள்ளாலே எடுக்கின்றோம்
வீட்டிலே குழந்தைகள் சத்தம் போட்டால் ஏய் பேசாமல் இருங்கள் என்று அதைவிடச் சத்தமாகச் சொல்லி அமைதிப் படுத்துகிறோம் அங்கே சத்தத்தை சத்தத்தாலே அடக்குகின்றோம்.
அப்படியிருக்கும் போது நாம் செய்யும் குற்றங்களை மட்டும் இறைவன் எப்படித் தனது அருளினாலே தீர்த்து வைக்க முடியும். அவனும் அதைவிடப் பெரிய குற்றத்தினால் தான் அதைப் போக்க நினைக்கின்றான்.
அதனால் தான் நாம் குற்றங்களைச் செய்துவிட்டு விரதம் இருந்து கோவிலுக்குப் போனால் கூட அதைவிடப் பெரிய தண்டணை கிடைத்து விடுகின்றது.
இதைத்தான் கிழவி வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதற்கொண்டு எந்த நூலிலும் வழி காட்டப்படவில்லை என்று நல்வழியில் பாடிவிட்டுப் போனது.
வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
அனைத்தாய நூலகத்தும் இல்லை-நினைப்பதெனக்
கண்ணுறுவது அல்லால் கவலைப்படேல் நெஞ்சேமெய்
விண்ணுறுவார்க் கில்லை விதி.
(ஒளவையின் நல்வழி பாடல் 37)
(கிருபானந்த வாரியார் சிலப்பதிகார விரிவுரையில் பேசியது)
இரா.சம்பந்தன்.