|

வாழ்க்கையின் வீழ்ச்சி தொடங்கும் இடம்!

அரேபிய நாடு ஒன்றிலே பழுதடைந்த நெய்யை விற்பனை செய்த குற்றத்துக்காக ஒரு ஏழை வியாபாரி கைது செய்யப்பட்டான். அவனது வசதியின்மையைப் பார்த்து இரக்கப்பட்ட நீதிபதி அவனுக்கு மூன்று வேறுபட்ட தண்டனைகளைக் கொடுத்து இதில் ஏதாவது ஒன்றை நீயே தேர்ந்து எடுத்துக்கொள் என்று தீர்ப்புக் கூறினார்.

முதலாவது தண்டனை நீ விற்ற பழுதடைந்த நெய்யில் ஏழு போத்தல் நெய்யை நீயே குடிக்க வேண்டும். இரண்டாவது தண்டனை 20 சவுக்கடிகள் வாங்க வேண்டும். இவை இரண்டும் விருப்பம் இல்லை என்றால் தண்டனைப் பணமாக 100 பொற்காசுகள் கட்ட வேண்டும்.

வியாபாரி காசும் செலவாகி விடாமல் அடியும் வாங்கித் துன்பப்படாமல் ஏழு போத்தல் பழுதான நெய்யைக் குடிப்பதற்கு ஒத்துக் கொண்டான். நெய் கொண்டுவரப்பட்டது. அவனால் ஐந்து போத்தலுக்கு மேலே குடிக்க முடியவில்லை. வாந்தி வந்தது.

அடுத்து காசு நட்டம் வராமல் இருபது சவுக்கடியை வாங்கிக் கொள்வோம் என்று நினைத்து 15 சவுக்கடிகளை வாங்கினான். மீதி ஐந்தையும் வாங்க முடியாமல் முதுகு வெடித்து இரத்தம் வடிந்தது. துடிதுடித்து எழுந்தவன் ஐயா நான் நூறு பொற்காசுகளையே கட்டிவிடுகின்றேன். என்று சொல்லி 100 பொற்காசுகளைக் கட்டிவிட்டு ஓடினான்.

இந்த அரேபிய வியாபாரிக்கு நீதிபதி கொடுத்த தண்டனை போலத்தான் இறைவனும் எங்கள் மீது இரக்கப்பட்டு நாம் செய்யும் தவறுகளுக்கு வேறுபட்ட துன்பங்களைத் தந்து விரும்பியதை நீயே ஏற்றுக் கொள் என்று சொல்கின்றான்.

ஆனால் நாங்களோ எங்களைப் புத்திசாலிகள் என்று நினைத்துக் கொண்டு எல்லாத் துன்பங்களையும் ஏற்றுக் கொள்ளத் தயாராகி விடுகின்றோம். மனித வாழ்வின் தொடர்ச்சியான வீழ்ச்சி இங்கிருந்துதான் தொடங்குகின்றது.

(தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சொற்பொழிவில் இருந்து)

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.