இணுவில் தியாகராஜா சுவாமிகள் திருப்புகழ்
தாளமுறை கைகளும் தங்கமுறை மேனியும்
தலையிலுறை பாகையும் – எந்தநாளும்
நீளமுறு தாடியும் நெஞ்சிலுறை மாலையும்
நீண்டகரை வேட்டியும் – தரையிலாட
வேழமுக விநாயகர் வேல்முருகன் சிவனையும்
வீதியெலாம் வாழ்த்தியே – பஜனைபாடும்
ஆழமனக் கோவிலில் அன்னைசிவ காமியை
அமரவைத்துப் போற்றிய – தியாகராஜர்
வாழையொடு தெங்கினம் வளர்ந்தபெரு இணுவிலில்
வளர்த்ததமிழ் பாடலை – நெஞ்சுகேட்டால்
தேனிலுறை முக்கனி தெவிட்டிவிடும் என்பதே
தெரிந்தவர்கள் உரைத்திடும் – வேதவாக்காம்
தேரிலுறை அம்மனைத் தேடிமனம் ஓடவே
தேடித்தினம் ஊரெலாம் – பொருளும் தேடி
கிழக்குமுக மாகவும் வடக்குமுக மாகவும்;
கிடந்தபல மாந்தரைத் – தெற்குமேற்கில்
ஒன்னுபட வைத்துமே ஓரிரண்டு ஆண்டதில்
ஓடவைத்தார் தேரையும் – தெய்வம்ஏற்றி
தியாகராஜா சாமியார் நடந்ததெரு வீதியில்
தெரிந்தமரம் செடிகொடி – பக்தி பேசும்
பக்தியுணர் வித்தினை பலமனத்தில் விதைக்கவோர்
பஜனையெனும் ஏர்பிடித்த – சுவாமிவாழி!
இரா.சம்பந்தன்