பழியும் பாவமும்
பழியும் பாவமும்
ஒரு மனிதர் நாள் தவறாமல் காலையும் மாலையும் பூ போட்டு இறைவனை வணங்கி வருகின்றார் என்று எடுத்துக் கொள்வோம். குடி வெறியோ வேறு எந்தக் கெட்ட பழக்கங்களோ இல்லாதவர் என்றும் வைத்துக் கொள்வோம். பிறர் துன்பம் கண்டு உதவும் மனப்பான்மை கொண்ட அவருக்கு தன்னைப் பெற்று வளர்த்து ஆளாக்கி விட்ட தாயை மதிக்கத் தெரியவில்லை. தாயை கண்கலங்க வைத்த குற்றம் ஒன்று மட்டும் அவரிடம் இருந்தது.
அவர் இறந்து மேல் உலகம் போகின்றார். கடவுள் அவரின் பாவ புண்ணியக் கணக்கைப் பார்க்கிறார். இறை பக்தி மற்ற எல்லா நல்ல குணங்களும் இருந்தும் தாயை மதிக்கத் தெரியவில்லை. தாயை மதிக்காதது அல்லப் பிரச்சனை. நன்றி என்றால் என்ன என்று உனக்குத் தெரியவில்லை. தெரிந்திருந்தால் அம்மாவை மதித்திருப்பாய். ஆகவே நீ நன்றி என்றால் என்னவென்று அறிய வேண்டும். அதற்காக நாயாகப் பிறவி எடுத்து நன்றியை முழுவதுமாக அறிந்து கொண்டு வா என்று அனுப்புகிறான் இறைவன்.
இறைவன் தீர்ப்புப் படி நாய்ப்பிறவி எடுக்கிறார் அவர். இப்போது நாய்ப்பிறவி எடுத்தாலும் நாயின் உடம்புக்குள்ளே இருக்கும் ஆத்மா போன பிறப்பிலே காலையும் மாலையும் பூப்போட்டு இறைவனை வணங்கிய ஆத்மா அல்லவா? வாழ்ந்த காலத்தில் நல்லதையே செய்த சீவன் அல்லவா? அதனால் ஒரு விசேடம் ஏற்பட்டு அந்த நாய் நடிகை வீட்டு நாயாக இருக்கும். தெருவிலே கல்லெறி படாது. தௌ;ளுத் தொல்லை இருக்காது. நீச்சல் குளத்திலே குளிக்கும். இலண்டனிலே இருந்து எடுத்த விசுக்கோத்து சாப்பிடும். காரிலே முன் சீட்டிலே இருந்து போகும்! புகைப்படத்திலே இடம் பிடிக்கும்.
எத்தனையோ நடிகைகள் தாயைக் காரிலே பின்சீட்டிலே ஏற்றிக் கொண்டு நாயை முன்சீட்டிலே ஏற்றுகிறார்களே நாய் பெரிதில்லை தாய்தான் பெரிது என்று படித்த நடிகைகளுக்குத் தெரியாதா? தெரியும். அது அவர்கள் குற்றமல்ல. நாய் செய்த புண்ணியம். யோகம்! அவ்வளவுதான்!
புலவர் கீரன் கனேடியப் பேருரை