|

தில்லை அந்தணரும் திருநீல குயவனும்!

தமிழர் தகவல் சஞ்சிகையில் இன்று (5.3.2018) வெளியான எனது கட்டுரை.

இது மதம் சார்ந்த செய்தியல்ல. மதத்துள் மறைந்து போன மனம் சார்ந்த செய்தி இது. வாரியார் முதற்கொண்டு வரலாற்று ஆசிரியர்கள் சமயவாதிகள் அனைவரும் ஒரே பாதையில் செல்ல அவர்கள் காணாத இன்னொரு பாதையிலும் நாம் பயணப்பட வேண்டிய கட்டாயம் சில வேளைகளில் ஏற்பட்டு விடுகின்றது.
இறைவன் சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் என்று பாடு என முதல் அடியை எடுத்துக் கொடுக்க திருநீல கண்டத்துக் குயவனாhக்கு அடியேன் என்று அடுத்த வரியைப் பாடினார் சுந்தரர்
உடனே எமது தமிழ் முன்னோடிகள் மேடை தோறும் பிராமணனையும் குயவனையும் சமமாக வைத்துப் பாடி சாதிப் பிரிவினைக்குச் சாவுமணி அடித்தவர் சுந்தரர் என்று முழங்கத் தொடங்கினார்கள். அந்தக் கருத்தே வலிமையாக நிலைபெற்றும் விட்டது.
தன் பதிகத்திலே பிராமணன் குயவன் வேடன் பறையன் அரசன் வேளாளன் இடையன் மீனவன் என்று அனைத்துச் சாதியில் பிறந்தவர்களையும் சமமாக வைத்து சுந்தரர் பாடியிருக்கலாம். ஆனால் தில்லை வாழ் அந்தணருக்கு அடுத்து திருநீல கண்டத்துக் குயவனை அவர் மனம் நினைத்ததற்கு சாதி காரணமல்ல. வேறு ஒரு சுவையான காரணம் உண்டு.
ஒரு குயவன் இறையடியவர்கள் வந்தால் பிச்சை எடுப்பதற்குத் திருவோடு செய்து கொடுப்பது வழக்கம். அவன் வாய் எப்போதும் இறைவனின் பெயருள் ஒன்றான திருநீல கண்டன் என்பதை உச்சரித்ததால் ஊரிலே திருநீல கண்டன் எனப் பேசப்பட்டான்.
அந்தத் திருநீல கண்டன் வீட்டிலே அழகான மனைவி இருக்க விலைமாது ஒருத்தியிடம் சென்று வந்தான். அதைத் தெரிந்து கொண்ட மனைவி இனிமேல் நீ என்னைத் தொடக் கூடாது. இது நீ வணங்கும் திருநீல கண்ட இறைவன் மீது சத்தியம் என்று சொன்னாள்.
யார் மீது சத்தியம் செய்தால் கணவன் தன்னை நெருங்க மாட்டானோ அதைத் தெரிந்து கொண்டு மனைவி தடை போட்டு விட்டாள். ஒரு வீட்டிலே வாழ்ந்தார்கள். சமைத்து உண்டார்கள். ஒன்றாக வெளியே போனார்கள். ஆனால் உறங்கினார்கள் தனித்தனியாக. முதுமை வரையும்.
இறைவன் அவர்களை ஒற்றுமைப்படுத்த விரும்பினான். துறவியாக வந்து ஒரு திருவோட்டை குயவனிடம் கொடுத்து பத்திரமாக வை. பின்பு பெற்றுக் கொள்கிறேன் என்றான். குயவனும் மண்ணிலே அதைப் புதைத்து வைக்க இறைவன் அதை மறைத்து விட்டு திரும்பி வந்து நான் தந்து வைத்த பொருளைத் தா என்றான்.
குயவன் தேடினான் காணவில்லை. புதிதாக ஒரு திருவோடு செய்து தருவதாக கெஞ்சினான் துறவி கேட்கவில்லை. என்னுடைய பொருளை நீ திருடி விட்டாய் என்றான். வழக்கு தில்லை அந்தணர் முன் வந்தது. குயவன் திருடவில்லை என்கிறான். அவன் என்ன செய்தால் நீர் ஏற்பீர் என்று துறவியைக் கேட்டனர் அந்தணர்கள்.
சரி திருடவில்லை என்றால் திருப்புலி ஈச்சரத்துக் குளத்திலே மனைவியின் கையைப் பிடித்துக் கொண்டு இறங்கித் தோய்ந்து திருடவில்லை என்று சொல்லச் செய்யுங்கள். நான் போய் விடுகின்றேன் என்றார் துறவி. குயவன் மனைவியை அழைத்து ஒரு மூங்கில் தடியிலே ஒரு முனையைப் பிடிக்கச் சொல்லி மறுமுனையில் தான் பிடித்துக் கொண்டு குளத்தில் இறங்கினான்.
மனைவியார் தம்மைக் கொண்டு மறைச்சிவ யோகியார்முன்
சினவிடைப் பாகர் மேவும் திருப்புலீச் சரத்து முன்னர்
நனைமலர்ச் சோலை வாவி நண்ணித்தம் உண்மை காப்பார்
புனைமணி வேணுத் தண்டின் இருதலை பிடித்துப் புக்கார்.

( திருத்தொண்டர் புராணம் – திருநீலகண்ட நாயனார் புராணம் )

பாருங்கள் மனைவி கையைப் பிடிக்காமல் எங்களை எல்லாம் ஏமாற்றுகிறான் குயவன் என்றார் துறவி. மனைவி கையைப் பிடியப்பா என்றார்கள் வழக்கை விசாரித்தவர்கள். ஐயோ நான் அவள் கையைத் தொட மாட்டேன் என்றான் குயவன். ஏன் என்றார்கள் அனைவரும். குயவனும் மனைவியும் இதுவரை கட்டிக் காத்த இரகசிய வாழ்வு அனைவருக்கும் தெரியவந்தது. துறவியைக் காணவில்லை.

இதன் பின்பு இறைவன் அவர்களுக்கு இளமைக் கோலம் கொடுத்தான் என்று வரலாறு சொல்லும். இந்தச் செய்தி சுந்தரர் மனத்திலே ஒரு ஆழமான கீறுதலை ஏற்படுத்தி இருக்க வேண்டும். பரவை சங்கிலி என்ற இரு பெண்களோடு வாழ்ந்த நான் எங்கே? இருந்த ஒரு மனைவியையும் தொடாமல் வாழ்ந்த குயவன் எங்கே? நான் தானே கல்யாணம் கட்டக் கூடாது என்று இறைவன் அடிமை ஓலையைக் காட்டித் தடுத்து விட்டான். அவனை மதியாமல் பிறகு இரண்டு திருமணம் செய்திருக்கிறேன். அவனை அழைத்துப் பரவையிடம் தூது அனுப்பி இருக்கின்றேன். என்ன இழிவான வாழ்க்கை என்னுடையது.
குயவன் கேட்காமலேயே இறைவன் அவனைத் தேடிப்போய் மனைவியோடு சேர்த்து வைத்தானே. அந்தக் குயவன் பெரியவனா நான் பெரியவனா என்ற எண்ணத்தினால் தான் திருநீல கண்டத்துக் குயவனார்க்கு அடியேன் என்று சுந்தரர் பாடினாரே ஒழிய எம்மவர்கள் நினைப்பது போல சாதி அடிப்படையில் சுந்தரர் பாடவில்லை.
அப்படிச் சாதிக்கு முன்னுரிமை கொடுக்கச் சுந்தரர் எண்ணியிருந்தால் திருநாளைப் போவார் தான் தில்லைவாழ் அந்தணருக்கு அடுத்து வந்திருப்பார். ஏனெனில் அறுபத்து மூவரிலே அவர் மட்டும் தான் பறையன்.
இரா.சம்பந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.