கலாநிதி. எஸ். விஜயகுமார் அவர்கள்!
கலாநிதி. எஸ். விஜயகுமார் அவர்கள்!
கொடிமலர்ந்தும் மணம்வீசா மலரைப் போன்றார்
கொடுக்காமல் பொத்திவைக்கும் படித்தோர் என்றே
அடிவரைந்து குறறெழுதிப் போனார் அந்த
அழகுதமிழ் வள்ளுவனார் குறளில் ஆமாம்!
மடிநிறையக் காசுபணம் சேர்க்கும் எண்ண
மனநிலையில் இல்லாமல் இனத்துக் காக
இடிமுழக்கம் செய்தவொரு கல்வி யாளர்
இனியமுக விஜயகுமார் அதுவே உண்மை!
சென்றருகில் நின்றவர்க்கு நண்பன் ஆனார்
சிறந்தவொரு மந்திரியாய்ச் சிலருக் கானார்
கன்றெனவே ஓடிவந்த சிறுவர்க் கெல்லாம்
கல்விதரும் ஆசிரியர் என்றும் நின்றார்
இன்றளவும் பண்பாட்டில் பழகும் போக்கில்
இனியவராய் தெய்வமென உயர்ந்து நின்றார்
என்றவரை யார்காணும் போதில் என்றும்
ஏற்றமிகு சேவகனாய்த் தோற்றம் தந்தார்
புலிநிலத்து நிலத்துச் செய்திகளைச் சுமந்து செல்ல
புதுவழிகள் கணணியிலே காட்டித் தந்தார்
ஒலிபுகுந்து விளையாடும் றேடி யோவில்
உலகத்தமிழ் ஏடுகளில்; அந்தக் காலம்
மலிவடைந்த எத்தனையே சரக்கை நீக்கி
மனிதவள மேம்பாட்டைப் புகுத்தச் செய்தார்
வலிபடைத்த இனமாக தமிழர் வாழ
வாழ்நாளைச் செலவழித்தார் விஜய குமாரும்!
விதிவழியால் மானுடர்கள் உடல்கள் வீழும்
வேதனைதான் ஆனாலும் அவர்கள் செய்த
பதிவுகளே என்றென்றும் உலகில் நிற்கும்
பலகதைகள் அதனுள்ளே உறங்கிக் கொள்ளும்
மதியுணர்வை இனநினைவாய் மாற்றிக் கொண்டார்
மாத்திரமே பிறர்மனத்தை ஆட்சி செய்வார்
அதியுர்ந்த மானுடனே அண்ணா நீங்கள்
ஆண்டவனின் அடியினிலே இனிது வாழி!
இரா.சம்பந்தன்