காலத்தை அறிந்து கொள்ளுங்கள்!
கொக்கு ஒக்க கூம்பும் பருவத்து மற்று அதன்
குத்து ஒக்க சீர்த்த இடத்து!
அலைகள் வந்து மோதும் அழகான கடற்கரை அது. அங்கே மேனி நனைத்துக் கிடக்கின்ற பாறைகளின் மீது பெருந்தொகையான நீர்ப் பறவைகள்! அவற்றின் மத்தியில் தான் எத்தனை பரபரப்பு. சில கடலில் பாயந்து மீன் தேடித் திரும்புகின்றன. சில நீண்ட சிறகுகளை விரித்துப் படபடக்கின்றன பெரும் குரலோடு! சில ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொள்கின்றன அன்போடு! இரை திருட வரும் உறவுகளைக் கொத்திக் கலைக்கின்றன வேறு சில! பாறைகளின் நின்று உச்சியில் அலகு தேய்த்துக் கொள்கின்றன இன்னும் சில!
அந்தக் கடற்கரையின் ஒருபுறத்தே பட்டுப் போன மரம் ஒன்று. அதன் கிளையிலே ஒரு கொக்கு! அதுவும் பறவைதான்! அதுவும் இரைக்காகத்தான் காத்திருக்கின்றது! ஆனால் அது தலையைத் திருப்பி நான்கு புறங்களும் பார்க்கவில்லை! மரக்கிளையில் அலகு தீட்டவில்லை! சிறகடித்துப் பரபரக்கவில்லை! கூட்டம் சேர்த்துக் கூத்தாடவில்லை! குரல் கொடுத்துத் தன் இருப்பை அறிவிக்கவில்லை! ஆம்! செத்தது போலத்தான் அதன் இருப்பு இருக்கின்றது வெகு நேரமாக!
திடீரென்று அதன் இறகுகள் விரிகின்றன! மரம் அசைகின்றது! கண்ணிமைக்கும் நேரத்துள் கடலில் குதித்து வேட்டையாடிக் கொண்டு திரும்பவும் மரத்துக்கு வருகின்றது அது! இப்பொழுது அதன் அலகிலே திரட்சியான ஒரு மீன்! காலில் அதைப் பற்றிக் கொண்டு அங்கும் இங்கும் பார்க்கின்றது வெற்றிப் பெருமிதத் தோடு!
இந்தக் காட்சியை வெகு நேரமாகப் பார்த்துக் கொண்டிருந்தார் திருவள்ளுவர். இந்தக் கொக்கிடம் இருந்து மனித சமுதாயம் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமான பாடம் ஒன்று இருக்கின்றதே! மீனைப் பிடிக்காத போது எவ்வளவு அமைதியாக இருந்தது இந்தக் கொக்கு? பின்பு மீனைக் கண்டதும் எவ்வளவு விரைவாகவும் தப்பிப் போகவிடாமலும் பிடித்துக் கொண்டது?
ஓ! மனிதர்களாகிய நாங்களும் செயலில் இறங்காத போது இந்தக் கொக்குப் போல அமைதியாக இருந்து கொள்ள வேண்டும்! செயலில் இறங்குகின்ற நேரம் வந்ததும் விரைவாகவும் தவற விடாமலும் செய்து முடிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்! ஒரு செயலுக்குக் கால நேரம் அமையும் முன்னர் படபடத்துக் காரியத்தைச் சிதறடித்து விடக்கூடாது!
இதைக் காலம் அறிதலிலே நான் குறளாக சேர்க்க வேண்டும்!
கொக்கு ஒக்க கூம்பும் பருவத்து மற்று அதன்
குத்து ஒக்க சீர்த்த இடத்து!
கூம்பும் பருவத்து – ஒரு செயலைச் செய்யாதிருக்கின்ற வேளையில்: கொக்கு ஒக்க – கொக்கு இருப்பது போல அமைதியாக இருங்கள்: மற்று சீர்த்த இடத்து – மற்றப்படி அதனைச் செய்ய வேண்டிய வேளை வந்து விட்டால்: அதன் குத்து ஒக்க – அது மீனை எப்படித் தப்பவிhமல் குத்திப் பிடிக்குமோ அது போல விரைந்து செய்து முடியுங்கள்!
ஒரு செயலைச் செய்யாதிருக்கின்ற வேயையில் கொக்கு இருப்பது போல அமைதியாக இருங்கள்! மற்றப்படி அதனைச் செய்யவேண்டிய வேளை வந்துவிட்டால் அது எப்படி மீனைத் தப்பவிடாமல் குத்திப் பிடிக்குமோ அது போல வரைந்து செய்து முடியுங்கள்!
திருக்குறள் – காலம் அறிதல்