ஈழப் பிரச்சனையும் மூன்று குறள்களும்!
இன விடுதலைக்காகப் போராடித் தோல்வியடைந்த தேசம் அது. தோல்வி தந்த கசப்பான அனுபவங்களை மறந்துவிட்டு புதிய வாழ்வொன்றினை ஏற்றுக் கொண்டவர்கள் போல அந்தத் தேசத்து மக்கள் நடித்துக் கொண்டாலும் அவர்களின் ஆழ் மனத்தில் விடுதலை வேட்கையின் சுவடுகள் இன்றும் அழியாமல் தான் இருந்தன.
அதை வெளிப்படுத்த இது தருணமல்ல என்ற உணர்வுடன் மௌனம் காத்த அந்த மக்கள் ஆக்கிரமிப்பாளர்களின் சட்ட திட்டங்களுக்கு ஒருபுறம் வளைந்து கொடுத்துக் கொண்டு தமக்காகப் போராடி உயிர் நீத்த வீர மறவர்களை மாவீரர்கள் எனப்போற்றி மறுபுறம் கொண்டாடினர்.
ஒருகாலத்தில் காலமும் பெயரும் பொறிக்கப்பட்டுக் கல்லறையும் பூந்தோட்டங்களும் என்று வரலாற்றைப் பறைசாற்றிக் கொண்டிருந்த அந்த மாவீரர் துயிலும் இல்லங்கள் பல இடங்களில் இன்று சிதைக்கப்பட்டு வெறும் கற்குவியல்களாக ஆக்கப்பட்டுவிட்ட போதும் ஏதோ ஒரு குறிப்பை வைத்து அந்த மக்கள் மாவீரர்களாகிவிட்ட தங்கள் உறவுகளுக்கு வீர வணக்கத்தை இன்றும் செலுத்திக்கொண்டுதான் வருகின்றார்கள்.
அப்படி உறவுகள் கூடும் இடங்களிலெல்லாம் பார்ப்பதற்கு பைத்தியக்காரன் போன்ற ஒரு முது மனிதன் தோன்றுவான். காவி படிந்த பற்களும் புழுதி படிந்த வேட்டி சட்டையும் ஊன்றிய தடியுமாக தோன்றும் அவன் வானத்தைப் பார்த்து 875 என்று பலமாகக் கூவுவான். மறுகணம் இரு கைகளையும் அகல விரித்து படிக்கலையே நாங்கள் படிக்கலையே என்று தலைகுனிந்து அழுவான்.
அவனின் இந்த விசித்திரச் செய்கையை காலங்காலமாக பலரும் கண்டு வந்தாலும் அதற்கு விளக்கம் கேட்க யாரும் முன்வரவில்லை. ஒரு சிலர் துணிந்து கேட்ட போது கூட மகாத்மா காந்தியே அவர் சொன்னதைக் கேட்கல்லை. நீ கேட்டு என்ன பண்ணப்போகின்றாய் ஆளைவிடு என்று அவன் நகர்ந்து விடுவான்.
தற்செயலாக ஒருமுறை அவன் தனியாகப் பேசிக் கொண்டிருந்ததை ஒரு மனிதர் கேட்டு விடுகின்றார். அவன் பேசியது இதுதான்.
காந்தியாரே பகவத்கீதை படித்த நீர் எங்களுடைய தமிழ் நூலான திருக்குறளைப் படித்திருந்தால் உமக்கு அந்த அவலச் சாவு வந்திருக்குமா கையெடுத்து கும்பிட்டாலும் நம்பாதே கண்ணீர் விட்டு அழுதாலும் நம்பாதே கும்பிட்டு நிற்கிற கைக்குள்ளேயும் ஆயுதம் மறைந்திருக்கும் என்று திருவள்ளுவர் படிச்சுப்படிச்சு சொன்னாரே கேட்டீரா. கேட்டிருந்தால் இன்னும் கொஞ்சக் காலம் உயிரோடு இருந்திருக்கலாமே
கோட்சே கும்பிட்ட கைக்குள் தானே துப்பாக்கியை மறைத்து வைத்திருந்தான் என்று சிரித்தான் அவன்.
தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும் ஒன்னார்
அழுத கண்ணீரும் அனைத்து
(திருக்குறள் – கூடாநட்பு – குறள் 828)
கேட்டவருக்கு மனம் இருப்புக் கொள்ளவில்லை. அவன் அடிக்கடி வானத்தைப் பார்த்துச் சொல்லும் 875ம் திருக்குறளாகத்தான் இருக்க வேண்டும். அதிலே எமது இனம் செய்த மிகப்பெரிய தவறு ஏதேனும் சொல்லப்பட்டிருக்கலாம் என்று நினைத்து வீட்டுக்கு ஓடிச் சென்று திருக்குறள் புத்தகத்தைப் புரட்டிப் பார்த்தார்.
தன்துணை இன்றால் பகை இரண்டால் தான் ஒருவன்
இன்துணையாக கொள்க அவற்றில் ஒன்று
(திருக்குறள் – பகைத்திறன் தெரிதல் – குறள் 875)
தனக்குத் துணையாக யாரும் இல்லாத நேரத்தில் ஒருவன் இரண்டு பகைவர்களை போரிலே எதிர்க்க வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டால் கௌரவத்தைப் பார்க்காமல் அந்த பகைவர்களில் ஒருவனோடு மிகவும் நண்பனாக மாறிப் போரைத் தவிர்த்துக் கொண்டு மற்றவனோடு க:டுமையாகப் போராடினால் மட்டுமே அழிவில் இருந்து தப்பிப் பிழைக்கலாம்.
திருக்குறளை மார்போடு அணைத்துக் கொண்டு சிந்தனையில் ஆழ்ந்தார் அவர். ஒரு அடக்குமுறை அரசு. அருகே இன்னொரு வல்லரசு. ஆம் இரண்டு பகை நாடுகளை யுத்தத்திலே சந்தித்தது எங்கள் நாடு.
வலிமையும் மன உறுதியும் இருந்தும் இரு பகைவர்களை ஒரே நேரத்தில் எதிர்த்து அழிந்து ஒழிந்தது எங்கள் தேசம். நாங்களும் திருக்குறள் என்ற இலக்கியத்தின் சொல்லைக் கேட்டு நடந்திருந்தால் எங்கள் மாவீரர்களும் பாதியாகக் குறைந்திருப்பார்களோ என்னவோ.
நாங்கள் செய்திருக்க வேண்டியதையும் திருக்குறள் அழகாகச் சொல்லியிருக்கின்றது.. ஒரு மிகச்சிறிய நாடு தன் நிலத்துக்கும் மக்களுக்கும் ஆபத்தும் பயமும் வராமல் தவிர்க்கும் பொருட்டு பெரிய நாடுகள் குறைவான சலுகைகளை அளிக்க முன்வந்தாலும் பணிந்து பக்குவமாக அதை ஏற்றுக் கொண்டு ஏனைய உரிமைகளைப் பறித்தெடுக்கும் காலம் கனியும் வரை அமைதியாக இருக்கப் பழக வேண்டும்.
உறை சிறியர் உள் நடுங்கல் அஞ்சி குறைபெறில்
கொள்வார் பெரியார் பணிந்து
(திருக்குறள் – வினை செயல் வகை – குறள் 680)
உறை சிறியர் – உறைகின்ற நிலமானது சிறியதாக காணப்படுகின்ற நாட்டின் மக்கள்
உள்நடுங்கல் அஞ்சி – தமக்கு இந்தப் போராட்டத்தினாலே ஆபத்து வந்து விடுமோ என்று மனம் நடுங்குவதைத் தவிர்க்கும் பொருட்டு அந்த நாட்டுத் தலைவர்கள்
குறை பெறின் – தாங்கள் கேட்டதற்குக் குறைந்த அளவே பெற்றுக் கொள்ள நேரிட்டாலும்
பெரியார்ப் பணிந்து கொள்வர் – பெரிய நாடுகள் நீட்டுவதையே ஒத்துக் கொண்டு வாங்கி தம் தேசத்தை அழிவில் இருந்து காப்பாற்றிக் கொள்வார்கள்.
எமது ஆயுதப் போராட்டம் வெறும் ஐம்பது வருட வரலாற்றைக் கொண்டது. ஆனால் திருக்குறள் இரண்டாயிரம் வருட வரலாற்றைக் கொண்டது. ஆனால் எங்கள் பிரச்சனையின் ராஜ தந்திரத் தீர்வுக்காக எழுதப்பட்ட குறள்களாகவே இந்த மூன்று குறள்களும் தெரிகின்றன.
கனடா தமிழர் தகவல் சஞ்சிகை (5.11.2024) இம்மாத இதழுக்கு நான் எழுதிய கட்டுரை இது!