இப்படியும் இருக்குமோ?
இந்துமத புராணங்களிலும் இதிகாசங்களிலும் மந்திரம் என்ற சொல் அதிக முக்கியத்துவம் பெற்றுக் காணப்படுகின்றது. மந்திரங்களைக் கொண்டு தேவர்களை அழைக்கலாம்! மழை பெய்விக்கலாம்! இறைவனைக் கண்டு ஆயுதங்களை மந்திரம் மூலம் பெற்றுக் கொள்ளலாம்!
மந்திரங்களால் எதையும் சாதித்துக் கொள்ள முடியும்! ஆனால் எது எதுக்கு என்ன மந்திரம் என்று அறிந்தால் தான் அதைப் பயன்படுத்திப் பயனடையலாம் என்பதும் அப்படிப் பயன் அடைந்த நிகழ்சிகளும் இந்து தர்மம் எங்கும் விபரித்துச் சொல்லப்பட்டிருக்கின்றன.
இந்த மந்திரங்களின் பயன்பாட்டு முறை தானே இன்றைய கம்பியூட்டர் யுகத்தில் Pass Word என்று மாறி இருக்கின்றது! ஏனெனில் சரியான Pass Word தெரிந்தால் தவறானவர்கள் கூட கம்பியூட்டரிலும் சரி தனிப்பட்ட கதவுகளிலும் சரி நுழைந்து விடலாம்! அது போல கெட்டவர்கள் பலர் மந்திரங்களைத் தெரிந்து கொண்டு அவற்றின் சக்தியினால் தீமை செய்த வரலாற்றைப் புராணங்கள் கூறுகின்றன.
எனவே இக்காலப் Pass Word டுகளுக்கும் அக்கால மந்திரங்களுக்கும் செயற்பாட்டில் ஒரு ஒற்றுமை இருக்கின்றது! இரண்டும் அவற்றைச் சரியாக அறிந்திருந்தால் தான் பயன்படுத்திக் கொள்ள முடியும்! அதற்குத் தகுதி தேவையில்லை!
மேலும் ஒரு Pass Word இன் இரகசியத் தன்மை தவறி வேறு ஆட்கள் பயன்படுத்த நேரும்போது புதிய Pass Word ஐ உருவாக்கி அதைத் தடை செய்வது போல சில மந்திரங்களால் தோன்றும் விளைவுகளை வேறு மந்திரங்களைக் கொண்டு சரி செய்த செய்திகளை புராணங்களில் காணலாம்!
எனவே இது பற்றி வேத காலத்திலிருந்து துருவி ஆய்வு செய்தால் இன்றைய கம்பியூட்டர் யுகத்துக்கு முன்னரே Pass Word என்ற கடவுச் சொற்களைப் பயன்படுத்திய சமுதாயம் உலகம் முழுவதும் இருந்ததற்கான ஆதாரங்களை கண்டுபிடிக்கலாம்!
இன்னுமொரு முக்கியமான செய்தி! இன்றைய கம்பியூட்டர்கள் நான்கு ஐந்து அல்லது ஆறு எழுத்துக்களைக் கடவுச் சொல்லாக கேட்பது போல சிவசிவ சிவாய நம சரவணபவ நாராயண நம போன்ற மந்திரங்கள் நான்கு ஐந்து ஆறு எழுத்துக்கள் வரும் சொற்களே!
சிவசிவ என்ற எழுத்துகளுக்கு குறைந்து மந்திரமும் இல்லை! கம்பியூட்டரில் நான்கு எழுத்துக்களுக்கு குறைந்த Pass Word ம் இல்லை!