கொடுப்பதனைக் கொடுங்கள் அது போதும்! போதும்!!
பள்ளியொன்றில் ஆசிரியர் பணியும் வேண்டும்
படித்தவளாய் மனைவிவந்து அமைய வேண்டும்
வெள்ளிகளின் நடுவினிலே நிலவு போல
வெளிக்கிட்டால் அவள்தனியாய்த் தெரிய வேண்டும்
துள்ளிவந்து மடியிருக்க ஆணும் பெண்ணும்
துளிர்த்ததளிர் போலவிரு குழந்தை வேண்டும்
தள்ளியெந்தன் வீட்டருகே பெற்றார் வாழ்ந்து
தவறுகளைத் திருத்தியெம்மைக் காக்க வேண்டும்
வேம்புபனை தென்னையென மரங்கள் சூழ்ந்த
வெளியிலொரு காணிக்குள் கோவில் வேண்டும்
காம்புமுலை கறுத்தபல ஆடும் மாடும்
கன்றுகளும் குட்டிகளும் மேய்தல் வேண்டும்
சாம்பல்நிறக் கோழிகளும் குஞ்சும் இனிய
சங்கீதம் பாடுகின்ற குயிலும் வேண்டும்.
ஆம்பலொடு அல்லிமலர் குவளை பூத்த
அப்படியோர் குளம்கோயில் அருகில் வேண்டும்.
கொல்லாமை கைக்கொண்டு ஒழுகி வாழ்ந்து
கோவிலுக்கு விளக்கேற்றி வணங்க வேண்டும்
செல்லாத இடங்களிலே மட்டும் அல்ல
செல்லுகின்ற இடங்கோபம் தவிர்த்தல் வேண்டும்.
இல்லாத பூமரங்கள் இல்லை என்றே
இல்லத்தைச் சுற்றியொரு சோலை வேண்டும்
நல்லாக இருட்டும்வரை மாலைப் போதில்
நண்பர்கள் வந்திருந்து கதைத்தல் வேண்டும்
எத்தனையோ கனவுகளை இலங்கை மண்ணில்
இருந்தமட்டும் மனம்சுமந்த நானோ இன்று
கத்தைகளாய் காசுபண நோட்டை மட்டும்
காணுமொரு புறநாட்டில் குந்திக் கொண்டு
பத்தைகட்குள் மறைந்திருக்கும் நரிகள் போன்ற
பலமனிதர் கூட்டத்துள் சிக்கி நொந்து
குத்தகைக்கு விட்டுவிட்டேன் வாழ்வை நீங்கள்
கொடுப்பதனைக் கொடுங்களது போதும் என்றே!