இன்றைய தேவை!

இன்றைய தேவை!

ஆலமரக் கிளையதனில் இரண்டு காக்கை
ஆணொன்றும் பெண்ணொன்றும் ஆகக் கூடி
காலமதோ பலவாக குடும்பம் ஆகிக்
கலந்துபெற்ற முட்டைகளைத் தினமும் நீண்ட
கோலமுற்ற நாகமொன்று மரத்தில் ஏறிக்
குடித்துவிடக் குழந்தைகளை இழந்த இரண்டும்
ஓலமிட்டு நண்பனவன் நரியின் காலில்
ஓடிச்சென்று தங்களது துயரைச் சொல்ல

என்னசெய்வ தென்னசெய்வ என்று இராமல்
ஏதேனும் செய்திடனும் நீங்கள்! போங்கள்!
மன்னவனின் தேவியவள் குளிக்கும் போது
மணிநகைகள் நீக்கிவைப்பாள் உடலை விட்டு
மின்னுமொரு வைரநகை தூக்கி வந்து
மேலிருந்து போடுங்கள் பாம்பின் புற்றில்
பின்விளைவு உங்களுக்கே நன்மை யாகும்
பிரச்சனையும் முடிமென்று நரியும் சொல்லும்!

குள்ளநரி சொன்னபடி காக்கை சென்று
கொண்டுவந்து தங்கநகை புற்றில் போட
கள்ளமிதைக் கண்டுகொண்ட காவற் காரர்
கணப்போதில் பாம்பிருந்த பொந்தைச் சூழ்ந்து
தள்ளிநின்று இடித்தார்கள் புற்றை அப்போ
தனித்திருந்த நாகமது சீறிப் பாய
வெள்ளிப்பிடி போட்டபெரு வாளால் பாம்பை
வெட்டிவிட்டார் துண்டுகளாய் இதனைப் போல

வங்கத்துச் சிங்களவர் காக்கை என்றும்
வளம்மிகுந்த சோனியாவை அரசி என்றும்
தங்கநகை அதைநாங்கள் ராஜீவ் என்றும்
தானழிந்த நாகத்தைப் புலிகள் என்றும்
எங்களது ஈழத்தைப் புற்று என்றும்
எண்ணிவிட்டால் உண்மையெலாம் தெரியும் அந்தத்
தொங்குபெரும் வால்நரியார் யாரென்று எண்ணத்
தொடங்கிவிடும் எங்கள்மனம்! அதுதான் தேவை!

இரா.சம்பந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.