|

முளைக்காத பிலாக்கொட்டை!

ஊருக்குப் போய்வந்த போதில் – நானும்

உருசியான பிலாக்கொட்டை சிலகொண்டு வந்தே

நீருக்குள் மண்ணிட்டு நட்டு – அதை

நீண்டநாள் பிரியமாய் கவனமாய்ப் பார்த்தேன்

ஆருக்குச் சொல்லிநான் அழுவேன் – ஒருநாள்

அழுகியே போய்விட்ட அவைகளைக் கண்டேன்.

வேருக்கு நீர்விட்டு வளர்ந்தும் – செத்து

வீணாகிப் போயின பிலாவிதை எல்லாம்

ஆத்திரம் வந்தது எனக்கு – அந்த

ஆண்டவன் மீதில்தான் திட்டியே தீர்த்தேன்

இராத்திரி வந்ததும் ஈசன் – அந்த

இறந்திட்ட விதையுடன் கனவிலே வந்தான்

பாத்திரம் ஒன்றிலே போட்டு – இவற்றினை

பார்த்துநீ கேட்டுக்கொள் கேள்வியை என்றான்

நாத்துக்கள் ஆகாமல் செத்த – அந்த

நன்றியை மறந்த அவையிடம் கேட்டேன்

புலம்பெயர் இடங்களில் எல்லாம் – நீங்கள்

புள்ளையும் குட்டியும் பெறுவதைப் போல

நிலம்பெயர் இடங்களில் எல்லாம் – நாங்கள்

நின்று முளைத்துமே வாழவே மாட்டோம்

பலம்மிகு மானமொன்று உண்டு – சின்னப்

பயிர்முதல் மரம்வரை அறிந்துகொள் மனிதா

குலத்தினை வளர்த்திட நீங்கள் – கொள்கையை

குலைப்பது குற்றமே என்றன விதைகள்!

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.