முளைக்காத பிலாக்கொட்டை!
ஊருக்குப் போய்வந்த போதில் – நானும்
உருசியான பிலாக்கொட்டை சிலகொண்டு வந்தே
நீருக்குள் மண்ணிட்டு நட்டு – அதை
நீண்டநாள் பிரியமாய் கவனமாய்ப் பார்த்தேன்
ஆருக்குச் சொல்லிநான் அழுவேன் – ஒருநாள்
அழுகியே போய்விட்ட அவைகளைக் கண்டேன்.
வேருக்கு நீர்விட்டு வளர்ந்தும் – செத்து
வீணாகிப் போயின பிலாவிதை எல்லாம்
ஆத்திரம் வந்தது எனக்கு – அந்த
ஆண்டவன் மீதில்தான் திட்டியே தீர்த்தேன்
இராத்திரி வந்ததும் ஈசன் – அந்த
இறந்திட்ட விதையுடன் கனவிலே வந்தான்
பாத்திரம் ஒன்றிலே போட்டு – இவற்றினை
பார்த்துநீ கேட்டுக்கொள் கேள்வியை என்றான்
நாத்துக்கள் ஆகாமல் செத்த – அந்த
நன்றியை மறந்த அவையிடம் கேட்டேன்
புலம்பெயர் இடங்களில் எல்லாம் – நீங்கள்
புள்ளையும் குட்டியும் பெறுவதைப் போல
நிலம்பெயர் இடங்களில் எல்லாம் – நாங்கள்
நின்று முளைத்துமே வாழவே மாட்டோம்
பலம்மிகு மானமொன்று உண்டு – சின்னப்
பயிர்முதல் மரம்வரை அறிந்துகொள் மனிதா
குலத்தினை வளர்த்திட நீங்கள் – கொள்கையை
குலைப்பது குற்றமே என்றன விதைகள்!