சேக்கிழாரும் கண்ணதாசனும்!
சேக்கிழார் பாடிய பெரிய புராணத்திலே திருநீலகண்டர் என்று ஒரு பாத்திரம். எப்போதும் இறையுணர்வோடு திருநீல கண்டம் என்று சொல்லிக் கொண்டிருப்பதால் அவருக்கு அந்தப் பெயர்.
அப்படிப்பட்ட அந்த மனிதர் ஒருநாள் வீட்டிலே அழகான மனைவி இருக்க விலைமகள் வீடு சென்று வந்தார்.கோபம் அடைந்த மனைவி அவருடன் பேசுவதையே தவிர்த்து விட்டார்.
திருநீல கண்டர் மனைவியின் கோபத்தைப் போக்க அருகிலே சென்று அன்பான வார்த்தைகள் கூறிச் சமாதானம் செய்ய முயன்ற போது இறைவனின் எந்த பெயர் மீது திருநீல கண்டருக்கு மிகுந்த பற்று இருந்ததோ அதே பெயரைப் பயன்படுத்தி மனைவி எம்மைத் தொடக்கூடாது சத்தியம் செய்து விட்டார்.
திருநீல கண்டத்து இறைவன் மீது ஆணையாக எம்மைத் நீர் தொடக்கூடாது. இது மனைவியின் சத்தியம்.
மூண்ட அப் புலவி தீர்க்க அன்பனார் முன்பு சென்று
பூண்டயங்கு இளமென் சாயல் பொன் கொடி அனையார் தம்மை
வேண்டுவ இரந்து கூறி மெய்யுற அணையும் போதில்
தீண்டுவீர் ஆயின் எம்மைத் திரு நீல கண்டம் என்றார்
மனைவி என்னைத் தொடக்கூடாது என்று சொல்லாமல் எம்மை என்று பன்மையில் குறிப்பிட்டதால் எந்த மாதரையும் இனித் தொடக்கூடாது என்று நினைத்து திருநீலகண்டர் மனைவியை விட்டு விலகித் தள்ளி நின்று கொண்டு இனிமேல் எந்தமாதரையும் மனத்தினால் கூடத் தொட மாட்டேன் என்று தானும் ஒரு சத்தியத்தைச் செய்து கொண்டார்.
ஆதியார் நீல கண்டத்து அளவு தாம் கொண்ட ஆர்வம்
பேதியா ஆணை கேட்ட பெரியவர் பெயர்ந்து நீங்கி
ஏதிலார் போல நோக்கி எம்மை என்றதனால் மற்றை
மாதரார் தமையும் என் தன் மனத்தினும் தீண்டேன் என்றார்.
சேக்கிழாரின் இந்தச் செய்தி பல பெண்களுடன் தவறான நட்புக் கொண்டிருந்த கண்ணதாசன் உள்ளத்தைச் சுட்டெரித்திருக்க வேண்டும். அதனால் தன் சினிமாப் பாடல்களில் அந்தச் சம்பவத்தை எடுத்துக் கூறுவார் கண்ணதாசன்.
முதலாவதாக சவாலே சமாளி என்று ஒரு திரைப்படத்தில் நிலவைப் பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே என்று எழுதத் தொடங்கிய கண்ணதாசன் வெளிப்படையாகவே சொன்ன வார்த்தையும் இரவல் தானதுதிருநீல கண்டரின் மனைவி சொன்னது என்று முடிப்பார்.
அடுத்து வசந்த மாளிகை என்று ஒரு படம். கே.வி. மகாதேவன் இசை. அதிலே புகழ் பெற்ற பாடலான மயக்கம் என்ன என்ற பாடலின் முடிவில் உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான் உள்ளத்தினாலும் தொடமாட்டேன் என்று எழுதினார் கண்ணதாசன்.
இது சேக்கிழாரின் ஏதிலார் போல நோக்கி எம்மை என்றதனால் மற்றை மாதரார் தமையும் என் தன் மனத்தினும் தீண்டேன் என்றார் என்ற பாடலின் மறு வடிவம் ஆகும்.
இரா. சம்பந்தன்