நான் கண்ட கனவு
புதியதொரு படைபுகுந்து இலங்கை மண்ணில்
புரளிமிக்க தலைவர்களைச் சிறையில் தள்ளி
அதிரடியாய் நாட்டுமக்கள் செவிகள் கேட்க
அதன்தலைவர் பேசுகிறார் இன்று மாலை
கதியறியாக் கலம்போல கலங்கி வாழும்
கனசனங்கள் மனங்குளிர என்ற செய்தி
உதிரமதைச் சூடாக்க ஓடிச் சென்று
உட்கார்ந்தேன் தொலைக்காட்சிப் பெட்டி முன்னால்
மூன்றுபத்து வயதிருக்கும் முகத்தைப் பார்த்தால்
முழுப்புரட்சி செய்தவொரு பெருமை இல்லை
ஊன்றிவைத்த கொடியில்லை கையில் கூட
உயிர்பறிக்கும் கொலைக்கருவி எதுவும் இல்லை
சான்றுசொல்லிப் பொய்யுரைக்க முன்னால் ஏதும்
சரித்திரத்தின் குறிப்புகளும் இல்லை இல்லை
தோன்றிவிட்டான் வான்கடவுள் மனிதன் ஆகத்
துயர்துடைத்து ஆட்சிசெய்ய அடடா என்றேன்
இருவார்த்தை சிங்களத்தில் இரண்டு வார்த்தை
இனியதமிழ் மொழிநடையில் இவற்றின் பின்னால்
உருமாற்றி ஆங்கிலத்தில் அன்புப் பேச்சு
உண்மையிலே பேசியதன் சாரம் கேட்பீர்
பெருவாக்குத் தேர்தலினி எமக்கு வேண்டாம்
பிரச்சனைகள் அதனாலே இனிமேல் இங்கே
தெரிவாகும் ஜனதிபதி சிங்களவர் என்றால்
தேர்வாகும் பிரதமராய் தமிழர் ஆவார்
எத்துறையை எடுத்தாலும் இதுதான் சட்டம்
இலங்கையிலே இருமொழிகள் ஆட்சி செய்யும்
கத்துவதை நிறுத்திவிட்டு மொழிகள் மூன்றும்
கல்லுங்கள் இல்லையேல் வேலை போகும்
பெத்தபிள்ளை அப்பன்மகன் அண்ணன் தம்பி
பெரும்பதவி அதிகாரம் செய்த காலம்
செத்துவிட்டது இலங்கையினை மாறி மாறிச்
சிங்களமும் தமிழருந்தான் ஆட்சி செய்வோம்
கத்திநின்றேன் வாழ்கவென்றேன் கைகள் தட்டிக்
கட்டிலே கட்டியவள் கிடந்து கொண்டு
எத்தியொரு உதைவிட்டாள் கனவா என்றாள்
எழுந்துநின்று நாற்புறமும் திரும்பிப் பார்த்தேன்
மெத்தையிலே கிடந்துகொண்டு சிரித்தாள் எந்தன்
மேனகையாள் என்மனைவி நேரம் காட்டி
சத்தியமாய் நடுச்சாமம் அதிலும் கண்ட
சம்பவத்தைக் கனவென்றாள் நொருங்கிப் போனேன்!
இரா.சம்பந்தன்