அம்மா!

கூரைக் கிடுகேறிக் கூவிநின்ற கோழியது

குதித்து நாய்மிதிக்க நாய்துள்ளி எழுந்தோட

பூவரசு இலைமறைவில் ஒளித்திருந்த காகமது

காவென்று கத்திக் கனநேரம் சிரித்திருக்க

காரை படிந்தசுவர்ப் பக்கத்தில் கிழிபாயில்

கட்டில் காலருகில் என்னருகே படுத்திருந்த

தேரைக் குஞ்செனவே தேய்வடைந்த என்னம்மா

தீயில் உடல்கறுத்த கரிபோட்டுப் பல்துலக்கி

நீரை முகந்தெளித்து முந்தானை முகந்துடைத்து

நேராக மூரிமட்டை நின்றசுவர் அடுப்படிக்குள்

சாரைப் பாம்புவந்து தட்டிவிட்டுப் போனபல

சாமான்கள் சரிசெய்து கங்குமட்டை அடுப்பெரித்து

ஊரை வெளிச்சமிட உதிப்பவனை முந்திவந்து

உறக்கம் கலைத்தெனக்கு ஊத்தித்தரும் தேத்தண்ணீர்

ஆரைப் பற்றியுமோர் அயற்கதைகள் கதைக்காது

ஐயா அடிக்கவந்ததால் அக்கதையும் சொல்லாது

கோரைப் புல்போன்ற குலைந்த தலைமுடித்து

குங்குமமும் திருநீறும் சிலவேளை சந்தனமும்

ஏரிழுக்கும் வயல்மாடு என்னம்மா தானணிந்து

ஏதும் தருவேனா என்றெண்ணிக் காத்திருக்கும்

ஐந்தோ பத்தோ அன்றுநான் போட்டதுக்குள்

ஆக்கி உருசியாக அனைவருக்கும் எடுத்துவைக்கும்

படம்பார்த்து அறியாது படிப்பதற்கும் தெரியாது

நடமாடும் காலினிலே செருப்பணிய வசதியில்லை

தாலியில்லா வெறுங்கழுத்து காப்பறியா அதன்கைகள்

கட்டும் சேலைகளில் அதுதைத்த நூலதிகம்

கடகம் உழவாரம் புல்லறுக்கும் கத்தியொன்று

சொத்தென்று அதிகமில்லை இவைதவிர அம்மாக்கு

எங்களுக்காய் வாழ்ந்து என்றோ மறைந்தற்கு

பலகடமை செய்யவில்லைப் பாவிநான் வாழ்ந்தவரை

பாக்கு விருப்பம் பனங்கட்டி அதுவிரும்பும்

நாக்கு சுவைபாக்க நாலுகறி அதுநினைக்கும்

நானேதும் கொடுத்ததில்லை நன்றியுடன் நடந்ததில்லை

கோடு கிழித்துவைத்துக் குரல்வளையைக் குறைத்துவைத்துக்

கேடுகெட்ட ஐயாவும் கிடைத்ததனால் அடித்திருத்தி

ஊறவைத்த பிண்ணாக்காய் உள்ளமதை உதிரவைத்து

சாறெடுத்துப் பிழிந்தாலும் சத்தியமாய் காசையல்ல

காசையல்ல காசையல்ல கனிவான பாசமதைக்

காலமெலாம் எதிர்பார்த்துக் காத்திருந்து போனவளை

இனியென்று காண்பேனோ இவைகளைநான் செய்துவிட

தனிநின்று புலம்புவதே என்வாழ்க்கை ஆகிடுமோ!

கைநிறையக் காசிருக்கு கதைப்பதற்குப் போனிருக்கு

ஐயோ வானகத்துப் போன்நம்பர் கிடைக்காதோ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.