காதலும் சாதலும்! (எனது கவிதைகள்)
சாறுகொண்ட காரணத்தால் கரும்பு சாகும்
சக்கரையின் ஆசையினால் எறும்பு சாகும்
வீறுகொண்டு சீறுவதால் பாம்பு சாகும்
வெற்றிலையின் கூட்டணியால் பாக்கும் சாகும்
ஊறுகின்ற கிணறுகளில் பாசி சாகும்
உருளுகின்ற சில்லுகளால் தெருவும் சாகும்
நீறுபட்ட போர்வையினால் தணலும் சாகும்
நிதானமற்ற காதலென்றும் அதுபோல் ஆகும்!
கல்மறைந்த தவளையெலாம் வாயால் சாகும்
கனிகொடுக்கும் காரணத்தால் வாழை சாகும்
நெல்வயலின் எலிதங்கள் திருட்டால் சாகும்
நித்திலத்தின் தாயானால் சிப்பி சாகும்
வில்வளைந்தால் அதைச்சேர்ந்த அம்பு சாகும்
வீழந்துவிட்டால் குரங்கினத்துக் குட்டி சாகும்
நல்மனத்துத் தோன்றாத காதல் சாகும்
நன்றியில்லா மானுடரின் நட்பைப் போன்றே!
நெய்விளக்கால் சிலவேளை இருளும் சாகும்
நெடுங்காற்றால் இருளகற்றும் விளக்கும் சாகும்
மெய்யுரைக்காச் சாட்சியினால் வழக்கும் சாகும்
மேலுலக ஆசையினால் சுகங்கள் சாகும்
பொய்யுரைத்தால் மானுடரின் மதிப்பு சாகும்
பூவுதிர்ந்தால் செடிகொடிகள் வனப்புச் சாகும்
வெய்யிலிலே அகப்பட்ட புழுவும் சாகும்
விவேகமற்ற காதலது சாவைப் போன்றே!
இரா.சம்பந்தன்