கடவுள் எப்போது தேவைப்படுகின்றான்?
அரச சபையிலே துகில் உரியப்பட்டபோது முதலில் தன் பலத்திலே நம்பிக்கை வைத்து தன் சேலையைக் கைகளால் இறுகப் பற்றிக் கொண்டு போராடிப் பார்த்தாள் பாஞ்சாலி! தன் பலம் பயன்படாது போக அடுத்துத் தனக்குத் துணை செய்யக் கூடிய கணவன்மாரிடம் தன்னைக் காப்பாற்றுமாறு வேண்டினாள் பாஞ்சாலி.
அவர்களால் அது முடியாது என்றதும் சபையில் இருந்த பெரியோர்களால் அது முடியும் என்று நினைத்து அவர்களைப் பார்த்து தன்னைப் பாதுகாக்கும்படி கெஞ்சினாள்! அதுவும் நிறைவேறாது போன பின்புதான் அதுவரை பிடித்திருந்த சேலையைக் கைவிட்டு விட்டு உச்சிமீது கைகளைக் குவித்து கோவிந்தா கோவிந்தா என்று கண்ணனை நினைத்தாள்!
கடவுளைக் கடைசியாகத் தான் நினைத்தாள்! முதலிலேயே தெய்வத்தை எண்ணியிருந்தால் அவளின் அவமானம் குறைக்கப்பட்டிருக்கும். இவள் அதைச் செய்யவில்லை.பாஞ்சாலி மட்டுமல்ல.
நாங்களும் நண்பர்களை நம்பி நீதி மன்றத்தை நம்பி டாக்டரை நம்பி எல்லாரும் கைவிட்ட பிற்பாடுதான் கடவுளை நினைக்கின்றோம்! உதவி கேட்டு நிற்கின்றோம். எங்கே எமது புற நம்பிக்கைகள் எல்லாம் பயன்படாது போகின்றதோ அங்கே தான் கடவுள் எமக்குத் தேவைப்படுகின்றான்.
(தவத்திரு ஹரிதாஸ் கிரி சுவாமிகளின் பிரசங்கத்தில் இருந்து)