புட்பக விமானத்தின் டில்லிப் பயணம்!
இலங்கையில் யுத்தத்தை முடித்து ஆட்சி மாற்றத்தையும் ஏற்படுத்தி விட்டு டில்லி திரும்ப அவசரப்பட்டான் இராமன். இராவணனை அழித்து விட்டுத் தான் ஆட்சியில் அமர்த்திய விபீடனனிடம் இன்றே அயோத்தி போக ஏதாவது வாகனம் இருக்குமா? என்று கேட்டான். நீ இன்றே போகக் கூடியதாக எங்கள் அண்ணனின் புட்பக விமானம் இருக்கிறது என்றான் விபீடனன்.
ஈண்டு போக ஒரு ஊர்தி உண்டோ என இன்றே உண்டு விமானம் உண்டென விபீடனன் தொழுதான் என்பார் கம்பர்! எனவே இலங்கையில் இருந்து சில மணித்தியாலங்களில் டில்லியை அடையக் கூடிய விமானம் அன்று இருந்திருக்கின்றது.
அந்த விமானம் இராமனை ஏற்ற வந்த போது ஆயிரம் சூரியன்கள் சேர்ந்தது போல ஒளிவீசிக் கொண்டும் ஆயிரம் கோடி மணிகளின் ஒலி இரைச்சலோடும் வந்தது. ஆயிரம் அருக்கர்(சூரியர்) விண்டது ஆம் என விசும்பிடைத் திசையெலாம் விளங்க கண்டை(மணி) ஆயிரம் கோடிகள் ஒலிப்புற என்று அதன் இயந்திரம் சிந்திய நெருப்பையும் சத்தத்தையும் இன்றைய சுப்பர் சொனிக் விமானங்களுக்கு இணையாகக் காட்டுவார் கம்பர்.
இனி அந்த விமானத்திலே இந்தியாவில் இருந்து வந்து போரிலே கலந்து கொண்டு எஞ்சிய படைகளும் ஒரு கடற்படைப் பிரிவும் ஏற்றப்பட்டு ஒரு பகுதியில் அமர வைக்கப்படுகின்றது. ஒரு பகுதியில் இருத்தப் படுவதால் இன்னும் ஆட்களை ஏற்ற இடம் இருக்கின்றது. எனவே இன்றைய விண்கலங்களை விடப் பெரியதாக அது இருந்திருக்கின்றது. இலங்கை மன்னொடு கடற்படையும் துன்னினார் புட்பக மிசை ஒரு சூழல் இது கம்பர் தரும் செய்யுள் அடிகள்
விமானத்தில் நிறைய ஆட்கள்! போர்வீரர்கள் என்றதனால் எஞ்சிய ஆயுதத் தளபாடங்கள்! மிகவும் பாரம்! ஆனால் விமானம் சிரமப்படவில்லை! ஒரு சிறு தடையும் இல்லாமல் வானத்தில் தாவி எழுகின்றது. எப்படி என்றால்; மேற்கிலே மறைத்து கிழக்கிலே தோன்றும் சூரியன் தென் திசையில் இருந்து வடதிசைக்கு சார்பான பாதையிலே செல்வது போலப் பறக்கத் தொடங்கியது. இதை ஏன் கம்பர் சொல்ல வேண்டும். உலகம் உருண்டை வடிவானது! விமானம் டில்லிக்கு இந்த வழியால்தான் பறக்க வேண்டும் என்று அந்த விமான ஓட்டிகளுக்குத் துல்லியமாகத் தெரிந்திருக்கின்றது.
இலங்கையின் விமான ஓடுபாதையின் திசை பற்றி கம்பர் இந்த இடத்திலே சொல்லுவார். கிழக்குத் திசையாக மேலெழுந்த விமானம் தெற்குத் திசையாக இலங்கையைக் கடந்து கொண்டு பறக்கின்றது. விமானம் வலம் கிளர் கீழை வாயில் வர என்றும் நமன் தன் வாயில் கலந்திட என்றும் குறிப்பார் கம்பர். கீழை வாயில் கிழக்கு வாயில் என்றும் நமன் வாயில் இயமனின் தெற்குத் திசை என்றும் குறிப்பது அக்கால வழக்கமாகும்.
குணதிசை மறைந்து பின்னர் குணதிசை உதயம் செய்வான்
வடதிசை அயனம் உன்னி வருவதே கடுப்ப விமானம்
தடையொரு சிறிது இன்றாகித் தாவிவான் படரும் வேளை
படையமை விழியாட்கு ஐயன் இவையிவை பகரல் உற்றான்
விமானம் வானிலே பறக்க இராமன் சீதைக்கு கீழே மண்ணுலகைக் காட்டி விளக்கிச் செல்கிறான். அதிலும் அதிசயம் என்ன என்றால் இராமன் சுட்டிக் காட்டும் இடங்களைத் இன்றும் டில்லிக்கு விமானப் பயணம் செய்வோர் கீழே காண முடியும். அதைக் கம்பர் மிகவும் நேர்த்தியாக வான்பாதையாகக் காட்டுவார்.
இலங்கையில் இருந்து இந்தியா போவார் சேதுவைத் தானே முதலில் கடக்க வேண்டும் விமானத்தில்! மாருதி உனது பெற்றி சொன்னபின் வானரேசர் தொகுத்தது இச்சேது கண்டாய்! என்று இராமன் சீதையிடம் குரங்குப் படைகள் கட்டிய சேது கால்வாயைக் காட்டினான் என்பார் கம்பர்.
அடுத்து விமானப் பாதையில் பொதிகை மலையும் திருவேங்கட மலையும் காட்டப்படுகின்றது. தமிழ் முனி வைகும் இயல்தரு குன்றம் என்றும் புறத்து உயர்ந்து தோன்றும் அது திகழ் அனந்த வெற்பு என்றும் தமிழக எல்லை கடக்கப் படுவதைக் காட்டுவார் கம்பர் அடுத்து கிடகிந்தை!
கிடகிந்தை வாலி அழிந்த இடம்! இன்று டில்லி செல்லும் விமானம் திருவனந்த புரத்திலோ அல்லது சென்னையிலோ தங்கிச் செல்வது போல புட்பக விமானம் கிட்கிந்தையில் இறக்கப்பட்டு வானர மகளிரும் பொருட்களும்; ஏற்றிக் கொண்டு பறப்பைத் தொடர்கிறது. அதாவது இன்று போல அன்றும் இந்தியாவின் தென்பாகத்தில் விமானம் நிறத்தப்பட்டு பயணிகள் ஏற்றப்படுகின்றனர்.
மங்கலம் முதலாய் உள்ள மரபினின் கலன்கள் யாவும்
அங்கவர் கொணர்ந்து பெண்மைக்கு அரசியைத் தொழுது சூழ
நங்கையும் உவந்து வேறோர் நவையிலை இனிமற்று என்றாள்
பொங்கிய விமானம் தானும் மனமென எழுந்து போன!
கிட்கிந்தையில் இருந்து பறக்கத் தொடங்கிய விமானம் கோதாவரியைக் கடக்கின்றது. இன்றைய நக்சலைட்டுகளின் கோட்டையான தண்டகார் எனப்படும் தண்டகாரிணிய வனத்திலே பரத்துவாசர் ஆச்சிரமத்துக்கு அருகே ஒரு தரையிறக்கம்! வேள்வியார் தண்டகம் அதுதான் என்று குறிப்பிடுவார் கம்பர்.
இறுதியாக விமானம் அயோத்தி வான்பரப்பில் பிரவேசிக்கின்றது. அப்போதும் மறக்காமல் கம்பர் ஆயிரம் சூரியர் ஒன்று சேர்ந்த வெளிச்சம் தெரிந்தது என்று சொல்லுவார். அது விமானம் இறங்குவதற்கான வெளிச்சமென்றால் ஆயிரம் சூரியன்கள் தேவையில்லை. உண்மையில் அது விமானம் வெளியேற்றிய நெருப்பின் ஒளி என்று அறிவியலுக்குப் பொருத்தமாகக் கொள்ள வேண்டும்!
அன்னதோர் அளவையில் விசும்பில் ஆயிரம்
துன்னிருங் கதிரவர் தோன்றினால் என
பொன்னணிப் புட்பக பொருவில் விமானமும்
மன்னவர்க்கு அரசனும் வந்து தோன்றினார்.
இன்றைய விஞ்ஞான மரபுகளுக்கு மாறுபாடு இல்லாத வகையில் இராவணனின் புட்பக விமானம் இருந்திருக்கிறது. இதில் மந்திரம் மாயம் எதுவும் இல்லை. காரணம் மந்திரத்தால் இயங்குவது என்றால் இராவணன் மரணத்துக்குப் பின்பு பிறரால் அது இயக்கப்படவில்லை என்று கம்பர் பாடியிருப்பார்.
சீதையைக் கவர இராவணனால் பயன்படுத்தப்பட்ட விமானம் பின்பு அதே சீதையை ஏற்றிக் கொண்டு அயோத்திக்கு வந்தது. ஒரு வீரன் பயன் படுத்திய போர்த் தளபாடம் ஒன்று அவனை அழித்த பின்பு எதிரிகளால் கையாளப்படும் சோகம் அன்றும் நிகழந்திருக்கின்றது. அரசியல் எவ்வளவு கொடுமையானது என்பதற்கு புட்பக விமானத்தின் மாறுபட்ட இந்தப் பறப்பும் ஒரு உதாரணமாகும்.