பயமும் பயங்கரமும்!
இராமாயணத்திலே மிகவும் பலசாலியான பாத்திரங்களில் வாலியும் ஒருவன். அவனை இராமன் மறைந்து நின்று கொன்றான் என்பது வரலாற்று விவாதப் பொருளாக இன்றும் எடுத்துப் பேசப் படுகின்றது.
வாலி என்றவுடனே பலரும் மறைந்து நின்று கொல்லப்பட்டது பற்றிய நினைப்புடனே நின்று விடுகின்றார்கள். ஆனால் வாலி என்ற பாத்திரம் மூலமாக கம்பன் பெயர் தெரியாத கொடிய ஆயுதம் ஒன்றைக் காட்டுகிறான்.
இராமனின் அம்பு வாலியைத் தாக்குகின்றது. எதிர்பாராத தாக்குதலால் வாலி நிலை குலைந்து கீழே விழுந்து விடுகிறான். மார்பில் ஏறிய ஆயுதம் மார்பைத் துளைத்துக் கொண்டு மறுபுறம் போக எத்தனிக்கின்றது.
எதிரியான தம்பியை கைவிட்டு தன் மார்பைத் துளைத்துக் கொண்டு ஓட நினைக்கும் ஏதோ ஒன்றை இறுக்கமாக அந்த மரண வேளையிலும் வாலியின் கைகள் பிடித்துக் கொள்கின்றன.
வேதனை ஒரு புறம்! ஆனால் வாலிக்கு ஒரு சந்தேகம்! அம்பு போலத்தான் வந்து மார்பில் ஏறியிருக்கிறது. ஆனால் இது அம்பு அல்ல. என்ன இது? இதை நான் பார்க்க வெண்டும்!
கடைசி வரைக்கும் இந்த ஆயுதத்தை வில்லிலே இருந்து மட்டும் அனுப்பி இருக்க முடியாது. வில்லிலே எய்யக் கூடிய ஆயுதம் அல்ல இது. முனிவர்கள் மந்திரத்தால் அனுப்பி இருப்பார்களோ என்று நினைப்பான் வாலி. வந்து தாக்கிய ஆயுத்திலே பற்கள் இருக்கின்றன. அவை நெஞ்சைக் கல்லுகின்றன. அதாவது தேங்காய் துருவுவது போல மார்பைத் துருவுகின்றன.
வில்லினால் துரப்ப அரிது இவ் வெம் சரம் என வியக்கும்
சொல்லினால் நெடு முனிவரோ தூண்டினார் என்னும்
பல்லினால் பறிப்புறும் பலகாலும் தன் உரத்தைக்
கல்லி ஆர்ப்பொடும் பறிக்கும் அப்பகழியைக் கண்டான்
படித்தவர்கள் பலர் அம்பு தன் பல்லினால் வாலி உடலைக் கல்லிற்று என்று பொருள் எடுக்காமல் வாலி தன் பல்லால் அம்பை வெளியே எடுக்கப் பார்த்தான் என்று பொருள் சொல்கிறார்கள். அது தவறு. வாலியைக் குரங்காகச் சித்தரிக்க பக்திமான்கள் சொல்லும் அறிவியலுக்கு அப்பாற்பட்ட உரைகள் பரவசத்தை மட்டுமே ஏற்படுத்த முடியும்! படிப்பினையைத் தந்துவிடாது!
கையாலும் கால்களாலும் வாலாலும் சுற்றிப் பிடித்து அந்த ஆயுதத்தை வெளியே இழுத்து எடுக்கிறான். தன் முயற்சியில் வென்று அந்த அம்பை வெளியே எடுத்து விடுகிறான். அதிலே இராமன் என்று அச்சிடப்பட்டுள்ளது.
இராமாயணத்திலே இராமன் செலுத்திய அம்பை யாரும் தடுத்து நிறுத்தியது கிடையாது. எந்தப்பாட்டாக இருந்தாலும் இராமன் அம்பு உடலைத் துளைத்துக் கொண்டு போயிற்று என்றுதான் கம்பன் முடிப்பான்.
கல்லொக்கும் நெஞ்சில்பட்டு அப்புறம் கழன்றுகல்லாப்
புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருளெனப் போயிற்றன்றே
என்று தாடகை வதத்திலும்
உயிர்பருகி புறம்பெயர்ந்து போயிற்றே இராகவன்தன் புனித வாளி என்று
இராவணன் வதையிலும் கம்பன் சொல்வதை இதற்கு உதாரணம் காட்டலாம். ஆனால் எல்லோரையும் துளைத்த இராமனின் அம்பு வாலி விடயத்தில் துளைத்துக் கொண்டு ஓட முடியவில்லை. வாலியின் கையிலே அகப்பட்டு விட்டது.
இது அந்த ஆயுத்துக்கு ஏற்பட்ட முதல் தோல்வி. ஏனென்றால் அது வாலிக்குக் கிடைக்காமல் போயிருந்தால் தன்னைக் கொண்றவனைத் தெரியாமலே வாலி இறந்திருப்பான். ஆயுதம் பிடிபட்டு இராமன் பிடிபட்டான். எனவே இது இராவணன் முதலியோரைக் கொன்ற இராமனின் வழமையான ஆயுதம் அல்ல. இது முதலாவது சந்தேகம்!
இனித் தான் கைப்பற்றிய ஆயதத்தை முறிக்கப் பார்க்கிறான் வாலி. முடியவில்லை. அம்பென்றால் முறிய வேண்டும். வாலியின் பலத்துக்கு. முறிப்பேன் என்னினும் முறிவது அன்று ஆம் என்றான் கம்பன். இது முறியாத அந்த ஆயுதத்தைப் பற்றிய இரண்டாவது சந்தேகம்!
அடுத்து வாலியால் தன் மார்பை விட்டு எடுக்கப்பட்ட ஆயுதம் அவன் இராமனோடு வாக்குவாதப்பட்டு சமாதானம் அடைந்து கைவிட்ட போது திரும்பவும் வாலியைத் துளைத்துக் கொண்டு போனது என்று முடிப்பான் கம்பன்.
வில்லிலே இருந்து செலுத்தப்பட்ட அம்புக்கு ஒரு வேகம் இருக்கும். அது வாலியால் பிடிக்கப்பட்டு விட்டால் அதன் வேகம் பூச்சியம் ஆகின்றது. பின்பு வாலியின் மார்பைத் துளைக்கும் வேகம் அந்த அம்புக்கு எங்கிருந்து வருகின்றது? இது முன்றாவது சந்தேகம்!
வாலி வதம் முழுவதும் அம்பை எய்தது செலுத்தியது என்ற வார்த்தைகளைத் தவிர்த்து ஏவியது என்கிறானே கம்பன் ஏன்? எய்வதற்கும் ஏவுவதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. எய்யப்படுவது இலக்கை அழிப்பது எய்தவன் திறமையால்! ஏவப்படுவது இலக்கை அழிப்பது கட்டளைக் கடமையால்!
எனவே மறைந்து நின்று ஏவியது முறிக்க முடியாமல் போனது பற்களால் சுற்றி மார்பைத் துளைத்தது வெளியே எடுக்கப்பட்டு திரும்பவும் தாக்குதல் நிகழ்த்தியது என்று பொருத்திப் பார்க்கும் போது இராமன் வாலி மீது தாக்குதல் நிகழ்த்தியது இன்றைய உலகின் செல் அல்லது லோஞ்சர் என்ற இரண்டில் ஒன்றிற்கு இணையான தாக்குதலாக இருக்க வேண்டும்! இது வில்லிலே இருந்து ஏவக் கூடியது அல்ல என்று வாலி சொல்வதற்கு அர்த்தம் உண்டு!
வாலிமேல் செலுத்தப்பட்ட ஆயுதம் தோள் வரைக்கும் நாணோடு இழுக்கப்பட்டு ஏவப்பட்டதாம்! தோள் உறுத்து இராகவன் துரந்தான் என்று கம்பன் அறிவியலுக்கு கிட்ட வருகின்றான். ஆம்! இராமன் தோளிலே வைத்து தாக்கியிருக்கிறான்! தோளிலே வைத்துத் தாக்கும் ஆயுதங்கள் தானே இன்று பாவிக்கப் படுகின்றன! அறிஞர்களே இதை ஆய்வு செய்யுங்கள்!
வாலியைப் பற்றி அவன் வீரத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு ஒரு வேளை தன் அம்பு அவனைத் துளைக்காது போனால் என்ற அச்சத்தில் இப்படிப்பட்ட கொடிய ஆயுதத்தை இராமன் செலுத்தியிருக்கிறான். அதை வாலி பிடித்தபோது அதன் தாக்குதல் பகுதி ஏதோ வாலியின் கைகளில் சிக்கி தாமதம் அடைந்திருக்கிறது. திரும்பவும் வாலி கை விட்டதும் அது வெடித்திருக்கின்றது. அப்படிக் கொள்வதே இன்றைய அறிவியலுக்குப் பொருந்தும்!
பயம் அதிகமாகும் போது பாவிக்கப்படும் ஆயுதங்களும் பயங்கரமானவையாக இருக்கும்! அங்கே முதலில் கொல்லப்படுவது மனித நேயம் என்பதற்கு வாலி வதம் மட்டுமல்ல முள்ளிவாய்க்கால் கூட ஒரு உதாரணமாகும்!