திருக்குறள் காட்டும் புலனாய்வுத் துறை
ஒரு அரசுக்கு ஆக்கமும் கேடும் ஏற்படுத்துவது அதனுடைய உளவுத் துறையாகும். ஆதனால் உலக நாடுகள் எல்லாம் புலனாய்வுத் துறையை மிகவும் எச்சரிக்கையாகக் கையாள்கின்றன. பெரும் பொருளை அதற்காக அள்ளி இறைக்கின்றன. இராணுவம் பொருளாதாரம் விஞ்ஞானம் போன்ற அனைத்திலும் உலக அரசுகள் ஒன்றையொன்று வேவு பார்த்து தம்மைப் பாதுகாத்துக் கொள்கின்றன. புலனாய்வுத் துறையின் தகவல்களை வைத்துத் தமது வெளியுறவுக் கொள்கைகளை செப்பனிட்டுக் கொள்கின்றன.
இத்தகைய புலனாய்வுத் துறையின் கட்டமைப்பு செயற்பாடு பராமரிப்புப் பற்றி இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே திருவள்ளுவர் அழகாக அல்ல ஆழமாகச் சொல்லியிருக்கிறார். உளவுத் துறையினரை ஒற்றர்கள் என்றும் அவர்களைக் கட்டியாளும் கடினமான வேலையை ஒற்றாடல் என்றும் குறிப்பிட்டார் வள்ளுவர். அவர் சொன்ன கருத்துக்களே இன்றைக்கும் எதுவித மாற்றமின்றி உலகத்தால் நடைமுறைப் படுத்தப்படுகின்றன சொன்னவரைத் தெரியாமல்!
அரசாங்கம் ஒன்றுக்கு உலகத்தைப் பார்க்கும் கண்ணாக இருப்பது உளவுத்துறை என்றார் முதல் குறளிலேயே திருவள்ளுவர். அவர் கூற்றை மெய்ப்பிப்பது போல அண்மையில் தன்னால் தேடப்பட்ட ஒருவரை பாகிஸ்தானில் உளவுத் துறை என்ற கண்ணாலே பார்த்து நடபடிக்கை எடுத்தது அமெரிக்கா.
எல்லோருக்கும் நாள் தோறும் நிகழ்வனவற்றை எல்லாம் ஒரு அரசு உளவுத்துறை மூலமாக விரைந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றார் அவர். இதைச் செய்யத் தெரியாத அரசாங்கம் வெற்றிபெற வேறு வழி கிடையாது என்று மூன்றாவது குறளிலே சொன்னவரும் அவரே!.
புலனாய்வுத் துறை மூலம் யாரைக் கண்காணிக்க வேண்டும் என்றால் கொடுத்த வேலையைச் செய்பவர்கள் தன் சுற்றத்தவர்கள் அல்லது சுற்றியிருப்பவர்கள் எதிரிகள் என்று யாரையும் தப்பவிடாமல் எல்லோரையும் கண்காணிக்க வேண்டும் என்றது திருக்குறள்.
வினைசெய்வார் தன்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று.
இனி உளவு வேலைக்கு மதத் தலைவர்கள் போன்ற கோலம் தான் மிகவும் பொருத்தமானது என்பது வள்ளுவர் முடிபு. அவர்களால் தான் கடினமான இடங்களில் கூட இலகுவாக புக முடியும். இன்றைய உலகில் பல அரசுகளுக்கு மதபீடங்களும் மத குருக்களும் தான் உளவாளிகளாக இருக்கின்றமை வள்ளுவரின் அரசியல் தெளிவிற்கு சிறந்த சான்றாகும்.
துறந்தார் படிவத்தர் ஆகி இறந்து ஆராய்ந்து
என்செயினும் சோர்வு இலது ஒற்று.
உளவாளி பிடிபட்டால் என்ன சித்திரவதை செய்தாலும் தான் யாரென்பதைக் காட்டிக் கொடுக்கக் கூடாது. ஒன்றும் வாய்திறந்து சொல்லக்கூடாது என்கிறார் வள்ளுவர்.
அது மட்டுமல்ல தான் கண்காணிக்க வேண்டியவர்களைப் பற்றிய செய்திகளை அவர்களுக்கு வேண்டியவர்களை எப்படியாவது வளைத்துப் பிடித்து அறிந்து அதிலும் சந்தேகம் இல்லாமல் உண்மை பொய்களை கண்டறியக் கூடியவனே திறமையான உளவாளி என்பார் வள்ளுவர்.
ஏனெனில் கிடைக்கும் செய்தியில் உளவாளிக்கு குழப்பம் ஏற்பட்டால் அரசினால் தெளிவான நடபடிக்கையை விரைந்து எடுக்க முடியாமல் போய்விடும் என்பது என்பது வள்ளுவர் எண்ணம்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக வள்ளுவர் இரண்டு விடயங்களை உலகம் வியக்கும் வண்ணம் சொன்னார். முதலாவது அரசுகள் எந்த ஒரு உளவாளியையம் முழுமையாக நம்பிவிடக்கூடாது. அதுவும் ஆபத்திலே தான் சிலவேளை முடியும் என்பார் அவர்.
ஒரு உளவாளி தரும் செய்தியைக் கேட்டுக் கொண்டு அதை இன்னொரு உளவாளியையும் அனுப்பி ஆராய்ந்து அறிந்து முடிவெடுக்க வேண்டும் என்று சொன்ன ஒரு நூல் திருக்குறள். ஒரு வேளை உளவாளிகள் விலை போய்விடுவாhகள் என்று கூட வள்ளுவர் நினைத்திருக்கலாம். இன்றைய உலகில் அது நடந்தும் இருக்கிறது.
ஒற்று ஒற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்.
அடுத்ததாக வள்ளுவர் சொன்ன முக்கியமான கருத்து ஒரு உளவாளிக்கு இன்னொரு உளவாளியைத் தெரிய விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்பதாகும். ஒற்று ஒற்று உணராமை ஆள்க என்றார் அவர்.
உளவாளிக்கு சம்பளம் கொடுப்பது அடுத்தவருக்குத் தெரியக் கூடாது. தெரிந்தால் அரசாங்கம் என்ன காரணத்துக்காக அப்படிப் பணம் கொடுக்கிறது? பணம் பெறும் அளவுக்கு என்ன தொடர்பு? என்ற கேள்விகள் எழுந்து உண்மைகள் எல்லாம் வெளிவந்து விடும். பின்பு அந்த உளவாளியைப் பயன்படுத்த முடியாமல் போய்விடும் என்பார் வள்ளுவர்.
சிறப்பு அறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்
புறப்படுத்தான் ஆகும் மறை
புலனாய்வுப் பணி செய்வாரை புலனாய்வு செய்ய வேண்டும் என்று சொன்ன ஒரே ஒரு தமிழ் இலக்கியம் திருக்குறளாகத்தான் இருக்க முடியும்! எத்தனையோ அரசியல் சித்தாந்தங்களைப் படித்த நாம் வள்ளுவரின் ஒற்றாடலைப் படித்திருந்தால் பெருமளவு துன்பங்களைத் தவிர்த்திருக்கக் கூடும். என்ன செய்வது?