வேலும் கோலும்!
அன்றொரு நாள் தமிழ்ச் சமுதாயத்தில் புதியதொரு நாகரிகம் புயலாக எழுந்தது! முயற்சி மறைந்து புகழ்ச்சி மலர்ந்தது! அன்பு மறைந்து ஆதிக்கம் வேர்விட்டது! கற்பு நலிந்து தப்பு நிகழ்ந்தது! அறம் சரிந்து அவலங்கள் முளைத்தன! தொண்டனாக விளங்கிய மன்னன் அதிபதியாக மாறத் தொடங்கினான்!
இந்தக் கால கட்டத்திலே தான் தனி மனிதனாக நின்று வள்ளுவன் குறள் முழக்கம் செய்தான். ஒரு நாட்டை ஒரு அரசனை ஒரு மந்திரியை ஒரு இல்லறத்தானை அவன் மiவியை ஒரு தொழிலாளியை ஒரு துறவியை ஒரு காதலனை அவன் காதலியை ஒரு போர் வீரனை ஒரு கொடியவனை ஒரு குடிகாரனை ஒரு படிக்காதவனை என்று சமுதாயத்தில் ஒவ்வொருவரையும் பொறுக்கி எடுத்து யாரையும் தப்பவிடாது குறை கண்டு கண்டித்தான்! நல்லது கண்டு போற்றினான்!
அந்த வள்ளுவன் ஒரு முறை காட்டு வழியாகப் பயணப்பட நேர்ந்தது. தெரு விளக்கும் வாகன வசதியும் அற்ற காலத்தில் குன்றும் குழியும் குறுகி வழி நடந்தான் அவன் தன் நண்பருடன்! ஓரிடத்தில் பிரயாணிகளை எல்லாம் கள்வர்கள் சூழ்ந்து கொண்டார்கள்! வள்ளுவனும் அகப்பட்டுக் கொண்டான்!
கூரிய வேல்களை வைத்திருந்த அந்தக் கள்வர்கள் தங்கள் ஆயுதங்களைக் காட்டி பயணிகளிடம் இருந்த பொருட்களையும் பணத்தையும் பறித்துக் கொண்டு வழியனுப்பினார்கள்! மக்காள்! உள்ளத்தால் உள்ளலும் தீது! என்று அச் செயலைக் கண்டித்தான் வள்ளுவன்.
வியப்போடு அவனைப் பார்த்தார்கள் திருடர்கள். வள்ளுவனிடம் இருந்தது யாராலும் திருட முடியாத அறிவு மட்டுமே! அவனையும் கள்வர்கள் உருவுகண்டு விடுவித்தார்கள். வள்ளுவனும் நடந்தான்!
காடு முடிந்து நாடு வந்தது. மக்கள் கள்வர் பயம் தெளிந்து நடந்தார்கள்! அரசிடம் நடந்ததை முறையிடுவோம் என்றார்கள்! அப்போது முழவு என்னும் பறை அதிர்ந்தது! அதைத் தொடர்ந்து அரசாங்க வேண்டுகோள் ஒன்று விடுக்கப்பட்டது மக்களுக்கு!
நாட்டிலே மழை இன்மையால் வரட்சி தலைவிரித்து ஆடுகிறது! அதனால் குடிமக்கள் அனைவரும் தங்களால் முடிந்த பொருள் உதவியை அரசுக்கு வழங்கி உதவ வேண்டும் என்று மன்னர் கேட்டுக் கொள்கிறார் என்றது அந்த அறிவிப்பு!
இது என்ன அறிவிப்பு? மழை இல்லாவிட்டால் குளங்களையும் ஆறுகளையும் பயன்படுத்த வேண்டியது தானே! மக்களிடம் என்ன அதிக பொருள் கேட்பது? அரசாட்சியா இது? அலுத்துக் கொண்டான் வள்ளுவன்!
நண்பர் சொன்னார். வள்ளுவரே! மக்களிடம் பொருள் வேண்டி எவ்வளவு பணிந்து போகிறது இந்த அரசு. வற்புறுத்திக் கேட்கவில்லையே! மக்களை வாழ வைக்க மன்றாட்டமாகக் கேட்கும் அரசுக்கு நாம் எம்மால் இயன்றதை உதவத்தானே வேண்டும் இல்லையா? திருடர்கள் எம் பொருளை விட்டிருந்தால் கூட இந்த அரசுக்குக் கொடுத்திருக்கலாம்! என்ன செய்வது?
வள்ளுவர் நண்பரைப் பார்த்துச் சிரித்தார்! இந்த அரசு எவ்வளவு இதமாக பதமாக மன்றாட்டமாக உதவி கேட்டாலும் காட்டிலே எங்களிடம் பொருள் பறித்த கள்வருக்கும் இந்த அரசுக்கும் இடையிலே செயலில் வேறுபாடு ஒன்றும் இல்லை!
அவன் காட்டிலே ஆயுதத்தை வைத்துக்கொண்டு பொருளைக் கேட்டான். இவன் நாட்டிலே ஆட்சியை வைத்துக் கொண்டு பொருள் கேட்கிறான்! ஆட்சி அதிகாரமும் மக்களை அச்சுறுத்தும் ஒரு ஆயுதம் தான்! இந்த இரண்டு பேருமே கள்வர் தான்! இரண்டு பேருக்கும் மக்கள் பயந்து தான் பொருள் கொடுக்கிறார்கள்! கொடுக்காவிட்டால் ஏற்படும் விளைவு அவர்களுக்குத் தெரியும்! என்றார் வள்ளுவர்
வேலொடு நின்றான் இடு என்றது போலும்
கோலொடு நின்றான் இரவு
கையிலே வேல் வைத்துக் கொண்டு நிற்கும் கள்வன் வழிப் போக்கரிடம் வைத்திருப்பதைப் போடு என்று கேட்பது போலத்தான் அரசு அதிகாரத்தை வைத்திருக்கும் அரசனும் குடிமக்களை பொருள் கேட்டு நிற்பது ஆகும்!
வள்ளுவள் சொன்ன இந்தச் செய்தியை சிந்தித்துப் பாருங்கள்! கொடுங்கோன்மை என்ற அதிகாரத்திலே இரண்டாவது பாட்டாக இந்தச் சம்பவத்தை வள்ளுவர் சொல்லியிருக்கிறார். இன்று நேற்றல்ல இரண்டாயிரம் வருடங்கள் போய்விட்டன! வள்ளுவனுடைய சிந்தனைக்கு இன்றும் அர்த்தம் உண்டு!