நாற்று ஒன்று தேவை!

நேர்வழியில் அரசியலைக் கொண்டு செல்ல

நினைக்கின்ற போதினிலே செல்வா இல்லை

ஏர்முனைபோல் தமிழ்மனத்தை உழவு செய்ய

எம்மிடையே இன்றந்த அமுதர் இல்லை

ஊர்முழுதும் படைதிரட்டி யுத்தம் செய்ய

உறுதிமிகும் புலிமறவர் அவரும் இல்லை

கார்முகில்போல் கைப்பொருளைச் செலவு செய்ய

கருணைமிகு மானிப்பாய்த் தருமர் இல்லை

 

முள்வேலி உடைத்தெங்கள் உறவைக் காக்க

முன்னாலே ஜி.ஜியும் இன்று இல்லை

உள்ளாலே மறைமுகமாய் உதவக் கூட

உயிரோடு இந்திராவும் அங்கே இல்லை

தள்ளாத வயதினிலும் இருந்தே எம்மைத்

தாங்கிடவே எம்.ஜிஆர் அவரும் இல்ல

துள்ளாமல் பொதிசுமந்த பெரியோர் பல்லோர்

துணையாக எம்மருகில் இல்லை ஐயோ!

 

துரும்பெல்லாம் ஒன்றாகக் கூடிச் சேர்ந்து

தூணாக முடியாது இதுவே உண்மை!

இரும்பான கைவேண்டும் இல்லை யானால்

இப்படியே புலம்புகின்ற நிலையே மிஞ்சும்!

கரும்பாக இனித்திடவும் வேண்டும் பின்பு

கசந்திடவும் கதைபேசத் தெரிய வேண்டும்!

அரும்பாடு பட்டேனும் அந்த நாட்டில்

அகதிகளை காப்பாற்ற வேண்டும் நாங்கள்!

 

போர்செய்து தோற்றிட்டோம் எலியைப் போல

பொறிவைத்துப் பிடித்திட்டார் எங்கள் வீரம்

சீர்செய்யப் படவேண்டும் அதுவே அன்றிச்

சேர்ந்திங்கே ஐநாமுன் ஒன்றும் இல்லை!

கூர்செய்த மதிவேண்டும் கொள்கை ஒன்று

கொண்டுவரப் படவேண்டும் அதனை இங்கே

யார்செய்து தந்தாலும் ஏற்க வேண்டும்

யாரிவர்கள் என்பதனைத் தூரப் போட்டு!

 

எதிரணியில் போர்செய்து எம்மை வென்ற

எதிரிகளைப் போற்றிடனும்! அந்த வேளை

உதிரமெலாம் சூடாகி உரிய காலம்

உதிக்கட்டும் பார்த்திடுவோம் என்ற எண்ணம்

அதிரவைக்க வேண்டுமெங்கள் அவல நெஞ்சை

அப்படித்தான் முன்னோhகள் வாழ்ந்தார் வானக்

கதிரவனும் சிலநேரம் குடைக்குத் தோற்பான்

கதிரதற்குச் சிலவேளை குடையும் தோற்கும்!

 

தோற்றிட்டோம் தோற்றிட்டோம் என்றே நெஞ்சம்

துடித்திடனும் பலநாடு ஒன்று கூடித்

மாற்றிற்று போர்முடிவை என்று பேசும்

மதிகெட்டோர் இருக்கட்டும் எதிரி பக்கம்

கூற்றுக்கு ஒப்பான நூறுநாடு குவியட்டும்

கொள்கையுடன் எதிர்நின்று மடிவோம் என்ற

நாற்றொன்று தேவையப்பா இன்று வேறு

நமக்கேதும் தேவையில்லை இப்போ அங்கே!

 

 

 

 

 

 

 

 

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.