|

பரந்தெழுந்த சமயப் பகை!

தமிழ் மொழியிலே காணப்படும் இலக்கண நூல்கள் எல்லாம் சமணரால் செய்யப்பட்டவை. அதிகமான நீதி நூல்கள் அவர்கள் உடையவை. திருக்குறள் சமண சமயத்துக்குச் சொந்தமில்லை என்று நிறுவ முடியவில்லை. தொல்காப்பியம் அவர்களுடையது என்பதை மறுக்க முடியவில்லை. நிகண்டுகள் அகராதிகள் எல்லாம் அவர்களால் உருவாக்கப்பட்டவை.

அப்படி இருந்தும் அடியார்களாலும் ஆழ்வார்களாலும் எதிக்கப்பட்டார்கள் சமணர்கள். காரணம் இந்துக் கடவுளரை சமணர்கள் இகழ்ந்தார்கள். திருஞானசம்பந்தர் சமணரின் கொள்கைகளைத் தெரிந்து கொண்டு எதிர்த்தார்.

இந்த உலகம் நிலையில்லாதது. உடம்பு நிலையில்லாதது. இளமை நிலையற்றது. செல்வம் நிலையில்லாதது. எனவே இல்லறத்தை ஒதுக்கி விட்டு துறவு பூணுங்கள். துறவிகள் அல்லாதவர்க்கு துன்பம் நீங்காது என்ற சமணக் கொள்கையைத் தன் தேவாரத்திலேயே தாக்கினார் சம்பந்தர்.

பிறவியால் வருவன கேடு உள ஆதலால், பெரிய இன்பத்
துறவியார்க்கு அல்லது துன்பம் நீங்காது எனத் தூங்கினாயே?
மறவல் நீ! மார்க்கமே நண்ணினாய்; தீர்த்த நீர் மல்கு சென்னி
அறவன் ஆரூர் தொழுது உய்யல் ஆம்; மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே!

தந்தை தாய் சகோதரர்கள் பிள்ளைகள் மனைவி என்ற பந்தத்தை நீக்காதவர்களுக்கு உய்வு இல்லை என்று சொலகிறார்களே சமணர்கள். அதை எல்லாம் தூரப் போட்டுவிட்டு திருவாரூர் இறைவனைக் கும்பிடுங்கள் துன்பங்களை வெல்லலாம் என்று மக்களைத் திசை திருப்பினார் சம்பந்தர்.

தந்தை, தாய், தன்னுடன் தோன்றினார், புத்திரர், தாரம், என்னும்
பந்தம் நீங்காதவர்க்கு, உய்ந்துபோக்கு இல் எனப் பற்றினாயே?
வெந்த நீறு ஆடியார், ஆதியார், சோதியார், வேத கீதர்,
எந்தை ஆரூர் தொழுது உய்யல் ஆம்; மையல் கொண்டு அஞ்சல், நெஞ்சே!

இந்தத் தேவாரங்கள் எல்லாம் கொள்கை ரீதியான மத எதிர்ப்பாகும். சமணம் சொன்ன தத்துவங்களை எல்லாம் மறுத்து சாத்வீக நெறியில் அந்த மதத்தை எதிர்க்கும் நாகரீகமாகும். அதில் யாரும் தவறு சொல்ல முடியாது.

ஆனால் வைணவ வாதியான தொண்டரடிப் பொடியாழ்வார் பார்த்தார். இந்தச் சமணர்கள் இந்துக்கள் யாரைக் கண்டாலும் வாதம் செய்வோம் வா என்று நிக்கின்றார்கள். இந்துமத வெறுப்பை மட்டும் மனத்திலே வைத்துக் கொண்டு எங்கள் தெய்வத்தையே இகழ்கின்றார்கள். பொறுப்பில்லாமல் இவர்கள் இப்படி நடந்து கொள்ளுவது ஒருவித மன நோய். இவர்களுடைய தலையை அறுத்தால் தான் சரி. இனி நாங்கள் அதைத்தான் செய்ய வேண்டும் என்று கோபப்பட்டார் ஆழ்வார்.

வெறுப்பொடு சமணர் முண்டர்
விதி இல் சாக்கியர்கள் நின்பால்
பொறுப்பு அரியனகள் பேசில்
போவதே நோயது ஆகி
குறிப்பு எனக்கு அடையும் ஆகில்
கூடுமேல் தலையை ஆங்கே
அறுப்பதே கருமம் கண்டாய்
அரங்க மா நகருளானே

பக்தி இலக்கியத்தில் மத வன்முறை தலை விரித்து ஆடுகின்றது. அதன் விளைவு பாண்டிய மன்னனைக் கொண்டு எண்ணாயிரம் சமணரை கழு ஊசியிலே ஏற்றிக் கொன்றார் சம்பந்தர். சமணர்கள் குறைந்தவர்களா?

சம்பந்தருக்குக் கல்யாணம். உற்றார் உறவினர் நண்பர்களோடு சேர்ந்து திருநல்லூர் கோவில் திருப்பெரு மணத்துக்கு வருகின்றார் அவர். உயர்ந்த பிராமண சாதி. பாண்டிய ராணி மங்கையர்க்கரசியின் அரசியல் செல்வாக்கும் இருந்தது. கொடி குடை சிவிகை என்று அமர்க்களமான கல்யாணம்.

திருமணம் முடிந்து ஓம குண்டத்தை வலம் வந்த போது கோவில் கதவைப் பூட்டிவிட்டு சமணர்கள் நெருப்பு வைத்தார்கள். கோவில் எரிந்து சாம்பல் ஆனது. சம்பந்தர் மனைவி பெற்றார் மாமன் நம்பியாண்டார் நம்பி குடும்பம் என்று யாருமே தப்ப வழியில்லாது எரிந்து சாம்பலானார்கள்.

ஒத்துக் கொள்ளுமா இந்து மதம்? இறைவன் அருளால் சோதி தோன்றியது. சம்பந்தர் மனைவியுடன் சோதியில் கலந்தார் என்று வரலாற்றை முடித்துக் கொண்டது.

அணி முத்தின் சிவிகை முதல் அணி தாங்கிச் சென்றேர்கள்
மணி முத்த மாலை புனை மடவார் மங்கலம் பெருகும்
பணி முற்றும் எடுத்தார்கள் பரிசனங்கள் வினைப்பாசம்
துணிவித்த உணர்வினர் ஆய்த் தொழுது உடன் புக்கு ஒடுங்கினார்

ஆறு வகைச் சமயத்தில் அரும் தவரும் அடியவரும்
கூறு மறை முனிவர்களும் கும்பிட வந்து அணைந்தாரும்
வேறு திரு அருளினால் வீடு பெற வந்தாரும்
ஈறில் பெரும் சேதியின் உள் எல்லாரும் புக்கு அதற்பின்

காதியைக் கைப்பற்றிக் கொண்டு வலம் செய்து அருளித்
தீது அகற்ற வந்து அருளும் திருஞான சம்பந்தர்
நாதன் எழில் வளர் சோதி நண்ணி அதன் உள்புகுவார்
போத நிலை முடிந்த வழிப் புக்கு ஒன்றி உடன் ஆனார்

( பெரிய புராணம் – திருஞான சம்பந்தர் புராணம் – வம்பறா வரிவண்டுச் சருக்கம்)

மதங்களின் பெயரால் நடைபெறும் வன்முறைகளக்குப் பின்னால் அரசியல் உண்டு என்பதற்கு சம்பந்தர் வரலாறு நல்ல உதாரணமாகும்!

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.