பாரதியார் பாடலும் பதுங்கும் முரன்பாடும்!
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞராக விளங்குபவர் பாரதியார். பண்டிதத் தமிழைப் பாமரரும் புரியும் வண்ணம் எளிமையாக்கித் தந்தவர் அவர். ஓளவைக்குப் பின்பு எல்லோரும் விளங்கிக் கொள்ளக் கூடிய பாடல்கள் அவருடையது. அறியாமையும் மூடப் பழக்கவழக்கங்களும் புதராக மண்ணிக் கிடந்த அக்கால மனித மனங்களை கவிதை ஏர் கொண்டு உழுது பண்படுத்திய பெரியவர் அவர்.
அப்படிப்பட்ட பாரதியாரின் கவிதைகளில் சில முன்னுக்குப் பின் முரண்பட்டுக் காணப்படுகின்றன. எடுத்த எடுப்பிலேயே ஒன்றைச் சொல்லி விடலாம். அறிவே தெய்வம் என்று பாட வருகின்ற போது அவர் ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று கூறி அலையும் அறிவிலிகாள் பல்லாயிரம் அறிவொன்றே தெய்வமுண்டாமெனல் கேளீரோ என்று பாடினார். பின்பு தானே முருகன் கண்ணன் சரஸ்வதி காளி என்று தனித்தனியாக தெய்வங்களைப் பொறுக்கியெடுத்துப் பாடினார். இது ஏனென்று தெரியவில்லை.
அவரின் புகழ் பெற்ற கருத்துக்களில் ஒன்று சாதிகள் இல்லையடி பாப்பா குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்ற பாப்பாப் பாட்டு வரிகளாகும். இதை ஏற்றுக் கொண்டு நாம் அவரின் கண்ணன் பாட்டிலே கண்ணன் என் காதலன் என்ற பகுதிக்குச் செல்கின்றோம். கண்ணன் மன நிலையைத் தங்கமே தங்கம் கண்டுவர வேண்டுமடி தங்கமே தங்கம் என்று தொடங்கிய அவர் இடையிலே இப்படியும் பாடுவார்.
சோர மிழைத்திடையர் பெண்களுடனே — அவன்
சூழ்ச்சித் திறமைபல காட்டுவ தெல்லாம்
வீர மறக்குலத்து மாதரிடத்தே
வேண்டிய தில்லையென்று சொல்லி விடடீ.
விளையாட்டுகள் காட்டி ஏமாற்ற நாங்கள் ஆயர் குலத்திலே பிறந்த இடையர் பெண்கள் இல்லை. நாங்கள் மறவர் குலத்திலே பிறந்த வீர மகளீர். எங்களோடு இந்த வேலையெல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிடடி என்பது இந்தப் பாட்டின் பொருளாகும். இங்கே குலங்களுக்கிடையே உயர்வு தாழ்வை தானே கொண்டு வருகின்றார் பாரதியார்.
மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொழுத்துவோம் என்பது எல்லோருக்கும்; தெரிந்த அவரின் பாடல் வரிகள். அப்படிப் பாடிய பாரதியார் பாஞ்சாலி சபதத்தில் தானே அதற்கு எதிராகப் பேசுகின்றார்.
நீண்ட கருங்குழலை நீசன் கரம்பற்றி
முன்னிழுத்துச் சென்றான். வழிநெடுக மொய்த்தவராய்
என்ன கொடுமையிதுவென்று பார்த்திருந்தார்.
ஊரவர்தங் கீழ்மை உரைக்குந் தரமாமோ?
வீரமிலா நாய்கள். விலங்காம் இளவரசன்
தன்னை மிதித்துத் தராதலத்திற் போக்கியே
பொன்னையவள் அந்தப் புரத்தினிலே சேர்க்காமல்,
நெட்டை மரங்களென நின்று புலம்பினார்.
பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ?
பேரழகு கொண்ட பெருந்தவத்து நாயகியைச்
சீரழியக் கூந்தல் சிதையக் கவர்ந்துபோய்க்
கேடுற்ற மன்னரறங் கெட்ட சபைதனிலே
கூடுதலும் அங்கேபோய்க் கோவென் றலறினாள்.
(பாஞ்சாலி சபதம் – அடிமைச் சருக்கம்)
இங்கே துச்சாதனன் பாஞ்சாலியின் தலை மயிரைப் பிடித்து இழுத்து வந்ததை எண்ணித் தனக்குள் கொதித்துப் போன பாரதியார் ஊhர்ச் சனத்தை இப்படிப் பேசுகின்றார். அறிவில்லாத மிருகம் போன்ற துச்சாதனன் ஒரு பெண்ணை இப்படி வதைக்கிறானே அவனைப் பிடித்து மிதித்து உழக்கி அந்தப் பெண்ணை அந்தப்புரத்திலே திரும்பவும் கொண்டுபோய்ச் சேர்த்து விடாமல் நாய்களே நீண்ட மரம் போல நின்று புலம்புகிறீர்களே உங்களுடைய வெறும் புலம்பலாலே அவளுக்கு என்ன பலன் கிடைத்துவிடும் என்று கேட்டார் பாரதியார்.
இங்கே பிரயோசனமில்லாத புலம்பலைப் பெட்டைப் புலம்பல் என்று குறிப்பிட்டார் அவர். அறிவாளிகளும் கல்விமான்களும் இதற்கு வேறு சமாதானங்கள் வைத்திருக்கக் கூடும். ஆனால் எதையும் வெளிப்படையாகப் பேசும் பாரதியார் இங்கே சொன்னது பெண்கள் போல அழுதால் என்ன பிரயோசனம் என்பது தான். இது மிகப் பெரிய பெண்ணிழிவு வார்த்தையாகும்.
இங்கே நாம் இன்னொரு விடயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். திருவள்ளுவரும் ஒளவையாரும் தங்கள் பாடல்களிலே எந்த இடத்திலும் நாய் என்ற ஒரு வார்த்தையைப் பயன்படுத்தியது கிடையாது. நாயிற் கடையாய் கிடந்த அடியேற்கு தாயில் சிறந்த தயவான தத்துவனே என்று மணிவாசகர் நாயைத் தொட்டிருக்கின்றார். நாயெனத் தகுதியன்றே காமனும் நாமுமெல்லாம் என்று கம்பன் தொட்டிருக்கின்றான். ஆனால் இந்த இருவரும் தொட்டது இல்லை.
பாரதியார் உயிர்களிடத்து அன்பு வேண்டும் என்று பாடிவிட்டு சனங்களைப் பார்த்து நாய்களே என்கின்றார். இதை விடக் கொடுமை என்னவென்றால் விலங்களுக்குள்ளேயே தன் பாடல்களில் குல ஏற்றத் தாழ்வைக் கொண்டுவருகின்றார் பாரதியார்.
கங்கை மைந்தனங்கே — நெஞ்சம்
கனலுறத்து டித்தான்;
பொங்கு வெஞ்சினத்தால் — அரசர்
புகை யுயிர்த்திருந்தார்;
அங்கம் நொந்து விட்டான், — விதுரன்
அவல மெய்தி விட்டான்,
சிங்க மைந்தை நாய்கள் — கொல்லுஞ்
செய்தி காண லுற்றே.
(பாஞ்சாலி சபதம் – அடிமைச் சருக்கம்)
இந்தப் பாட்டிலே பாண்டவர் ஐவரையும் ஐந்து சிங்கங்களுக்கு உவமை ஆக்கித் துரியோதனன் போன்றாரை நாய்கள் ஆக்கி ஐந்து சிங்கங்களை நாய்கள் கொல்லும் செயலைப் பார்த்து விதுரன் அவலம் அடைந்தான் என்று கருத்து வெளியிட்டார் பாரதியார். பாண்டவரை துரியோதனன் நியாயமின்றி வதைப்பதிலே எமக்கும் தான் உடன்பாடு இல்லை. ஆனால் பாரதியார் அதற்குத் தந்த உவமை ஏற்புடையதல்ல. கவிதையால் எம் மனத்தை ஆளும் பாரதியார் நாய்களை இழிவுப் பொருளாக உவமை பண்ணியிருக்கக் கூடாது என்பது ஒரு ஆதங்கமே ஒழியக் குற்றச்சாட்டு அல்ல. .பாரதியியாரின் கவிதைகளுக்கும் அவரின் மனப் போக்கிற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. வாழ்க பாரதியார்!