ஈழத்தில் நடுகல்லும் இலக்கியத்தில் நடுகல்லும்!
சங்க இலக்கியங்களிலே எதுக்காகப் போரிட்டார்கள் என்ற செய்திகள் அதிகம் இல்லை. ஆனால் போர் பற்றிய செய்திகளும் அதனால் ஏற்பட்ட சாவுகளும் அப்படி இறந்தவர்களுக்கு செய்யப்பட்ட மரியாதைகளும் அந்த மரியாதையை நிலை நிறுத்த அமைக்கப்பட்ட நடுகற்களும் என்று வேறுபட்ட பல செய்திகள் மட்டும் அதிகமாக எங்கும் பரவிக் கிடக்கின்றன.
சங்க காலத் தமிழர் போர் செய்து மடிந்து நடுகல்லாய் எழுந்தது போலவே ஈழ நாட்டிலும் தமிழர்கள் தாமும் போர் செய்து வீழ்ந்து நடுகல்லாய் பல இடங்களில் எழுந்து நிற்கின்றார்கள். அன்றைய நடுகற்கள் இன்று கல்லறைகள் என்று பேசப்படுகின்றன. ஆனால் நடுகற்கள் பற்றிய முன்னோர் செய்திகளை எழுதி இன்று ஆகப்போவது ஒன்றுமில்லை.
எனினும் நடுகற்களுக்கு அவர்கள் செய்தவை என்ன இன்று நாம் கல்லறைகளுக்கு செய்யத் தவறியவை என்ன அதற்கான காரணங்கள் எவை என்பதை எல்லாம் நாம் அறிந்து கொண்டால் இக்காலத் தமிழ் உலகின் நாடக மனப்பான்மை வெளிச்சததுக்கு வரக்கூடும்.
இன்று போல சங்க காலத்திலும் வீரர்களின் பெயரும் அவர்கள் செய்த வீரச் செயலும் நடுகற்களிலே எழுதப்பட்டன என்பதனை மறவர் பெயரும் பீடும் எழுதி அதர்தொறும் பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல் என்ற அகநானூறு செய்யுள் வரிகளால் அறிய முடியும். இன்று போல அன்றும் பல வீரர்களுக்கு நிரையாக பல நடுகற்கள் இருந்ததை அதே அகநானூறு நல்லிசை நிறுத்த நாணுடை மறவர் நிரைநிலை நடுகல் என்று சிறப்பித்துக் கூறும்.
அன்று கொத்தாக மடிந்த போர் வீரர்களின் பெயர்களை பெண் யானை படுத்திருப்பது போன்ற ஒரு பெரிய கல்லிலே ஒன்றாகச் செதுக்கி வைத்தார்கள் சங்கத் தமிழர். இயற்கையான கல்லை நடுகல் போல மாற்றியமைத்து அதனை மஞ்சள் நீர் தெளித்துக் கழுவி கூரிய அம்பினாலே ஆத்தி மரத்துப் பட்டைகளை அறுத்து நாராக்கி அதிலே சிவந்த கரந்தைப் பூக்களைத் தொடுத்து மாலை கட்டி அணிவித்தார்கள். வணங்கி மரியாதை செய்தார்கள்.
பிடிமடிந் தன்ன குறும்பொறை மருங்கின்
நட்ட போலும் நடாஅ நெடுங்கல்
அகலிடங் குயின்ற பல்பெயர் மண்ணி
நறுவிரை மஞ்சள் ஈர்ம்புறம் பொலிய
அம்புகொண் டறுத்த ஆர்நார் உரிவையிற்
செம்பூங் கரந்தை புனைந்த கண்ணி
வரிவண் டார்ப்பச் சூட்டிக் கழற்கால்
இளையர்பதிப் பெயரும் அருஞ்சுரம் இறந்தோர்
தைஇ நின்ற தண்பெயல் கடைநாள்
( சங்க இலக்கியம் – அகநானூறு 269)
காலம் கடந்தாலும் பல தலை முறைகளுக்கு தங்கள் வாழ்வியலைக் கடத்த இப்படியான கற்படுக்கைகளில் செய்திகளைச் சேமித்து வைக்க வேண்டும் என்று அந்தத் தமிழன் நினைத்தான். அதனால் அவை பாதுகாப்பாக எமக்குக் கிடைத்தன. ஆனால் நாமோ ஏராளமான பாறைகள் கடலோரங்களில் தமிழர் தேசத்தில் இருந்தும் அழியும் சீமெந்து கொண்டு பெயர் பொறித்து அலங்கார வளைவுகள் உயர்த்தி எதிரிகள் காண்பதற்கும் அழிப்பதுக்கும் சிரமமற்ற முறையிலே கல்லறைகளைச் செய்து கொடுத்தோம்.
ஓசைப்படாமல் மாவீரர் வரலாறுகளை எல்லாம் கற்பாறைகளிலே செதுக்கி கடல் நீருக்குள் உருட்டி விட்டிருப்போமேயானால் ஆயிரம் வருடங்கள் கடந்தும் எமது சந்ததி எங்கள் துன்பியல் வாழ்வின் தன்மைகளை எலலாம் தெரிந்து கொண்டிருக்கும். அப்படிச் செய்து வையுங்கள் என்று நினைவூட்டிச் சென்றவை சங்க இலக்கியங்கள் நாம் செய்யவில்லை. விளைவு சில இடங்களில் மாவீரர் இல்லங்கள் இருந்த தடயங்கள் நாம் வாழும் காலத்திலேயே அழிக்கப்பட்டு விட்டன.
கருங்கல்லை தொட்டி போலப் பொழிந்து அதற்குள்ளே ஈமம் எனப்படும் உடலையும் வைத்து அந்த உடல் பற்றிய செய்திகளையும் குறிப்பிட்டு கிளிநொச்சி போன்ற நகரப்பகுதிகளில் அல்ல மனித சஞ்சாரமற்ற அணில்கள் விளையாடும் மூங்கில் காட்டுப் பகுதியில் கொண்டு சென்று மறைத்துப் புதைத்தார்கள் அன்றைய தமிழர். வெளியே சுவடு தெரியாமல் கூழாங்கற்களைப் கொண்டு மறைத்தார்கள் எமக்காக. எம்மை அவை பக்குவமாகச் சேர்ந்துவிட வேண்டும் என்ற பதைப்போடு.
காடுகால் யாத்த நீடுமரச் சோலை
விழைவெளில் ஆடுங் கழைவளர் நனந்தலை
வெண்ணுனை யம்பின் விசையிட வீழ்ந்தோர்
எண்ணுவரம் பறியா உவலிடு பதுக்கை
(அகநானூறு 109)
இதையெல்லாம் படித்தவன் வாய்திறந்து சொன்னதுமில்லை. அதையெல்லாம் கேட்டு உணர்ந்து கொள்ளும் எண்ணமும் எமக்கு இருந்ததில்லை. எங்கள் வீழ்ச்சியை விட எங்கள் வாழ்வியல் சுவட்டின் தடயங்களின் வீழ்ச்சியே மிகப்பெரிய வரலாற்று வீழ்ச்சியென்பதை நாம் அறியத் தவறிவிடடோம். தமிழ்நாட்டு வரலாற்றில் ஏதும் அறியமுடியாத களப்பிரரின் முன்னூறு ஆண்டுகள் போல ஈழ வரலாற்றிலும் முப்பது ஆண்டுகள் நிகழ்ந்தவை என்னவென்று எதிர்காலச் சமுதாயம் தெரிந்து கொள்ளாமலேயே போகட்டும்! அதுவும் நல்லது தான்!
இப்படி எழுதும் போது ஏன் எத்தனையோ நூல்களும் பிற சாதனங்களும் தானே எல்லாவற்றையும் பதிவுசெய்திருக்கின்றன என்று சிலர் நினைக்கக் கூடும். ஒரு கடற் பிரளயம் வந்தால் இவையெல்லாம் சுவடு தெரியாமல் மறைந்து விடும் ஆனால் கற்பாறைகளோ அனைத்தையும் தாங்கிப் பிடித்துக் கொண்டு அடுத்த சந்ததியின் வரவுக்காகக் காத்திருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.