கண்ணதாசனின் புலமையும் எம்.ஜி.ஆர் மடமையும்!
கண்ணதாசனின் புலமையும் எம்.ஜி.ஆர் மடமையும்!
எம்.ஜி.ஆர் வாழ்க்கையில் அவர் மலையாளியா இல்லைத் தமிழனா என்ற ஒரு கேள்வி இருந்தது. காலத்துக்கக் காலம் அந்தக் கேள்வி பெரிதாக எழுவதும் பின்பு அடங்கி விடுவதும் இயல்பு. தன்னை மலையாளி என்று கருதுபவர்களை எம்.ஜி.ஆர் வெறுத்தார். மறைமுகமாகத் தண்டித்தார். கடும் பகைவர்களாகவும் எண்ணினார். அவரை அரசியலில் எதிர்த்தவர்கள் இந்தப்பிரச்சனையைத் தான் முன்வைத்து விமர்ச்சித்தனர்.
ஆனால் கவிஞர் கண்ணதாசன் பல ஆண்டுகளுக்கு முன்பே அதே கேள்வியை நடிகை சரோஜாதேவியைக் கொண்டு எம்.ஜி.ஆரின் திரைப்படம் ஒன்றிலேயே பாடலாகக் கேட்டுவிட்டார். அது கடைசி வரைக்கும் எம.ஜி.ஆரின் அறிவுக்கு எட்டாமலே போய்விட்டது.
பணத்தோட்டம்(1963) என்ற படத்திலே சௌந்தரராஜன் சுசீலா பாடிய பேசுவது கிளியா பெண்ணரசி மொழியா என்ற கண்ணதாசன் பாடலிலே அந்தக் கேள்வி வருகின்றது. பாடுவது கவியா இல்லைப் பாரி வள்ளல் மகனா சேரனுக்கு உறவா? செந்தமிழர் நிலவா? என்று கேட்டார் கண்ணதாசன்.
சேரர்கள் ஆண்டநாடு மலையாள நாடு. எனவே நீங்கள் மலையாளிகளுக்கு உறவா? மலையாளியா? இல்லைத் செந்தமிழ் நாட்டு நிலவா அதாவது தமிழனா? என்று கேட்டார் கண்ணதாசன். இதை எம்.ஜி.ஆர் உணர்ந்து கொள்ளவே இல்லை. பணத்தோட்டம் காலத்தில் இந்தப் பிரச்சனை இல்லாத காரணத்தால் அவர் இதைப் பெரிது படுத்தாமல் விட்டாரோ தெரியாது. ஆனால் அன்று கூட இது தெரிந்திருந்தால் பாடலை அனுமதித்திருக்க மாட்டார் எம்.ஜி.ஆர் அவர்கள். ஏனோ அவர் அறிவுக்கு இது எட்டாமல் போய்விட்டது.
ஒருவேளை எட்டியிருந்தால் கவிஞர் வேண்டும் என்று அந்த அர்த்தத்தில் நான் எழுதவில்லை என்று சொன்னாலும் கூட எம்.ஜி.ஆர் விடமாட்டார். திரைத்துறையிலே அவர் எதிர்ப்பைச் சம்பாதித்துக்கொண்ட யாரும் முன்னுக்கு வந்தது இல்லை என்பது கவிஞருக்கும் தெரியும். ஆனால் எம.ஜி. ஆருக்கு இது தெரிந்தால் தொழில் ரீதியாக எந்தப் பெரிய சரிவைச் சந்திக்க வெண்டும் என்று தெரிந்து கொண்டும் எழுதினார் கவிஞர். எப்போதும் கவிஞர் கவிஞர் தான்!