முகநூலும் – நானும்!
உற்றமனை கிழத்தியவள் வாழ்வும் இன்று
உறங்குவதும் சீரியலும் என்றே ஓடும்
பெற்றமகன் மகள்வாழ்வும் கல்வி வேலைப்
பிரச்சனைகள் அதிலேதான் தினமும் போகும்
மற்றவர்கள் யாரென்று திரும்பிப் பார்த்து
மகிழ்வோடு உறவினர்கள் வீடு சென்றால்
சற்றுமெதிர் பார்க்காத கொழுவல் வந்து
சாவரையும் கதைக்காத பகையே ஆகும்
கொண்டபெரும் வேலையிலோ பலதும் பத்தும்
கூடவிருப் பவர்களுடன் பேசும் ஆசை
மண்டைதனில் நுளையாத மொழியால் ஐயோ
மறைந்தோடி ஒளித்துவிட தமிழில் பேசி
இரண்டொருநாள் நண்பருடன் கூட்டம் போட்டு
இருந்திடலாம் எனவெண்ணித் திரும்பிப் பார்த்தால்
கண்டவுடன் ஒருகதையும் காணாப் போதில்
கனகதையும் முளைத்துவிடும் என்ன செய்ய?
நாலுசுவர் வேலிகளின் நடுவே நின்று
நாள்தோறும் தனிமையிலே வாடும் நெஞ்சம்
காலுவைத்து நடந்துவரும் கவலை விட்டுக்
கதிரையிலே போயிருந்து முகநூல் பார்த்தால்
வாலுவைத்த குரங்கெனவே தினமும் துள்ளி
வழிகிறது மகிழ்ச்சியினால் யாரும் வந்து
தோலுரிக்க மாட்டார்கள் எதையும் சொல்லி
என்பதனால் முகநூலென் கதியென் றாச்சே