தீயதும் நிழலும்!
தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை
வீயாது அடி உறைந்து அற்று
முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய பெருந்தவமும் எக்கோடி யாராலும் வெலப்படாது எனக்கொடுத்த வரமும் திக்கோடிக் களிறனைத்தும் செரு வென்ற புயவலியும் கொண்ட இராவணனைப் புக்கோடிப் போயிற்று இராமனின் அம்பு. வரமும் வீரமும் தவமும் மரண காலத்தில் கைகொடுக்க வில்லை. காரணம் செய்த செயல் தீயது. இது இராமாயணம்.
ஆயிரத்து எட்டு அண்டங்களை நூற்றெட்டு யுகங்கள் ஆளும் வரமும் வைச்சிர தேகமும் சிங்க வாகனமும் இந்திரஞாலம் என்ற தேரும் தன் தவ வலிமையால் இறைவனிடமிருந்து பெற்ற சூரன் இறுதியில் முருகனின் வேலால் இரு பாதியாகக் கிழிபட்டுப் போனான். அவனும் செய்த செயல் தீயது.
கிட்லரும் முசோலினியும் இடியமினும் தங்கள் ஆட்சியையும் சுக போகங்களையும் தீயன செய்து இழந்து போனார்கள். அசோகர் தான் செய்த கொடிய யுத்தம் தீவினையின் பாற்பட்டது என்று உணர்ந்து துறவு பூண்டார். தான் செய்த தீச் செயலுக்காக அருணகிரியார் கோபுரத்தில் இருந்து குதித்தார்.
செய்யாத குற்றத்துக்கு தண்டணை வழங்கப்பட்டு கழு ஊசியிலே ஏற்றப்பட இருந்த போது இது முற்பிறப்பிலே செய்த தீவினையால் வந்தது என்றார் பட்டினத்தார். சிலம்பிலே தீச்செயல் செய்த பாண்டிய மன்னன் அரியணையில் இருந்து வீழந்து உயிர்விட நேர்ந்தது.
இவையெல்லாம் தீயவை செய்தால் அதிலிருந்து தப்ப முடியாது என்பதற்கு புராணங்களில் இருந்தும் சரித்திரங்களில் இருந்தும் கிடைக்கும் சான்றுகள் ஆகும்.
ஒளவையோ இதற்கும் மேலே போய் தீயவை செய்யாமல் இருப்பது மட்டுமல்ல தீயவரோடு சேர்ந்தாலும் அது தீமையிலே முடியும் என்றாள்.
தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற
தீயார்சொல் கேட்பதுவும் தீதே – தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது
என்பது தீமைக்குப் பயந்த ஒளவையாரின் பாட்டாகும். இதையே உலக நீதி வஞ்சனைகள் செய்வாரொடு இணங்க வேண்டாம் என்று தடுத்தது. பஞ்சதந்திரமும் தருமமே விரும்புவாரைத் தருமமே விரும்பிக் காக்கும் தருமமே இகழுவாரைத் தருமமே இகழ்ந்து நிற்கும் என்று மறுதலையாகச் சொல்லிற்று.
வள்ளுவர் சொன்னார். ஒரு மனிதனின் நிழல் எவ்வளவு தூரத்துக்கு நீண்டு கொண்டு போனாலும் விலகிப் போகாமல் காலடியில் வந்து தொட்டு ஒட்டிக் கொள்ளும். அதை மனிதனால் தன்னை விட்டுப் பிரிக்க முடியாது. அது போல ஒருவன் பற்றவர்களுக்குத் தீயவை செய்தால் அதுவும் நிழல்போல தொடர்ந்து செய்தவரையே ஒட்டிக் கொண்டு தப்ப விடாது அழிக்கும் என்றார் அவர்.
தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை
வீயாது அடி உறைந்து அற்று
தீயவை செய்தார் கெடுதல் – பிறருக்குத் தீமையானவற்றை செய்பவர்கள் கெட்டு அழிந்து போதல்: நிழல் தன்னை வீயாது அடி உறைந்து அற்று – ஒருவனின் நிழல் அவன் எந்தப் பக்கம் சென்றாலும் அவனை விட்டுப் பிரியாது அவன் அடியை வந்து தொட்டு நிற்பது போல பற்றி நின்று அவனை அழித்தே தீரும்.
பிறருக்குத் தீமையானவற்றை செய்பவர்கள் கெட்டு அழிந்து போதல் ஒருவனின் நிழல் அவன் எந்தப் பக்கம் சென்றாலும் அவனை விட்டுப் பிரியாது அவன் அடியை வந்து தொட்டு நிற்பது போல பற்றி நின்று அவனை அழித்தே தீரும்.