குன்றி மணியின் மூக்கு!
குன்றி மணியின் மூக்கு!
புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
மூக்கிற் கரியா ருடைத்து
அந்தப் பக்தனுக்கு அதிர்ச்சி! காவியுடை அணிந்த ஒரு காமுகரையா துறவி என்று நம்பினேன்? ஆழகான
ஆத்மீகத்துக்குப் பின்னால் இத்தனை அவலங்களா? இவருடைய சொற்பொழிவையா காது குளிரக் கேட்டேன்.
நடிகையுடன் தொடர்பா? பதைத்தான் பக்தன்!
பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் எல்லா விசயத்தையும் கிழித்துப் போட்டுவிட்டன ஒரே ஒரு நாளில்! துறவி
தலைமறைவு! மடம் முடங்கி விட்டது! திராவிட வாய்களுக்கும் அவல் கிடைத்து விட்டது இடிக்க!
காம தகனம் செய்த கடவுளின் பெயரால் மடமமைத்து காசும் கன்னியும் சேர்ப்பது தான் இன்றைய தெய்வீகமா?
ரமணரும் இராமகிரு;ணரும் சுவாமி விவேகானந்தரும் ஏன் ஊரெல்லாம் கல்வியும் மருந்தும் குடிதண்ணீரும்
வழங்கிய பாபாவும் தோன்றிய மண்ணிலா இவரும் தோன்றினார். நினைத்து வேதனைப்பட்டான் அந்தப் பக்தன்!
எதையெதைப் பற்றியெல்லாம் பேசுவாரே! இவர் படிக்க வேண்டியதே நிறைய இருக்கே பட்டினத்தார் பாடல்
தெரிந்திருந்தாலே தலைமறைவாகப் போக வேண்டிய அவசியம் இல்லையே! போகட்டும்! இனியாவது படித்துப்
பாருங்கள்! பாடலின் இந்தப் பகுதியை!
சொற்பல பேசித் துதித்து நீங்கள்
நச்சிச் செல்லும் நரக வாயில்
தோலும் இறைச்சியும் துதைந்து சீப்பாயும்
காமப் பாழி கருவிளை களனி
தூமைக் கடவழி தொலைபெறு வாயில்
எண்சாண் உடம்பு இழியும் பெருவழி
மண்பால் காமம் கழிக்கும் மறைவிடம்
நச்சிக் காமுக நாய்தான் என்றும்
இச்சித்து இருக்கும் இடைகழி வாயில்
திங்கள் சடையோன் திருவருள் இல்லார்
தங்கித் திரியும் சவலைப் பெருவழி
புண்இது என்று புடவையை மூடி
உள்நீர் பாயும் ஓசைச் செழும்புண்
மால்கொண்டு அறியா மாந்தர் புகும்வழி
நோய்கொண்டு ஒழியா நுண்ணியர் போம்வழி
தருக்கிய காமுகர் சாரும் படுகுழி
செருக்கிய காமுகர் சேரும் சிறுகுழி
பெண்ணும் ஆணும் பிறக்கும் பெருவழி
மலம்சொரிந்து இழியும் வாயில் அருகே
சலம்சொரிந்து இழியும் தண்ணீர் வாயில்
இத்தை நீங்கள் இனிதென வேண்டா
பச்சிலை இடினும் பக்தர்க்கு இரங்கி
மெச்சிச் சிவபத வீடருள் பவனை
முத்தி நாதனை மூவா முதல்வனை
அண்டர் அண்டமும் அனைத்துள புவனமும்
கண்ட அண்ணலைக் கச்சியின் கடவுளை
ஏக நாதனை இணையடி இறைஞ்சுமின்
போக மாதரைப் போற்றுதல் ஒழிந்தே!
துறவியே! மனைவி பிள்ளைகளோடு ஒழுங்காக வாழும் சமூகத்துக்காக பட்டினத்தார் இந்தப் பாடலை எழுதியிருக்க மாட்டார்.
கற்புக்கரசிகளாக வாழும் பெண்களை இகழ்ந்தும் இதை எழுதியிருக்க மாட்டார்! பிற்காலத்தில் நீங்கள் பிறந்து
துறவைச் சந்தி சிரிக்க வைக்கும் காலம் வருமென்று உணர்ந்து தான் இந்தப் பாடலை அந்த மகான் பாடியிருக்க வேண்டும்!
என்னடா சாமியாரைப் பற்றி யோசித்துக் கவலைப் படுகின்றாயா? கேட்டாள் பக்தனின் பாட்டி. மகனே இரண்டாயிரம்
வருடங்களுக்கு முன்பே இது விசயமாக வள்ளுவர் எங்களையெல்லாம் எச்சரித்து இருக்கிறார்! நீ குன்றி மணி
பார்த்திருக்கிறாயா? அதற்கு உடம்பு முழுவதும் சிவப்பாக இருக்கும். ஆனால் அதன் மூக்குப் பகுதி மட்டும்
கறுப்பாக இருக்கும்! இந்தச் சாமிமாரும் அது போலத்தான் வெளியாலே செம்மையாக இருப்பார்கள். உள்ளே மனதளவில்
குன்றி மணியின் மூக்குப் போல கறுத்துப் போய் இருப்பார்கள்! செம்மையான வெளித் தோற்றத்துக்கு மாறான
வேலைகளை செய்யும் அளவுக்கு அவர்கள் அகம் கறுத்துப் போயிருக்கும்!. என்று கூடா ஒழுக்கம் என்ற அதிகாரத்திலே
வள்ளுவர் சொல்லியிருக்கிறார். எனவே நீ தான் இந்தப் போலிச் சாமிகளைக் கண்டு விலகி நடக்க வேண்டும் என்றாள்
பாட்டி!
புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
மூக்கிற் கரியா ருடைத்து
குன்றிப் புறம் கண்டு அனையர் ஏனும் – குன்றி மணியின் வெளிப்பக்கம் போல தாமும் வெளியே வேடத்தால்
செம்மை உடையவர் போலக் காணப்பட்டாலும்: அகம் குன்றி மூக்கின் கரியார் உடைத்து – உள் மனமானது அந்தக் குன்றி
மணியின் மூக்குப் போல கறுத்துப் போன கூடாத ஆட்களையும் உடையது இந்த உலகம்!
குன்றி மணியின் வெளிப்பக்கம் போல தாமும் வெளியே வேடத்தால் செம்மை உடையவர் போலக் காணப்பட்டாலும்:
உள் மனமானது அந்தக் குன்றி மணியின் மூக்குப் போல கறுத்துப் போன கூடாத ஆட்களையும் உடையது இந்த உலகம்!
(திருக்குறள் – கூடாஒழுக்கம்)