தீபாவளி

கொடுத்தவரம் தவறாகிக் கொடிய துன்பம்

குவலயத்தில் தலைவிரித்து ஆடும் போது

படுத்திருந்தால் பாற்கடலில் பாவம் என்றே

பகவானும் வெகுண்டெழுந்து படையை ஏவி

எடுத்தெறிந்தான் அசுரனது உயிரை அந்த

இனியதினம் தீவாளித் திருநாள் என்றும்

அடுத்தவிருள் விலகியதால் அந்த நாளில்

அழகாக தீபமிடும் உலகம் இன்றும்.


 

புத்தாடை விலைபோகும்! புகுந்த கூட்டம்

பொல்லாத விலையென்று பொருமும்! வாங்கும்!

முத்தாக நீர்வடியும் கண்கள்! ஏதும்

முடிவாகா திருநாளாய் முடிந்தும் போகும்!

அத்தானைப் பகையாக்கும் ஆசைச் சேலை!

ஆத்தாளைப் பகையாக்கும்! அதனால் மாந்தர்

பத்தோடு நூறாகக் கடன்பட் டேனும்

பயத்தோடு நடந்திடுவார் இந்த நாளில்!


ஆடெல்லாம் உயிர்துறக்கும் இறைச்சிக் காக!

ஆனபனைக் கள்ளருந்திக் களிக்கும் நெஞ்சம்!

கூடெல்லாம் அடைபட்டுக் கிடந்த கோழி

குழம்பாகிக் கமகமக்கும்! மாலை வந்தால்

வீடெல்லாம் புதுப்படங்கள் பார்க்க ஓடும்!

வெடிகேட்கும்! மணிகேட்கும்! கோயில் தோறும்

நாடெல்லாம் இவ்வாறாய் நரகா சூரன்

நாளிதனைக் கொண்டாடும் நன்று! நன்று!!


உள்ளத்தை இருளாக்கிக் கொண்டு தீபம்

ஊர்கூடி ஏற்றுவதும் உணவுக் காக

கள்ளத்தை அறியாத ஆட்டைக் கட்டிக்

கழுத்தரிந்து கொல்லுவதும் கள்ளை உண்டு

வள்ளத்தைப் போலாடி இங்கும் அங்கும்

வழிமாறி அலைவதுவும் சினிமாப் பார்த்து

பள்ளத்தில் அறிவொளியைப் போட்டு மேலும்

பாமரராய் ஆவதுமே சமய வாழ்வாம்!


நெஞ்சத்தில் கெட்டதெலாம் நீக்கி நேர்மை

நிறுவுமெனில் தீபநாள் வரட்டும்! ஏங்கித்

தஞ்சத்தில் கிடக்கின்ற ஏழைக் கேதும்

தருமேனும் என்றாலும் வரட்டும்! இல்லை

வஞ்சத்தை முறியடிக்க வாழ்வில் ஏதும்

வழிகாட்டும் என்றாலும் வரட்டும்! ஆனால்

பஞ்சத்தை அன்புக்குப் பகிர்ந்து தந்தால்

பகவானின் நாளேனும் வேண்டாம் இங்கே!

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.