கம்பன் காட்டிய விமானப் பறப்பு!

மாய மானைத் தேடிப் போய் சீதையைப் பறிகொடுத்த இராமன் அவளை இராவணன் புஷ்பக விமானத்தில் கொண்டு சென்றதை அறிந்து அதைத் தேடித் தம்பியுடன் புறப்படுகிறான். அந்த விமானம் நீண்ட தூரத்துக்கு நிலத்தில் ஓடியிருக்கின்ற தடயத்தை அவன் காண்கின்றான். அந்த விமானத்தின் சக்கரங்களின் அடையாளத்தைப் பின்பற்றிச் சென்ற இராம இலக்குமணர்கள் ஒரு கட்டத்தில் அந்த அடையாளத்தைக் காணாமல் திகைக்கிறார்கள். ஆம்! விமானம் ஓடுபாதையில் ஓடி வேகம் எடுத்து விண்ணில் கிளம்பிச் சென்று விட்டது. சென்ற திசை தெரியவில்லை! வெந்த புண்ணிலே வேல் நுழைந்த வேதனையோடு தம்பீ! இனி என்ன செய்யலாம?; என்று இலட்சுமணனிடம் இராமன் கேட்டானாம்!

 

 

மண்ணின் மேல் அவன் தேர்சென்ற சுவடு எல்லாம் ஆய்ந்து
விண்ணில் ஓங்கிய ஒருநிலை மெய்யுற வெந்த
புண்ணில் ஊடு ஒரு வேல் என மனம் மிகப் புழுங்கி
எண்ணி நாம் இனிச் செய்வது என்ன இளவலே என்றான்!

 

சீதையை ஏற்றிக் கொண்டு இராவணனின் தேர் அல்லது விமானம் ஓடுபாதையில் ஓடித்தான் விண்ணில் எழுந்தது என்று கம்பன் எழுதுகின்றானே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்! விமானத்தைப் பற்றி விஞ்ஞானிகள் கனவு கூடக் காணாத காலத்தில்! இதை என்னவென்று சொல்வது? பூர்வ ஜென்மத் தொடர்பா? இல்லை நடைமுறையில் எங்காவது விமானப் பறப்பைக் கண்டானா தன் காலத்தில்? யாருக்குத் தெரியும்!

இதுவாவது போகட்டும். கந்தப் புராணத்திலே கச்சியப்பர் சொல்வார். முருகனுடன் போரிட்ட சூரனிடம் இந்திரஞாலத்தேர் என்று ஒரு விமானம் இருந்தது. அதனிடம் சூரன் எல்லாத் தேவர்களையும் கொண்டு சென்று அண்டகோளகையின் உச்சியிலே அடைத்து வை என்று சொல்ல அந்தத் தேரானது அப்படியே செய்ததாம்! அது போல சூரனின் கட்டளையை ஏற்று ஏழு கடல் தாண்டிப் போய் அமுத சீத மந்திர மலையை கொண்டுவந்தது என்று எழுதுகிறார் கச்சியப்பர். அதாவது விமானத்துக்கு வெளியே இருந்து கட்டளையைப் பிறப்பிக்க அதை ஏற்றுஅந்த விமானம் செய்திருக்கின்றது.  ஏனெனில் அந்த நிகழ்வு நடைபெற்ற போது சூரன் முருகனுக்கு முன்னாலே களத்திலே நின்றான் என்கிறார் கச்சியப்பர். கட்டளை மையத்தினால் விடுக்கப்படும் கோரிக்கைகளுக்கு அமைவாக செயற்படும் இன்றைய ஆளில்லா விண்கலங்களாக இந்த விமானம் இருந்திருக்குமோ? சூரனின் கட்டளையை விமானம் எப்படி உணர்ந்து கொண்டது? அதை உணர்ந்து கொள்ளப் பாவிக்கப்பட்ட கருவி எது? கம்பியூட்டரா? அல்லது இன்றைய கம்பியூட்டர்களை எல்லாம் தூக்கியடிக்கக் கூடிய ஏதாவது சாதனம் அப்பொழுது இருந்ததா? ஏனெனில் சூரனின் கட்டளைகளை நிறைவேற்றிய அந்த விமானம் ஒரு கட்டத்தில் முருகப் பெருமானால் கட்டுப்பாடு மாற்றப்பட்டு அவரின் கட்டளையை ஏற்று சூரனிடம் போகாமல் அவரிடம் நின்றுவிட்டது என்றும் ஒரு செய்தியைத் தருகிறார் கச்சியப்பர். இதெல்லாம் என்ன? உண்மையோ பொய்யோ இந்த அறிவு எப்படி வந்தது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் என்பது யாராலுமே விளங்கிக் கொள்ள முடியாத மர்மமாகவே இன்றும் இருக்கின்றது!.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.