தோற்றம் கொடுத்த தோல்வி!
அரச சபைக்குள் வந்த கண்ணகியை உற்றுப் பார்த்தான் பாண்டியன் நெடுஞ்செழியன். நிலத்திலே வீழ்ந்து கிடந்து அழுது புரண்டதால் அவள் உடல் முழுவதும் புழுதி படிந்திருந்தது. நீண்ட கருமையான கூந்தல் கலைந்து விரிந்திருந்தது. ஒரு கையிலே மட்டும் தனியாக ஒரு காற்சிலம்பு இருந்தது. கண்களிலே இருந்து கண்ணீர் உருண்டு ஓடிக்கொண்டு இருந்தது. அவள் இன்னும் எதுவும் பேசத் தொடங்கவில்லை.
அவளின் கோலத்தைப் பார்த்த மாத்திரத்தே நான் தப்புப் பண்ணிவிட்டேன் என்ற முடிவுக்கு வந்துவிட்டான். பாண்டிய மன்னன். வார்த்தைக்கு முன்னரே தோற்றம் ஒரு தோல்வியை அவனுக்குக் கொடுத்து விட்டது. பிறகு தான் கண்ணகியின் கதையைக் கேட்டு உயிர் விட்டான் அந்த மன்னன்.
மெய்யில் பொடியும் விரித்த கருங்குழலம்
கையில் தனிச்சிலம்பும் கண்ணீரும் – வைகையர் கோன்
கண்டளவே தோற்றான் காரிகைதன் சொற்செவியில்
உண்டளவே தோற்றான் உயிர்.
(சிலப்பதிகாரம் – இளங்கோ அடிகள்)
வாழ்வில் நாம் யாருக்காவது துன்பம் செய்தோம் என்றால் அவர்கள் வாய்திறந்து ஏன் இப்படிச் செய்தய் என்று கேட்கத் தேவையில்லை. மாறாக அந்தத் துன்பத்தை அனுபவிக்கும் அவர்களின் கோலமே எங்களைக் கொன்றொழித்து விடும் என்பது இந்தச் சமணத் துறவியின் கருத்தாக உள்ளது,