|

நாரையும் நானும்! (சங்க இலக்கியம்)


அது அலையெறியும் கடலுக்கு அருகே அமைந்த சிறு கிராமம். சிறு வயது முதலே ஒன்றாக அங்கே வாழ்ந்த தோழிகள் அவர்கள். அவர்களில் ஒருத்திதான் மற்றவளைத் தேடிக்கொண்டு அவள் வீட்டுக்கு வருகின்றாள் நீண்ட காலத்துக்குப் பின்னால்.
நீ எப்படி இருக்கின்றாய் என்று கேட்டாள் தோழி. எனக்கு என்ன நான் நன்றாகத்தானே இருக்கின்றேன. நீ எப்போ ஊரிலிருந்து வந்தாய் என்றாள் அவள். நான் வந்தது இருக்கட்டும். நீ எப்படி இருக்கின்றாய் என்று கேட்டேன் என்றாள் தோழி சற்றுக் கோபம் கலந்த குரலில். இப்போது பதில் வரவில்லை அவளிடமிருந்து.
நான் மணம் முடித்து சில ஆண்டுகள் வேறு இடம் சென்று வாழ்ந்து ஊர் திரும்புவதற்குள் உன் வாழ்வையே தலை கீழாக மாற்றி வைத்திருக்கின்றாய் இல்லையா கண்டறியாத காதல் என்றாள் தோழி. அதற்கும் பதில் வரவில்லை அவளிடம் இருந்து.
மலைவாழ் குறத்திகள் போல நாங்கள் எல்லோரும் இலைதழை அணிந்து வாழ்ந்த காலத்திலேயே சேலை உடுத்து வாழ்ந்தவள் நீ. அழகின் விளைநிலமாய் இளமை ததும்பத் துள்ளித் திரிந்த நீயா இப்படித் துவண்டு கிடக்கின்றாய். முதலிலே படுக்கையை விட்டு எழுந்திரு என்றாள் தோழி.
வெள்ளிக் கம்பிகளை இடையிடையே செருகி வைத்தால் போல அங்கொன்றும் இங்கொன்றுமாக நரை விழுந்த தன் கருங்கூந்தலை அள்ளி முடிந்து கொண்டு எழுந்து உனக்கு இப்போ என்ன வேண்டும் என்றாள் அவள்.
என்னடி உன் கோலம் உங்களுக்குள் என்ன பிரச்சனை என்றாள் தோழி. சற்றுக் கவலையுடன். சிரித்து விட்டு தோழியின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு கடற்கரைக்கு வந்தாள் அவள். தன் தோழிக்கு ஒரு காட்சியைக் கையாலே சுட்டிக் காட்டினாள்.
அந்தக் கடற்கரையில் பட்டுப் போய்விட்ட ஒரு மரம். இலைகள் அற்ற அதன் ஒரு கிளை மட்டும் கடற்பக்கமாகச் சென்று கடல் நீரைத் தொடுவது போல் வளைந்து இருக்கின்றது. அதிலே ஒரு இளமையைக் கடந்த நாரை. அதனால் இப்போது பறக்க முடிவதில்லை.
கரை நோக்கி வரும் அலைகள் ஒரு சிறு மீனையாவது தான் இருக்கும் இடத்துக்கு கொண்டுவந்து தன் பசிபோக்கத் தரமாட்டாவா என்று ஏக்கத்துடன் கடலையே பார்த்துக் கொண்டு அது இருக்கின்றது. தோழிக்கு அந்தக் காட்சியைக் காட்டிவிட்டுப் பேசத் தொடங்கினாள் அவள்.
ஒரு காலத்தில் சிறகடித்து உயரப் பறந்து இந்தக் கடலை வட்டமிட்டு ஆட்சி செய்து விரும்பிய இரையை விரும்பிய நேரத்தில் பிடித்துச் சுவைத்து மகிழ்ந்தது தான் இந்த நாரை. இன்று அதன் நிலையைப் பார். தீனுக்ககாக அது கடல் அலையை நம்பி இருக்கின்றது.
அலைகள் அதற்கு மீன் வழங்காவிட்டால் பட்டினியால் அதன் வாழ்வு முடிந்து போகும். இன்று என் நிலையும் அப்படித்தான். ஒருகாலத்தில் என் காதலனோடு விரும்பிய நேரத்தில் விரும்பிய சுகத்தை அனுபவித்து வாழ்ந்த நான் இன்று இரைக்காக அலைகளை எதிர்பார்க்கும் நாரை போல சுகத்துக்காக என் காதலனை எதிர்பார்த்துக் கிடக்கின்றேன்.
அவன் என் இயலாமையை உணர்ந்து எனக்கு அன்பு காட்டி என்னை பாதுகாப்பானாக இருந்தால் இன்னும் சில காலம் நான் உயிரோடு இருப்பேன். அவனுக்குத் தான் என்மீது இரக்கம் இல்லையே. அது இருந்திருந்தால் இவ்வளவு காலம் என்னைத் தனிமையில் விட்டுப் போயிருக்கவே மாட்டான் என்றாள் அவள்.
இந்தச் செய்தி சங்க இலக்கியமாகிய குறுந்தொகையிலே 125 பாடலிலே அம்மூவன் என்ற புலவனால் சொல்லப்பட்டிருக்கின்றது.
இலங்குவளை நெகிழச் சாஅ யானே
உளெனே வாழி தோழி சாரற்
றழையணி யல்குன் மகளி ருள்ளும்
விழவுமேம் பட்டவென் னலனே பழவிறற்
பறைவலந் தப்பிய பைத னாரை
திரைதோய் வாங்குசினை யிருக்கும்
தண்ணந் துறைவனொடு கண்மா றின்றே.

கனடா தமிழர் தகவல் 5.10.24 இதழில் இடம்பெற்றிருக்கும் எனது கட்டுரை இது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.