கான முயலும் ஈழ நிலமும்!
அவர்கள் வேடுவர்கள். அவர்களின் வீடு காட்டை எல்லையாகக் கொண்ட ஒரு கிராமத்தில் இருந்தது. வேட்டையாடுதல் அம் மக்களின் குலத்தொழிலாக இருந்தாலும் சிலர் மட்டும் விலங்குகளை மட்டுமல்ல போர் முனையில் எதிரிகளையும் வேட்டையாடக்கூடிய வில்லாளிகளாக இருந்தார்கள். அவர்கள் வீரம் ஊர் கடந்து நாடு முழுவதும் பேசு பொருளாக இருந்தது.
அப்படிப்பட்ட வீரர்களை அரசு கண்டுகொள்ளாமல் விட்டுவிடுமா. அரச தூதுவர்கள் ஒரு குடும்பத்தில் இருந்த அண்ணனுக்கும் தம்பிக்கும் வலை விரித்தார்கள். அந்த வலையில் தம்பி மாட்டிக் கொண்டான். அண்ணனோ போர் முனை துளியும் விருப்பமில்லை என்று மறுத்துவிட்டான். மறுத்தது மட்டுமல்ல. தம்பி அரண்மனைப் படையில் சேர்ந்ததற்கு வீட்டில் உள்ளவர்களையும் குறை கூறி வந்தான்.
எங்களுக்கென்று காடு இருக்கின்றது. அதிலே வாழும் மிருகங்களையும் பறவைகளையும் தேவைக்கு ஏற்றவாறு வேட்டையாடி மனைவி பிள்ளைகளோடு உண்டு உறங்கி நிம்மதியாக வாழத் தெரியாமல் அரன்மனைப் படையில் இணைந்து ஏன் வீணாக உயிரை விட வேண்டும்.
சாவின் முடிவிலே கொண்டு சென்று நிறுத்துகின்ற ஒரு வேலைக்கு குதிரை கவசங்கள் வில் வாள் வேல் என்ற ஆயுதங்கள். என்ன பிழைப்பு இது ஏதோ செய்து முடியுங்கள். தினமும் வேட்டைக்குப் புறப்படும் முன் தன் பெற்றோருக்கும் தம்பியின் மனைவி பிள்ளைகளுக்கும் அண்ணன் செய்கின்ற அருச்சனை இது.
பொழுது சாயும் நேரம் தோளில் தொங்கும் மான் முயல் பன்றி போன்றவற்றின் உயிரற்ற உடல்களோடும் வலையில் சிக்கிய பறவைகளோடும் காய் கனி தேன் நிரம்பிய கூடையோடும் வீட்டுக்கு வரும் அண்ணனைத் தம்பியின் மனைவி பார்ப்பாள். இதுவல்லவோ நிம்மதியான வாழ்க்கை என்று நினைக்கும் அவள் மனம்.
இருக்கிறானோ இல்லை இறந்து விட்டானோ என்ற முடிவும் தெரியாமல் தவித்து பல நாடகள் தவமிருந்து எப்போதாவது வேலும் குதிரையுமாக வந்துவிட்டுப் போகும் தன் கணவனை எண்ணிப்பார்ப்பாள் அவள். படை வேலை வேண்டாம் அண்ணனைப் போல காட்டிலே வேட்டையாடிக் கொண்டு வீட்டிலேயே இருந்துவிடுங்கள் என்று பல முறை மன்றாடிப் பார்த்தாள் அவள். எதுவும் எடுபடவில்லை.
ஒருநாள் மாலை தன் சிறிய அம்புககளை கருங்கல்லிலே தீட்டிக் கொண்டிருந்தான் அண்ணன். அங்கே வந்த தம்பி அண்ணா இந்த வேலையும் தீட்டி முனையிலே நெய் பூசிக் கொடு என்றான். அதைக் கையிலே வாங்கிய அண்ணன் இது தான் வேலாயுமா இந்தக் கனம் கனக்குதே. இதை வைத்துப் போரிலே என்ன செய்வாய் என்று கேட்டான்.
அண்ணா போரிலே இந்த வேல்கள் யானைகள் மீது எறிந்து அவற்றை வீழ்த்துவதற்காகச் செய்யப்பட்டவை. அது தான் இவ்வளவு கனமாக இருக்கின்றது என்றான் தம்பி. ஓ அப்படியா இதுவரை போரிலே எத்தனை யானைகளை இந்த வேலினால் கொன்றிருப்பாய் என்று கேட்டான் அண்ணன்.
பல முறை பல யானைகள் மீது இந்த வேலை எறிந்திருக்கின்றேன். அந்த யானைகள் எல்லாம் போர்ப் பயிற்சி பெற்றுக் கவசம் தரித்தவை ஆகையால் என் வேலைத் தடுத்துத் தப்பித்துப் போய்விட்டன. பரவாயில்லை. என்றோ ஒருநாள் என் வேல் ஒரு யானையையாவது வீழ்த்தும் அந்த நம்பிக்கை எனக்கு உண்டு என்றான் அந்தத் தம்பி.
அண்ணன் ஏளனமாகச் சிரித்தான். நான் வில்லை வளைத்து ஏதாவது ஒன்றுக்குக் குறி வைத்தால் என் அம்பு தவறிப் போவது என்பது சரித்திரத்தில் கிடையாது .அப்படியிருக்க எனக்குத் தம்பியாகப் பிறந்து யானைக்கு எறிந்து தவறிப் போன வேலை தோளிலே சுமக்கிறேன் என்று சொல்ல உனக்கு வெட்கமாக இல்லையா
உன்னுடைய சிறிய அம்பு துளைத்துச் செத்துப் போக யானை என்ன பன்றியா முயலா என்றான் தம்பியும் விடாமல். வார்த்தைகள் முற்ற ஊரவர்கள் கூடி இருவரையும் சமாதானம் செய்து வைத்தார்கள். அந்தக் கூட்டத்திலே திருவள்ளுவரும் இருந்தார். அவர் எதுவுமே பேசவில்லை. அண்ணன் தம்பி இருவருடைய வார்ததைப் பிரயோகங்களையும் கேட்டுக்கொண்டு இருந்தார்.
இந்த வேட்டுவர்கள் உரையாடல் எனக்கு மிகச்சிறந்த ஒரு செய்தியினைத் தெரிவிக்கின்றது. ஒரு மனிதன் தனக்கு எந்த வகையிலும் சமானமில்லாத ஒரு அப்பாவி எதிரியை ஏமாற்றி அழித்து வென்ற ஆயுதத்தை கையிலே வைத்திருப்பதை விட தன்னைவிடப் பலமடங்கு பலம் பொருந்திய ஒரு எதிரியோடு போராடித் தோற்றுப் போன ஆயுதத்தை கையிலே வைத்திருப்பது தான் மனதுக்கு இனிமையான செயலாக இருக்கும்.
தோல்வி வேறு விடயம். ஆனால் பலம் பொருந்தியவர்களுடன் தான் போராடினோம் என்ற நிறைவு கிடைக்குமே. காட்டிலே வாழும் முயலை குறி தவறாது எய்து கொன்ற அம்பை விட யானைக்கு முன்னாலே நின்று எறிந்த வேல் குறிதவறிப் போனாலும் அதுதான் உயர்ந்தது என்று உதடுகள் உரைக்க ஏட்டையும் எழுத்தாணியையும் வள்ளுவர் கைகள் எடுக்கின்றன. அங்கே எழுநூற்று எழுபத்து இரண்டாவது குறள் பிறக்கின்றது.
கான முயல் எய்த அம்பினில் யானை
பிழைத்த வேல் ஏந்தல் இனிது.
வள்ளுவர் சொன்ன இந்தக் குறள் கார்த்திகை மாதத்தில் கனத்த மனத்தோடு இருக்கும் ஈழ தேசத்துக்கும் பொருந்தும். போரிலே தோற்றுவிட்டோம் தான். ஆனால் நாங்கள் வல்லரசுகளாக இருந்து கொண்டு வசதிகளும் சமானமும் இல்லாத சிறிய நாடுகளைத் தாக்கி வெற்றி பெற்று மகிழவில்லை. மாறாக சிறிய தேசத்தில் இருந்து கொண்டு பலமடங்கு பலம் பொருந்திய பல எதிரிகளோடு போராடித் தோற்றோம். எமது கையிலே இருக்கும் ஆயுதம் கான முயலுக்கு எய்த அம்பு அல்ல யானைகளுக்கு எறிந்து தவறிப்போன வேல் என்று பெருமை கொள்வோம்.
கனடா தமிழர் தகவல் 5.11.2023 இதழில் வெளிவந்த எனது கட்டுரை இது.