|

பல்லவர் காலமும் – கலையரசியும்!

யாழ்ப்பாணத்தில் நான் தமிழ் ஆசிரியராக இருந்த காலத்தில் கலையரசி என்றொரு தமிழ் ஆர்வம் மிக்க மாணவி என்னிடம் தமிழ் கற்றாள்! அந்த வருடம் பரீட்சைக்கு பல்லவர் காலம் பற்றி முக்கியமான கேள்வி ஒன்று வரப்போகின்றது என்ற செய்தி எப்படியோ வெளியே கசிந்து இருந்தது. அதனால் கிளிப் பிள்ளைக்கு சொல்வது போல பல்லவர் காலம் பற்றி பேராசிரியர் செல்வநாயகத்தின் இலக்கிய வரலாற்றோடு ஆ.வேலுப்பிள்ளை எழுதிய தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும் என்ற நூலில் இருந்தும் பல செய்திகளைச் சொல்லிக் கொடுத்திருந்தேன்!
உண்மையில் அம்முறை பல்லவர் காலம் பற்றிய கேள்வி வினாத்தாளில் வந்திருந்தது. பரீட்சை எழுதிவிட்டு வந்த கலையரசியிடம் அது பற்றிக் கேட்ட போது பல்லவர் காலம் பற்றிய கேள்வியே வரவில்லை! வீணாக அதைப் படித்தது என்று சலித்துக் கொண்டாள்!
சங்க காலம் சங்கம் மருவிய காலம் பல்லவர் காலம் சோழர் காலம் நாயக்கர் காலம் ஐரோப்பியர் காலம் இருபதாம் நூற்றாண்டு என வகைப்படுத்தப்பட்ட தமிழ் இலக்கிய வரலாற்றில் பல்லவர் காலம் பற்றி நேரடியாகக் கேட்காமல் சங்கம் மருவிய காலப் பிற்பகுதியில் இருந்து சோழப் பேரரசின் தோற்றத்துக்கு இடைப்பட்ட காலத்தில் தமிழ் இலக்கியத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன என்று கேட்டிருந்தார்கள்!
சங்கம் மருவிய காலத்துக்கும் சோழர் காலத்துக்கும் இடைப்பட்ட காலப்பகுதி பல்லவருக்கு உரியது என்ற எண்ணம் கலையரசிக்கு வராததால் அந்தக் கேள்விக்கு அவள் பதில் எழுதவில்லை!
இன்றைய உலகில் எந்த மூலையிலாவது கலையரசி இருந்தால் அவளுக்கு முகநூல் வசதி இருக்குமானால் இந்தச் செய்தியை கணவனுக்கோ பிள்ளைகளுக்கோ நிச்சயம் சொல்லிச் சிரித்துக் கொள்வாள் என்று நினைக்கின்றேன்!

இரா.சம்பந்தன்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.