உங்களுக்குத் தெரியுமா?
இன்று தமிழ்க் கவிதை உலகத்திலே பலர் சாதனை படைத்தவர்களாகப் போற்றப்படுகின்றனர். இன்னும் சிலர் கவியுலகின் மறுமலர்ச்சிக்கு விதிதிட்டவர்களாகவும் பேசப்படுகின்றனர்.
ஆனால் சீர்காழிச் சிறுவனான சம்பந்தன் என்னும் கவிஞன் பத்துப் பத்தாக தான் பாடிய 384 திருத்தலப் பதிகங்களிலும் ஒரு புதுமையைச் செய்திருந்தான்.
தமிழ்ச் சமுதாயம் அவன் கவிதையில் பயன்படுத்திய ஒரு உத்தியை இன்றுவரை கண்டுகொள்ளவில்லை.
வாரியார் போன்ற சொற்பொழிவாளர்கள் கூட அதைப் பெரிதுபடுத்திப் பேசவில்லை. இது கவலை தரும் விடயம்.
சம்பந்தர் தனது பதிகங்களில் எட்டாவது பாட்டிலே இராவணன் கயிலை மலையை எடுத்த செய்தியையும் ஒன்பதாவது பாட்டிலே திருமாலும் பிரமாவும் அடி முடி தேடிய கதையையும் மறக்காமல் குறிப்பிட்டிருப்பார்.
384 பதிகங்களிலும் இந்த ஒழுங்கு இருக்கும்.
உதாரணத்துக்கு ஐந்து பதிகங்களை எடுத்து நோக்குவோம்.
1. திருவாலவாய் திருநீற்றுப் பதிகம்
எட்டாம் பாடல் இராவணன் மேலது நீறு ஒன்பதாம் பாடல் மாலொடு அயன் அறியாத வண்ணமும் உள்ளது நீறு
2. திருகோணமலைப் பதிகம்
எட்டாம் பாடல் எடுத்தவன் தருக்கை இழித்தவர் விரலால் ஒன்பதாம் பாடல் இருவரும் அறியா வண்ணம்
3. திருவண்ணாமலைப் பதிகம்
எட்டாம் பாடல் வெளிறுபட விளையாடிய விகிர்தன் இராவணனை ஒன்பதாம் பாடல் விளவார் கனிபட நூறிய கடல் வண்ணனும்(திருமால்); கிளர் தாமரை மேலுறை கேடில் புகழோனும் (பிரமா)
4. திருவையாறுப் பதிகம்
எட்டாம் பாடல் அஞ்சாதே கயிலை மலையெடுத்த அரக்கன் தலைகள் பத்தும் ஒன்பதாம் பாடல் மாலொடு நான்முகனும் அறியா வகைநின்றான்
5. திருவலஞ்சுழி பதிகம்
எட்டாம் பாடல் கயிலைமலை பிடித்தெடுத்தவன் ஒன்பதாம் பாடல் மலர்மிசை அண்ணலும் அரவணைத் துயின்றானும்
இப்படியே அனைத்துப் பதிகங்களிலும் எட்டாம் ஒன்பதாம் பாடல்கள் அமைக்கப்பட்டிருக்கும். இது முதன் முதல் சம்பந்தர் கவிதை அமைப்பில்
புகுத்திய உத்தியென்று நாம் போற்றியிருக்க வேண்டும். நாம் செய்யவில்லை.