|

காஞ்சிப் பெரியவரும் – மாடு மேய்க்கும் சிறுவனும்.

ஒரு முறை காஞ்சிப் பெரியவர் யாத்திரை செய்த போது மழை காரணமாக ஒரு கிராமத்துச் சிவன் கோவில் ஒன்றில் தங்கினார். விசயம் அறிந்த அந்த ஊர் மக்கள் பெரியவரை வந்து வணங்கி சில நாட்கள் எங்கள் கிராமத்திலே தங்கிவிட்டுச் செல்லுங்கள் என்று வேண்டினார்கள்.

அவர்களின் அன்புக்காக பெரியவர் 21 நாட்கள் அந்தக் கிராமத்திலேயே தங்கினார். கீற்றுக் கொட்டகை வசதிகள் என்று பல உதவிகளைச் செய்த அந்த ஊர் மக்களால் சந்திரமவுலீஸ்வரர் பூசைக்கு வில்வம் கொடுக்க முடியவில்லை. அந்த ஊரில் வில்வமரம் இல்லை. அதனால் பெரியவரின் பூசையும் தடைப்பட்டு அவர் ஆகாரமும் உண்ணவில்லை.

இது அவருடன் வந்தவர்களுக்கும் கிராம மக்களுக்கும் மிகுந்த வருத்தம் அளித்தது. அந்தவூர் ஜமீன்தார் பல திசைக்கும் ஆட்களை அனுப்பித் தேடியும் சுற்றுப்புற ஊர்களில் கூட வில்வ இலை கிடைக்கவில்லை.

இந்நிலையில் ஒரு சிறுவன் தினமும் ஒரு கூடை நிறைய வில்வம் இலையை கொண்டுவந்து அங்கே வைத்து விட்டு யாருக்கும் தெரியாமல் போய்க் கொண்டிருந்தான்.

ஒருநாள் மறைந்திருந்து அவனைப் பிடித்த மடத்துச் சிப்பந்தி ஒருவர் விசாரித்த போது நான் ஜமீனிலே மாடு மேயப்பவன். ஜமீந்தார் வில்வம் தேடித் தவிப்பதைக் கண்டு அதைப்பறித்துக் கொண்டு வந்தேன். இப்போது என்னை விட்டுவிடுங்கள் நான் போய்க் குளித்து உடைமாற்றிக் கொண்டு கண்டிப்பாக வருவேன் என்று சொன்னான்.

சொன்னபடியே மாலையில் வந்த அவனை பெரியவர் யாரப்பா நீ உனக்கு எப்படி வில்வம் கிடைத்தது என்று கேட்டார். அதற்கு அவன் என் பெயர் புரந்தர கேசவன் எங்கள் ஊர் மதுரைக்குப் பக்கத்திலே உசிலம்பட்டி. எனக்கு அம்மா இல்லை. அப்பா ஜமீனில் மாடு மேய்த்தார். இப்போது அவரும் இல்லை. நான் தான் இப்போது ஜமீனில் மாடுகளை மேய்கின்றேன்.

ஒருமுறை மாடுகளை மேய்க்கும் போது என் அப்பா கேசவா இது தானடா வில்வ மரம். இதன் இலையாலே அருச்சனை பண்ணுவது சிவனுக்கு மிகவும் பிடிக்கும் என்றார். அந்த மரம் அங்கே இருப்பது யாருக்கும் தெரியாது. அதனால் நானே நான்குமலை தாண்டிப் போய் பறித்து வந்தேன்.

மாடு மேய்பவன் கொடுத்தால் பூசைக்கு எடுப்பார்களோ தெரியாது என்று நினைத்து தான் யாருக்கும் தெரியாமல் வைத்துவிட்டுப் போனேன் என்றான்.

அவன் தலையை அன்போடு தடவிய பெரியவர் உனக்கு ஏதாவது தேவைன்றால் கேள் தருகின்றேன் என்றார். அதற்கு அந்தச் சிறுவன் எனக்கு நன்றாகப் பாடத் தெரியும். இங்கே நீங்கள் பூசை செய்யும்போது நான் பாடுவதற்கு அனுமதிக்க வேண்டும். இது முதலாவது இன்னொன்று இங்கிருந்து நீங்கள் புறப்படும் போது கேட்கின்றேன் என்றான்.

அந்த ஊரை விட்டுப் பெரியவர் கிளம்பும் நேரம் வந்ததும் அவர் கண்கள் கேசவனைத் தேடின. அதை உணர்ந்து அவருக்கு முன்னால் அவனை அழைத்து வந்து விட்டனர் ஊர் மக்கள்.

கேசவா நான் போகும் போது அடுத்த விருப்பததைச் சொல்கிறேன் என்றாயே இப்போது கேள் உனக்கு என்ன வேண்டும்

சாமி மாடு மேய்க்கும் போது அப்பா சொல்வார் இதோ பார் கேசவா கடவுளிட்டை ஒன்றை மட்டும் தான் கேட்கணும். செத்திட்டோம் என்றால் மோட்சம் கிடைக்க வேண்டும் என்று மட்டும் தான் கேட்கணும். அதனாலே எனக்கும் செத்த பிற்பாடு மோட்சம் கிடைக்க அருள் செய்யுங்கள் என்றான்.

பெரியவர் உட்பட அனைவருமே அதிர்ந்து போனார்கள். பெரியவர் அவன் தலையைத் தடவி உரியகாலம் வரும் போது உனக்கு மோட்சம் கிடைக்க சந்திரமௌலீஸ்வரரை வேண்டிக்க்றேன் போதுமா என்றார்.

பின்பு ஜமீன் பெரியவரை அழைத்து இந்தச் சிறுவன் தொடர்பான செய்திகளை மடத்துக்கு அறிவித்துக்கொண்டே இருங்கள் என்று கூறிவிட்டுச் சென்றார்.

காலங்கள் ஓடின. என்றுமில்லாதவாறு ஒருநாள் காஞ்சி மடத்திலே காலையிலேயே தியானத்தில் அமர்ந்த பெரியவர் இடையில் எழுந்து காமாட்சி அம்மன் கோவில் புட்கரணி குளத்திலே தோய்ந்துவிட்டு வந்து தியானத்தை தொடர்ந்தார் பின்பு மீண்டும் எழுந்து சென்று குளத்தில் நீராவிட்டு வந்து தியானத்தில் அமர்ந்தார்.

இவ்வாறு காலையில் தொடங்கி இரவு வரை ஆறு முறை நீராடினார். தியானத்தில் அமர்ந்தால் அது முடியும் வரை பெரியவர் எங்கும் எழுந்து செல்வதில்லை.

சற்று நேரத்தில் கேசவன் உடல்நிலை மோசமாக இருப்பதாக தந்தியொன்று வந்தது. மனேஜர் வந்து அதைச் சொன்னபோது பெரியவர் புரந்தர கேசவன் இப்போது இல்லை.

அவன் இன்று மதியமே விசச் சுரத்தினால் இறந்து போய்விட்டான். இறந்து இன்னொரு பிறவியும் எடுத்துவிட்டான்.

அவனுக்கு இன்னும் ஆறு பிறவிகள் இருக்கின்றன. அதனால் நான் ஆறு முறை நீராடி அந்த ஆறு பிறப்பும் முடிய அவன் மோட்சம் அடைய வேண்டும் என்று சந்திரமௌலீஸ்வரை வேண்டித் தவம் பண்ணினேன் என்றார்.

இரா.சம்பந்தன் (படித்ததில் பிடித்தது)

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.