காம தகனமும் அணுக்கதிர் இயக்கமும்!

நுனிப் புல் மேய்ந்த பலரால் பொய்யுரை என்று ஒதுக்கப்பட்ட ஒரு வரலாறு கச்சியப்பரின் கந்த புராணம் ஆகும்! ஆனால் கந்தப் புராணத்தை ஆழ்ந்து நோக்குவோருக்கு அதில் காட்டப்படும் பல சம்பவங்கள் இன்றைய மனித குலம் எட்டாத விஞ்ஞான முடிச்சுகளாகவே தெரிகின்றன.
அதில் ஒன்றுதான் காமன் எனப்படும் மன்மதன் எரியூட்டப்பட்ட காமதகனப் படலம். அசுரர்கள் என்னும் எதிரிகளால் மிகவும் துன்பம் உற்ற தேவர்கள் தங்கள் துன்பத்தை இறைவனிடம் முறையிட நான் ஒரு மகனைப் பெற்றுத் தருகின்றேன். அந்தக் குழந்தை அசுரர்களை அழித்து உங்களைக் காப்பாற்றும் என்று இறைவனும் சொல்லி விடுகின்றான்.

அப்படிச் சொன்ன இறைவன் மனைவியுடன் சேர்ந்து குழந்தையைப் பெறும் முயற்சியில் இறங்காமல் கண்களை மூடித் தனியாக தவ நிலையிலே அமர்ந்து விடுகின்றான். அதனைக் கண்ட தேவர்கள் இறைவனின் தவ நிலையைக் குலைத்து மனைவியிடம் ஆசை கொள்ள வைக்க காதல் தெய்வமான மன்மதனின் உதவியை நாடுகின்றார்கள்!
இந்த மன்மதன் காம இன்பத்துக்குப் பொறுப்பானவன். அவனது வில் கரும்பு. அம்புகள் நீண்ட காம்புடன் கூடிய ஐந்து மலர்கள். அவன் மனைவி அழகுக்குப் பெயரெடுத்த ரதி! அவள் தன் கணவனை விட்டு என்றும் பிரியாதவள். பிறர் மீது தன் மலர் அம்புகளைச் செலுத்தி அவர்களை காதல் உணர்வுக்கு ஆளாக்குவது மன்மதன் தொழில்!
அவனின் உதவியைத்தான் தேவர்கள் கோரினார்கள். இறைவன் என்றவுடன் முதலில் மன்மதன் பயந்து மறுத்தான். தேவர்கள் கட்டாயப் படுத்தினார்கள்! இந்தத் தேவர்கள் கையால் சாவதை விட இறைவனின் மீது அம்பு செலுத்தி அவன் கோபத்துக்கு ஆளாகி இறந்து விடுவோம் என்று இறைவன் இருக்கும் கயிலை மலை சென்றான் மன்மதன். ரதியும் கூடப் போனாள்!
அவன் இறைவனை மயக்கி காதல் உணர்வைத் தூண்டுவதை விடுப்புப் பார்க்க தேவர்களும் கயிலை மலையில் முகாம் இட்டார்கள். இவ்வளவும் புராணக்கதை! இது உண்மையா? பொய்யா? என்பது அல்லப் பிரச்சனை! மன்மதன் இறைவன் மீது மலர் அம்பை ஏவியதும் என்ன நடந்தது என்பது தான் இங்கே விவாதப் பொருளாகி விடுகின்றது.
மன்மதன் ஏவிய ஐந்து மலர் அம்புகளும் இறைவன் மீது பட்டதும் தவ நிலை குழம்பிய இறைவன் நெற்றிக் கண்ணைத் திறந்து சிறிது பார்த்தான்! பார்த்தது கணப் போது தான்! அந்தக் கண்ணிலே இருந்து தோன்றிய நெருப்பு நீளமான கோடு போலச் சென்று மன்மதன் மீது பட்டு அவனைச் சுட்டு எரித்தது. அப்போது அந்தக் கயிலை மலை முழுவதும் புகை மண்டலம் பரவியது!
விட்ட வெம் பகழி ஐந்தும் வியத்தகு விமலன் மீது
பட்டலும் சிறிதே வேளை பார்த்தனன் பார்த்தல் ஓடும்
கட்டுஅழல் பொதிந்த நெற்றிக் கண்ணது நெடிதே காமன்
சுட்டது கயிலை முற்றும் சூழ்புகை பரவிற்று அன்றே!

 

இறைவனின் தாக்குதலில் மன்மதன் இறந்து கூட விழவில்லை! அப்படியே பவுடராக சாம்பலாகி விட்டான்! இதைக் கச்சியப்பர் கண் அழல் சுடுதல் ஓடும் காம வேள் யாக்கை முற்றும் சுண்ணம் (சாம்பல்) அது ஆகி வீழ! என்று அழகாகக் காட்டுவார் கந்தப் புராணத்தில்.

கண் அழல் சுடுதலோடும்
காமவேள் யாக்கை முற்றும்
சுண்ணம் அது ஆகி வீழத்
துஞ்சினன் போய பின்னை
அண்ணல் அம்பகவன் தொல்லை
அமைதியின் இருந்தான் எல்லாம்
எண்ணி நின்று இயற்றும் எம்கோற்கு
இனையதோ அரிது மாதோ.

மன்மதனைத் தாக்கி விட்டு இறைவன் எதுவுமே நடக்காதது போல அடைதியாகப் பழையபடி தவத்தில் இருந்துவிட்டான். புராணத்தை இந்த அளவுடன் நிறுத்திக் கொண்டு கச்சியப்பர் சொன்னவற்றை இன்றைய விஞ்ஞான மேடைக்குக் கொண்டு செல்கின்றோம்! இங்கே தெரிந்தோ தெரியாமலோ கச்சியப்பர் சொன்னது அணு ஆயுதத் தாக்குதல் பற்றிய செய்திதான்!

ஒரு எதிரியால் தாக்கப்பட்டதும் இறைவனின் நெற்றிக் கண் திறந்து கொள்கின்றது. அது நெற்றிக் கண்ணா அல்லது நெற்றியில் கண் போல அமைக்கப்பட்ட ஆயுதமா? என்பது இன்னொரு ஆய்வுக்கு உரிய விடயம்! திறந்த கண்ணில் இருந்து தோன்றிய நெருப்பு எங்கும் சிதறி விழவில்லை. அதைக் கட்டு அழல் என்றார் கச்சியப்பர். அதாவது ஒழுங்கு படுத்தப்பட்ட கோடு போல அந்த நெருப்பு நேராகச் சென்று மன்மதன் மீது படுகின்றது.

இது தான் இன்றைய அதி நவீன அறிவியல் கண்டுபிடித்த லேசர் தாக்குதல்! இறைவன் கண்ணிலோ அல்லது கண் போன்ற எதிலோ இருந்து தோன்றிய லேசர் கதிர்கள் கணவன் மனைவியாக அருகருகே நின்ற மன்மதன் ரதி என்ற இருவரில் மன்மதனை மட்டும் தாக்குகின்றது. சிந்தியுங்கள்! ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகி சாம்பலாகி விடுகின்றார்! அருகே நின்றவருக்கு ஒன்றும் நடக்கவில்லை!

இது தானே இன்றைய லேசர் யுகம்! லேசர் கதிரின் தத்துவம் என்ன? மருத்துவத் துறையில் ஆகட்டும் வேறு எந்தத் துறையில் ஆகட்டும் குறித்த இலக்கை மட்டும் தானே லேசர் கதிர்கள் தொடுகின்றன! இங்கே கந்தப் புராணத்திலும் ரதியை விட்டு மன்மதனை எரிக்கின்றது அந்த நெருப்பு.

இனி அடுத்த ஆதாரத்துக்கு நாம் சென்றால் மன்மதன் மனிதனோ தேவனோ ஆனால் ஒரு உருவத்தோடு கூடியவன். மனிதன் என்று பார்த்தாலும் ஒரு கணத்திலே ஒரு மனித உடலை எரித்துச் சாம்பல் ஆக்குவதற்கு எத்தனை டிக்கிரி வெப்பம் உள்ள நெருப்புத் தேவைப்படும்! அவ்வளவு வெப்பம் உள்ள நெருப்பு பட்டு மன்மதன் சாம்பல் ஆகிய போது அந்த நெருப்பின் வெம்மையை பக்கத்தில் நின்ற ரதி உணர முடியவில்லை. இதற்கு இன்றைய விஞ்னானம் சொல்லும் பதில் என்ன?

அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்று மறுக்குமா இன்றைய விஞ்ஞானம்? கயிலை மலை தேவர்களும் மற்றவர்களும் கூடி நின்ற இடம் என்றால் எந்தப் பெரிய தேசமாக இருக்க வேண்டும். அந்த மலை முழுவதும் மன்மதனை எரித்த போது புகை பரவிற்று என்று இன்னுமொரு செய்தியைச் சொல்கிறாரே கச்சியப்பர்.

ஆலை அம் சிலைவேள் ஆகம்
அழல் படக் கயிலையின் கண்
ஏல வெம் புகையும் தீயும்
எழும் தரும் இயற்கை நாடின்
மால்அயன் முதலோர் யாரும்
மதித்துழி விரைந்து பாலின்
வேலையின் நடுவு தீய
விடம் எழுந்து அனைய அம்மா.

கயிலை மலை முழுவதும் புகை பரவுகின்றது என்றால் அந்த நெருப்பின் சக்தி எப்படிப் பட்டதாக இருந்திருக்க வேண்டும்! அந்தப் புகை கயிலை மலையின் குணதிசை எனப்படும் கிழக்கு வாயிலையும்  அடைகின்றது. அங்கே இறைவனின் பாதுகாப்பு அதிகாரி போல செயல்படும் நந்தி தேவர் அந்தப் புகையைப் பார்த்தார்.

உடனே அங்கே இருந்தவர்களிடம் அவர் இறைவனின் நெற்றிக்கண் தாக்குதலுக்கு இலக்காகி மன்மதன் எரிந்து சாம்பலாகி விட்டான் என்று சொல்கின்றார்.

நுண்ணிய உணர்வின் மிக்கீர்
நுமக்கு இது புகல்வன் எம்கோன்
கண் நுதல் உமிழ்ந்த செம் தீக்
காமனைப் பொடித்தது அன்றால்
அண்ணலை எய்வன் என்னா
அனையவன் துணிவில் கூறித்
துண் என ஈண்டு வந்த
செயற்கையே சுட்ட போலும்.
புகையை வைத்து நடந்த தாக்குதல் பற்றிய செய்தியைத் தெரிவிக்கும் ஆற்றல் நந்தி தேவருக்கு இருந்தது என்றால் இறைவன் யாரைத் தாக்குவது என்றாலும் இந்த வகையான தாக்குதலைத் தான் செய்வான் என்ற உண்மை நந்திக்குத் தெரிந்திருக்கின்றது.

ஏனெனில் இதற்கு முன்பு முப்புரங்களை இறைவன் அழித்த போதும் இதே வகையான தாக்குதலைத் தான் செய்திருக்கின்றான். நக்கீரரை எரித்ததும் இதே தாக்குதல் நெறி முறையில்தான்! இறைவன் யாரையும் வெட்டினான் குத்தினான் அடித்தான் என்று வரலாறு இல்லை!

சில சந்தர்ப்பங்களில் சிலரை உருவாக்கி அவர்கள் மூலம் சில கொலைகளை இறைவன் செய்திருக்கிறான்! அந்தச் சிலரும் ஏதாவது அணுத் தொழில் நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட இயந்திர மனிதர்களைச் சார்ந்தவர்களா? அப்படிச் செய்யும் திறனை இறைவன் அறிந்து வைத்திருந்தானா என்பதும் யாருக்கும் தெரியவில்லை!

நெற்றிக்கண்! தீப்பிழம்பு சாம்பலாக்கும் அழிப்பு இதைத் தவிர இறைவன் வேறு வழியை தாக்குதலுக்குக்  கையாளவில்லை! ஒரு புராணம் அல்ல வேறுபட்ட எத்தனையோ புராணங்களும் இதிகாசங்களும் இந்த நெற்றிக் கண்ணையும் அதன் தாக்குதல் திறனையும் வியாபித்துச் சொல்வதற்கு ஏதோ காரணம் இருக்கிறது. அதை முழுவதும் பக்தி வெறி என்று நாம் ஒதுக்கிவிட முடியாது!

இனி முப்புரம் எரித்ததை உள் இறங்கிப் பார்த்தால் பொன் வெள்ளி இரும்பு என்ற மூன்றினாலும் மூன்று அசையும் கோட்டைகளைக் கட்டிக் கொண்டு தாரகாட்சன் கமலாட்சன் வித்துன்மாலி என்ற அசுரர்கள் அட்டகாசம் செய்த போது அந்தக் கோட்டைகளை இறைவன் தாக்கினான்.

அங்கேயும் அவன் லேசர் தாக்குதல் முறையைப் பின்பற்றுகிறான். லேசர் கதிர்கள் நேர் கோட்டில் தான் செல்லும்! மூன்று கோட்டைகளும் ஒரு நேர் கோட்டில் வரும் வரையும் பொறுத்திருந்து தான் இறைவன் தன் தாக்குதலை மேற்கொண்டான். லேசர் பற்றி இன்றைய விஞ்ஞானிகள் கனவு கூடக் காணாத காலத்தில் நடந்த தாக்குதல் இது.

எத்தனையோ அறிவியல் செய்திகளைத் தம்மகத்தே கொண்டிருந்தும் புராணங்கள் ஒரு கோட்பாட்டுக்காக தங்கள் கண்டுபிடிப்புக்களை எல்லாம் காவு கொடுத்து விட்டு பொய் என்ற பெயரோடு பரிதாபமாக நிற்கின்றன. அந்தக் கோட்பாடு இறைவனுக்கு மேலே எதுவும் இல்லை என்பதை நிறுவுவது தான்.

இறைவனைப் பெருமைப் படுத்த தம்மைச் சிறுமைப் படுத்திக் கொண்டனர் புராண முன்னோடிகள்! அதற்கு நல்ல உதாரணம் முப்புரம் எரித்த செய்தி. லேசர் நேர் கோட்டில் தான் செல்லும். அதைக் கொண்டு முப்புரத்தைத் தாக்க வேண்டும் என்றால் விண்வெளியிலே அந்த மூன்று கோட்டைகளும் ஒரு நேர் கோட்டில் வரும் போது தாக்க வேண்டும். அப்படித்தான் இறைவன் தாக்கினான் என்று உண்மையை எழுத வில்லை இந்தப் புராண முன்னோடிகள்!

மாறாக முப்புரத்து அசுரர்கள் எங்களின் மூன்று கோட்டைகளும் ஒன்றாக வரும்போது இறைவன் எங்களை ஒரே தாக்குதலில் அழித்தால் ஒழிய மற்றப்படி நமக்கு அழிவு வரக்கூடாது என்று பிரமாவிடம் வரம் பெற்றுக் கொண்டார்கள். அதன் படியே இறைவன் செய்தான் என்று எது உண்மையோ அதை மறைத்து இறைவனைப் பெருமைப்படுத்த முயன்றதால் புராணங்கள் தோற்றுப் போயின.

தன் தாக்குதல் வெற்றிபெற இறைவன் மூன்று கோட்டைகளும் நேர் கோட்டில் வரும் வரை அமைதி காத்தான் என்று உண்மையை எழுதினால் இறைவனுக்கு இழுக்கு என்ற நினைப்பில் இருந்து விடுபட்டு அன்று சுயாதீனமாக புராணங்கள் எழுதப் பட்டிருக்குமேயானால் இன்றைய நாசாவுக்கும் அவை வழி காட்டியாக இருந்திருக்கும்!

தமிழர் தகவல் 23 வது ஆண்டுமலரில் 15.2.2014 வெளியான கட்டுரை

 

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.