தமிழ்க் கொலை செய்கின்றார்கள்!
நன்றாகத் தண்ணி போடும் ஆசிரியர் ஒருவரைக் கல்வி அமைச்சு மது போதையில் பள்ளிக்கு வந்த குற்றத்துக்காக இடமாற்றம் செய்கின்றது. அவர் புதிய ஊருக்கு வருகின்றார். இந்தச் செய்தியைப் போட்டு அந்த ஊரிலே திரும்பிய பக்கமெல்லாம் மதுக்கடை இருக்கு என்று இன்னொரு செய்தியையும் ஒருபத்திரிகை சேர்த்து வெளியிட்டால் வாத்தியார் நல்ல இடத்துக்கு தான் வந்திருக்கின்றார் என்று நாம் நினைப்போம் அல்லவா
இது போன்ற ஒரு செய்தியைத்தான் சேக்கிழார் சுந்தரரைப் பற்றித் தன் முதல் பாட்டிலேயே சொல்லுகிறார்.
கங்கையும் மதியும் பாம்பும் உருத்திராக்கமும் முடியிலே வைத்துக் கொண்ட சிவபெருமான் அடிமை ஓலையைக் காட்டி ஆண்டு கொண்ட சுந்தரருக்கு நாடு எது தெரியுமா?
குளிர்ச்சி பொருந்திய சந்திரனைப் போல முகத்தை உடைய பெண்கள் கயல் மீன்களைப் போன்ற தங்கள் கண்களை கருப்பு மையினால் காதுத் தோடு வரை இழுத்து நீட்டித் தங்களை கவர்ச்சியாக வைத்திருக்கும் திருமுனைப்பாடி நாடு ஆகும் என்றார் சேக்கிழார்.
கங்கையும் மதியும் பாம்புங் கடுக்கையு முடிமேல் வைத்த
அங்கணர் ஓலை காட்டி ஆண்டவர் தமக்கு நாடு
மங்கையர் வதன சீத மதியிரு மருங்கு மோடிச்
செங்கயல் குழைகள் நாடுந் திருமுனைப் பாடி நாடு
பாலியல் குற்றத்தில் சிக்குண்டு பூமிக்கு இடமாற்றம் செய்யப்பட்ட சுந்தரர் வந்த இடமும் அந்தக் குற்றங்களைச் செய்யகூடிய இடமாகவே இருக்கப்போகின்றது. பரவை சங்கிலி காதல் பிரச்சனைகள் பின்னாலே நிகழப் போகின்றன என்பதை எதிர்வு கூறவே சேக்கிழார் இப்படிப் பாடல செய்தார்.
ஆனால் பின் நாளில் சுந்தரர் பாடப்போகும் திருத்தொண்டர் தொகையை கேட்கப் போவன காதுகள் எங்களாலே அது முடியாதே என்று ஏக்கத்தோடு கண்கள் காதைப்பார்க்கின்றன என்று சமயச் சொற்பொழிவு செய்கிறார்கள் பலர். இது தவறான உரை. இவர்கள் சொல்வது உண்மையென்றால் ஏன் பெண்கள் என்று சேக்கிழார் சொல்ல வேண்டும். திருமுனைப்பாடி நாட்டிலே ஆண்களுக்கு காது கேளாதா என்ன?
தங்களுடைய வித்துவத் தன்மையைக் காட்டுவதற்காக எளிமையாக பொருள் சொல்ல வேண்டிய இடங்களிலெல்லாம் தத்துவ வியாக்கியானங்களைப் பேசி பல பெரியவர்கள் சைவ நெறியை மக்கள் மனத்தை விட்டுத் தூரக் கொண்டு போகின்றார்கள். இது தமிழுக்கு நல்லதல்ல.
தமிழ் படிக்காதவனால் மட்டும் அழியவில்லை. படித்தவனாலும் அழிந்து கொண்டிருக்கின்றது.
இரா.சம்பந்தன்.