குடும்ப வாழ்வும் – கத்தரிக்கோலும்!
வாழ்க்கையிலே கணவன் மனைவி இருவரும் கத்திரிக்கோல் போல வாழ வேண்டும்.
கத்திரிக்கோலிலே இரண்டு கத்திகள் ஒரு ஆணியாலே பிணைக்கப்பட்டிருக்கும். இரண்டு கத்திகளும் அசையும் போது ஒன்றையொன்று வெட்டிக் கொள்வதைப் போல பாவனை காட்டும். ஆனால் அந்தக் கத்திகள் ஒன்றையொன்று காயப்படுத்துவதில்லை. தங்களுக்கு இடையே புகும் இன்னொன்றைத் தான் அந்தக் கத்திகள் ஒற்றுமையாகச் செயற்பட்டு வெட்டிச் சேதப்படுத்துகின்றன.
அது போல குடும்ப வாழ்வில் கணவனும் மனைவியும் கத்திரிக்கோல் போன்று கூர்மையான அறிவோடு அன்பு என்கின்ற ஒரு ஆணியிலே நெருக்கமாக இணைந்து வாழ்ந்து கொண்டு தங்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சனைகளை மட்டும் ஒற்றுமையாகச் செயற்பட்டு துண்டாடி அழிக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
வாரியார் சுவாமிகளின் காரைக்கால் அம்மையார் புராண விரிவுரையில் இருந்து