மழைநாளில் இணுவில்!
இரா.சம்பந்தன் கவிதைகள்.
மழைநாளில் இணுவில்!
பெருங்கதைக்கு மழைவந்து வெள்ளம் போடும்!
பெருகியது குளக்கரையில் தஞ்சம் கோரும்
கரும்பனைகள் இடுப்பளவு நீரில் நிற்கக்
கருந்தவளைக் கூட்டமெலாம் மிதந்து ஓடும்!
குரும்பைதிகழ் தென்னைமரம் காற்றில் ஆட
குருவியெலாம் சிறகடித்துச் சத்தம் போடும்
திருவிளக்குச் சனம்போல எறும்பு வந்து
திண்ணையெலாம் ஊருமெங்கள் இணுவை யூரில்!
பள்ளியெலாம் விடுமுறைதான் மழைக்கு நாங்கள்
பழஞ்சாக்குத் தலைபோர்த்து வெளிக்குப் போவோம்!
வெள்ளிக்குடம் சருவமெலாம் பீலித் தண்ணீர்
வேண்டுமென அடம்பிடிக்கும்! முற்ற வெள்ளம்
தள்ளிக்கொண்டு போகுமெங்கள் தோணி தன்னைத்
தாள்நனைந்து கிழியும்வரை இருந்து பார்ப்போம்
புள்ளிச்சிற குதறிவரும் கோழிக் கூட்டம்
பொத்திவைத்த கடகமெலாம் துள்ளி ஏறும்!
சட்டியிலே தான்கிடந்து புகையும் வேம்பின்
சதையிழந்த வித்துகளால் நுளம்பு ஓடும்!
குட்டியிலே இருந்துவரும் நாயும் தௌ;ளின்
குற்றத்தைப் பொறுக்காமல் குரைத்துக் கொள்ளும்
முட்டியிலே சுரந்தகள் வீணாயப் போகும்
முழுவதுமே மழைநீரால் எங்கள் ஊரில்
தட்டியிலே செருகிவைத்த புகையிலை கூடத்
தானிழகி நைந்துவிடும் மழையால் அங்கே!
ஒளிகொடுக்கும் கைவிளக்கை காற்று வந்து
ஒத்திவிடாச் சுவர்மூலை வைப்பாள் அம்மா
வெளிவளவு வேம்பிருந்து ஆந்தை கத்த
வெளிறிமுகம் பயத்துடனே ஆச்சி சொல்லும்
புளியமரப் பேய்க்கதைகள் கிடந்து கேட்ட
பொன்னான நாளெல்லாம் தொலைத்து இங்கே
துளியளவும் இன்பமில்லா இடத்தில் வந்து
தூங்குகிறோம் இணுவிலெனும் தொட்டில் விட்டே!