|

காலத்தின் கோலங்கள்

வார்த்தையெனும் இரைபிணைத்த கடிதத் தூண்டில்
வலையுடனே காதல்பட கிருந்து செல்வி
கோர்த்தெடுத்து வீசிடவே தேவன் என்னும்
கொள்கையெனும் முள்விரிந்த மீனும் கண்டு
ஆர்த்தெழுந்து அதையெறிந்த செல்வி கையை
ஆசையெனும் நாநீட்டி அன்பாய் நக்கிச்
சேர்த்தணைக்க சுவைத்துணர மகிழ்வாய்த் தூங்க
சிந்தனையாம் அலைபுரண்டு எழுத்தில் நீந்தும்.

திண்ணியதோர் கருத்தெழுதித் திடத்தை ஈந்த
தேன்கரும்பே சிவச்செல்வி திருவே நானும்
எண்ணியநாள் இருமூன்று ஆறாம் தேதி
எழுகின்ற சனிக்கிழமை எங்கே என்றால்
கண்மணியே காரைநகர்க் கசுவரினா மண்ணில்
காலைமணி எட்டடிக்க நிற்பேன் நம்பு
பெண்ணுனக்குக் கிட்டடிதான் பீச்சும் ஆனால்
பிற்பகலே சனங்கூடும் விடிய நீவா

காதலெனும் நாய்வேடம் போட்டால் பிள்ளை
கள்ளத்தனம் என்கின்ற வாலை ஆட்டி
வீதிவழிப் போக்கனெனும் நேர்மை தன்னை
விரட்டிவிட நாநீட்டிக் குரைத்தல் வேண்டும்
ஆதலினால் தான்செல்வி அறிவைத் தந்த
ஆசிரியன் நானுமக்கு இதனைச் சொன்னேன்
பாதகமோ சாதகமோ பழியோ பாராப்
பனிபடர்ந்த வழிக்குமமை இழுக்கின்றேன் நான்.

குருவடிவு கொண்டுவந்த கடவுள் என்று
கும்பிட்ட காலமது கரைந்து பின்னால்
ஒருவகுப்பு மாணவர்கள் ஒன்றாய்ச் சேர்ந்து
ஒற்றுமையைய் எழுந்துநின்று வணக்கம் சொல்லி
இருமெனவே ஆசிரியன் கையைக் காட்ட
இருந்தமர்ந்து படிக்குநாள் தோன்றிற் றன்றோ
அருவெருப்பு செயலின்று உபாத்தி யாயர்
ஆகியநாம் கொள்ளுகின்ற காதல் காலம்.

இப்படித்தான் இப்படித்தான் இனிமேல் பள்ளி
இப்படித்தான் நடக்குமினி வருங் காலத்தில்
எப்படியோ போங்களென நல்லார் எல்லாம்
நாணமுறத் தலைகவிழும் நாட்கள் தோன்றும்
கொப்பமர்ந்து வாழுகின்ற குரங்குக் கூட்டம்
கூடுகின்ற இடமாகப் பள்ளி மாறி
அப்புறமாய் இப்படித்தான் போகும் என்ற
அதைக்காட்ட எம்காதல் ஒன்றே போதும்

விதிகாட்டும் திசையினிலே வாழ்வு போகும்
விழைவுகளும் முடிவுவுகளும் விதியே காட்டும்
அதிகாரம் எதுவுமிலை எவர்க்கும் வாழ்வில்
ஆதலினால் நடப்பதையே கண்டு கொள்வோம்
புதிதாக வழிகாட்டி எங்கள் காதல்
போகட்டும் வந்துவிடு என்றே தேவன்
மிதியாத புதவழியில் செல்விக் காக
மெல்லவொரு பதிலெழுதித் தானும் போட்டான்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.