விழியும் துளியும் முன்னுரை

 

விழியும் துளியும்

சிறுகதைத் தொகுதி

முன்னுரை

ஈழநாடு பத்திரிகையில் என்னால் எழுதப்பட்ட சிறுகதைகளின் இரன்டாவது தொகுப்பாக விழியும் துளியும் என்ற இந்நூல் வெளிவருகின்றது. தவழ்ந்தும் எழுந்தும் நடந்தும் நிலைத்தும் நின்ற விடுதலைப் போராட்டம் ஏறக்குறைய மரணித்து விட்ட நிலையில் அது தொடர்பான அர்த்தமில்லாத சில சிறுகதைகளையும் இன்று தாங்கி நிற்கின்றது இந்த நூல்.

கதைகள் தான் பெறுமதி இழந்து போய்விட்டன என்றாலும் என் எழுத்தையும் அந்த எழுத்துக்கள் தொடும் கருப்பொருளையும் தவிர்த்துவிட என் மனம் இடந்தரவில்லை. ஒரு காலத்தின் சின்னங்களாக என்றாலும் அந்தத் தோற்றுப் போன கருத்துக்கள் இங்கே இருந்து விட்டுப் போகட்டும்.  

எனது நாட்டிலே சிதறிக் கிடக்கும் வெற்றுத் தோட்டாக்கள் என் உறவுகள் சென்ற திசையை மட்டுமே காட்டுகின்றன. இடிந்து கிடக்கும் வீடுகள் எங்கள் சொந்தங்களுக்கு நேர்ந்த கதியை மட்டுமே சொல்கின்றன. வட்டிழந்த பனை மரங்கள் நாங்களும் தான் என்கின்றன.

அந்த மண்ணிலே இருந்தும் இந்தப் புகலிட மண்ணில் இருந்தும் எத்தனையோ சம்பவப் பறவைகள் என் நெஞ்சிலே புகுந்து கூடுகட்டி வாழ்கின்றன. அவற்றில் சில இறகிற்குள் தலை புதைத்து அமைதியாகி விடுகின்றன. இன்னும் சில இரவு பகல் பாராமல் சிறகடித்துக் குரல் எழுப்புகின்றன. அமைதிபெற மறுக்கும் அந்தச் சிலதான் சிறுகதை என்னும் கூண்டில் இங்கே அடைக்கப்பட்டுள்ளன. அடைக்கப்பட வேண்டியனவோ இன்னும் பல.

ஆணவம் மிக்க பாத்திரங்களை நான் படைப்பதில்லை. என் பாத்திரங்கள் அறம் சார்ந்தவை. அதிர்ந்து பேசத் தெரியாதவை! சத்தியம் பேசுபவை. தெய்வ நம்பிக்கை மிக்கவை. எங்கள் சமுதாயத்தைக் கலங்கிய கண்களோடு பார்ப்பவை. மனித நேயம் மிக்கவை. அவை அடிக்கடி பயன்படுத்தும் மோனே என்ற சொற் பிரயோகம் வஞ்சம் கலவாத நெஞ்சத்தின் வெளிப்பாடு.

அவற்றைச் சிறுகதைகளில் கொண்டு வந்த பின்பு அவற்றிடம் எனக்கு அளவுகடந்த மரியாதை ஏற்பட்டு விடுகின்றது. அவை சாகா வரம் பெற்றவை. எனக்குப் பின்னும் வாழ இருப்பவை! எனவே அவற்றை நெறி பிறழ்ந்து அலைய நான் விடுவதில்லை.

இச் சிறுகதைகளை நான் ஈழநாட்டில் எழுத அதன் ஆசிரியர் பரமேஸ்வரன் தந்த ஆதரவு மிகவும் பெரியது. தேச விடுதலைக்குக் கள மாற்றங்களைக் கண்டு அஞ்சாது தொடர்ந்து எழுதிய விடுதலை இதழ்; ஈழநாடு. அதிலே என் சிறுகதைகளும் இடம்பெற்று இருக்கின்றன என்பது எனக்கு மகிழ்ச்சி! அவருக்கும்  என் நன்றிகள்.

வித்தும் நிலமும் போல என்னுடைய இந்தச் சிறுகதைத் தொகுதிக்கும் அணிந்துரை வேண்டித் தயக்கத்துடன் அணுகிய போது அதற்கு இசைவு தந்து இனியதொரு அணிந்துரையை வழங்கிய அதிபர் பெருந்தகை பொ. கனகசபாபதி அவர்களுக்கும் என் நன்றியும் வணக்கமும் உரியதாகுக.

உற்ற நோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் பெற்றியார் என்று வள்ளுவர் சொல்வாரே அந்தப் பெற்றியாராக இருந்து என் நூல்களுக்கு வெளியீட்டு உரை வழங்கும் கவிஞர் கந்தவனம் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

அது போலக் காணும் போதெல்லாம் ஊக்கமும் வாழ்த்தும் அருளும் ஆசிரியப் பெருந்தகை சிவநேசன் அவர்களுக்கும் நான் மிகுந்த நன்றி உடையவனாவேன்.

பெருமளவு அலுவலக வேலைகளின் இடையிலும் நான் வேண்டும் போதெல்லாம் பிரதிபலன் கருதாது எனது நூல்களை அழகுற வடிவமைத்துத் தரும் அருமை நண்பர் ஞானபண்டிதன் அவர்களுக்கும் அதனைப் பதிப்பித்துத் தரும் ஈழநாடு பதிப்பகத்தாருக்கும் என் நன்றிகள்.

எனது சிறுகதைகள் வெளிவரும் போதெல்லாம் வாசித்து அதன் குறை நிறைகளை எல்லாம் எடுத்துச் சொல்லி என்னை நெறிப்படுத்தியவர் பொதிகை ஜெகதீசன் அவர்கள். அவரின் உந்துதல் இல்லையானால் இந்நூல் இன்னும் பல ஆண்டுகள் உறங்கியிருக்கும். இந்நூலுக்கு அவர் தந்த புகழுரைக்கும் எனது நன்றிகள்.

வித்தும் நிலமும் என்ற என் முதல் சிறுகதைத் தொகுதிக்கு விமர்சனம் என்ற பெயராலே ப.ஸ்ரீஸ்கந்தன் அவர்களும் எஸ். கோகுலதாசன் அவர்களும் தந்த ஆக்கபூர்வமான கருத்துக்கள்; இந்த நூலை மேலும் வளப்படுத்த எனக்கு உதவின. அவர்களுக்கும் எனது நன்றிகள்.

என்னுடைய பல சிறுகதைகளுக்கு தன்னுடைய இனிய குரலால் உயிர் வடிவம் கொடுத்து வானலையில் ஏற்றி வீடுகள் தோறும் கொண்டு சென்று எனக்கும் ஒரு அங்கீகாரம் பெற்றுத் தந்தவர் கனேடியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் அதிபர் திரு இளையபாரதி அவர்கள். அவருக்கும் எனது நன்றிகள்.

மாறுபட்ட கொள்கைகள் வேறுபட்ட தளங்கள் என்று பிரிந்து நின்று எழுதினாலும் இலக்கியம் என்று வரும்போது வேறுபாடுகளை மறந்து நேசக்கரம் நீட்டும் எழுத்துலகப் பெருமக்கள் பலர் எனக்கு நட்பாக இருக்கிறார்கள். வாசகர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கும் நன்றிகள்.

வித்தும் நிலமும் போல இந்நூலும் ஒரு காலகட்டத்தில் வாழ்ந்த தமிழ் மக்களின் வாழ்வியலைப் பதிந்து வைத்து நாளை வரப்போகும் எமது எதிர்காலச் சந்ததியினருக்குச் சில செய்திகளைத் தெரிவித்து நிற்கும்.

 

ஸ்காபுரோ                                 இப்படிக்கு

30. 9. 2012                              இரா. சம்பந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.