|

கனவுகள் கலையும்போது!

இவ்வளவு நாளும் நீ வாங்கிய சாமான்களுக்கு காசு தராவிட்டாலும் பரவாயில்ல. இனிமேல் கடனுக்கென்று இந்தக் கடைக்கு வராதே. சத்தியமாய் தரமாட்டேன்.

திரும்பி நடந்தாள் சிவகாமி.

உயிரே போனதுமாதிரி இருந்தது அவளுக்கு. கடவுளே, இத்தனை பேருக்கு முன்னால எவ்வளவு அவமானம்? இந்த மூன்று நாட்களும் இருந்ததுபோல இன்றைக்கும் பேசாமல் இருந்திருக்கலாம். இன்று மாலைவரை அப்படித்தான் இருந்தாள். வீட்டின் பின்புறத்திலே இருந்து கண்ணீர் வடிக்கும் கணவனையும் அவன் கையில் இருந்த மகனின் படத்தையும் கண்ட பிறகுதான் கடைக்குப் புறப்பட்டாள் ஏதாவது வாங்க. ஆனால் மனம் நிறைய அவமானத்தைத்தான் வாங்க முடிந்தது.

என்ன பரமலிங்கம், ஒரு அரை கிலோ மாத்தானே கேட்டவள். பாவம் கொடுத்திருக்கலாமே என்று சிற்றம்பல வாத்தியார் கேட்டதும் இப்படி எத்தனை அரை கிலோ எவ்வளவு காலமாய்க் கொடுத்திருக்கின்றேன் என்று உங்களுக்குத் தெரியுமா வாத்தியார் என்று தொடங்கி தன்னைக் கடுமையாக பரமலிங்கம் விமர்சிப்பதும் அவள் காதில் விழுகிறது.

மீதியும் காதில் விழக்கூடாதே என்ற எண்ணத்தில் விரைவாக நடந்தாள். நாளைக்கு சண்டை தொடங்கப் போகிறது என்று கதைக்கிறார்கள். இனிக் கடையும் திறக்காது. பொம்பர் அடி எத்தனை நாளைக்குத் தொடரப் போகுதோ? இன்னும் எத்தனை நாள்களுக்கு பங்கருக்குள் இருக்க வேண்டி வருமோ?

சோளகக் காற்றிலே பனைமரத்து ஓலைகள் கலகலக்கின்றன. நிலவு வெளிச்சத்தில் அந்த ஒற்றையடிப் பாதையிலே கண்கள் பனிக்க நடந்தாள் சிவகாமி. பிள்ளைகள் இருவரும் அம்மாவின் வரவுக்காக முற்றத்து மணலிலே அமர்ந்திருக்கிறார்கள். மண்ணெண்ணெய் இல்லை. அவர்கள் இலாம்பு துடைத்து பல மாதங்களாகி விட்டன. அவர்களுக்கு விளக்கு வைக்கும் வேலையும் இல்லை. சமைக்க ஒன்றுமில்லை. பள்ளிக்கூடம் இல்லை. அதனால் படிக்கவும் ஒன்றுமில்லை. அவர்கள் முற்றத்து மணலிலே அமர்ந்திருக்கிறார்கள்.

செல் விழுந்து சிதைந்து போன அடுப்படிச் சுவரினாலே தாவிக்குதித்த நாய், எங்கு தேடியும் எதுவும் கிடைக்காமல் பழைய பாத்திரங்களை மட்டும் தட்டி வீழ்த்திவிட்டு திரும்புகிறது. அதைக்கூட அவர்கள் விரட்டவில்லை. இன்னும் கொஞ்ச நாளில் அந்த நாய் அதைக்கூட செய்யப்போவதில்லை. அது செத்துப் போகும். அதனால் அதை அவர்கள் விரட்டவில்லை.

துன்பத்தின் நடுவிலும் சிவகாமிக்கு ஒரு நிம்மதி. கடைக்குப் போகிறேன் என்று அவள் சொல்லிவிட்டுப் போகவில்லை. அதனால் அம்மா ஏதாவது கொண்டு வருவாள் என்று அவர்கள் எதிர்பார்க்க மாட்டார்கள்.

அப்பா, எங்கே பிள்ளைகள்.
உள்ளே படுத்திருக்கிறார்கள் அம்மா.

சிவகாமி எட்டிப் பார்த்தாள். மாரிமுத்தர் நிமிர்ந்து படுத்திருந்தார். கூரைத் துவாரங்கள் ஊடாக உள்ளே நுழையும் நிலவு வெளிச்சம் மானுக்கு இருப்பதுபோல அவரது உடம்பெல்லாம் புள்ளி போட்டிருந்தது.

மூன்று நாட்களாக அவருக்கு சாப்பாடு இல்லை. அவருக்கு மட்டுமென்ன பிள்ளைகளுக்கும் சிவகாமிக்கும் தான். சிவகாமிக்கு பசி ஒரு பிரச்சனை இல்ல. ஆனால் பிள்ளைகள். கல்யாணம் கட்ட வேண்டிய வயசு. பசி கிடந்து கிடந்து கண்களும் குழி விழுந்து கன்னமும் ஒடுங்கிப் போன அவர்களைப் பார்க்கும்போது சிவகாமிக்குப் பொறுக்க முடிவதில்லை. அந்தக் கவலையோடு மாரிமுத்தரின் இன்றைய கண்ணீரும் சேர்ந்து கொண்டது அவள் மனதில்.

கல்யாணம் கட்டி இருபத்தெட்டு வருசம். ஒரு நாள்கூட அவர் இப்படிக் கண்ணீர் விட்டதில்லை. எப்ப பார்த்தாலும் புன்னகையும் பொலிவுமாய் இருக்கும் இந்த மனுசனின் கண்களிலே கண்ணீர் ஏன்? பசியா? இருக்காது. கந்தசட்டி விரதமென்றால் ஆறு நாளும் ஒரு மிடறு தண்ணீர் கூட உள்ளே நுழையாத உடம்பு. அதற்கு பசியில்லை.

எல்லாம் இந்த வசந்தன் பெடியன் செய்த ஈனத்தனம்தான். கனடா போய் இன்றைக்கு ஆறு வருசம். இந்தா அம்மா இந்தாங்கோ அப்பா என்று ஒரு ஐந்து சதமாவது அனுப்புதே. ஐயோ காசு அனுப்பாவிட்டாலும் பெற்று வளர்த்த அந்த மனுசனை நினைத்து ஒரு கடிதமாவது போட்டாலே மனம் ஆறிவிடும். இவனுக்குப் பிறகு போன எத்தனையோ பெடியள், பெட்டையள் உழைச்சு வீடும் கட்டி சகோதரங்களையும் கூப்பிட்டு போட்டுதுகள்.

இந்தப் பிள்ளைக்கு என்ன அறிவோ? பெற்ற தகப்பன் மனதிலே கூட இந்தப் பிள்ளை எவ்வளவு வைராக்கியத்தை ஏற்படுத்திப் போட்டுது. எப்ப இந்த பிள்ளையின்ர கதையை எடுத்தாலும் அவன்தானே செத்துப் போனான் என்று கைகழுவி விட்டாச்சு. பிறகு ஏன் இவனைப் பற்றி கதைக்கிறியள.; எழும்பிப் பார்க்கிற வேலைய பாருங்கோவன் என்று அந்த மனிசன் சொல்லும்போது எவ்வளவு வேதனையாக இருக்கும். அந்தக் கல்லு மனதிலே கூட பாசமும் ஈரமும் இருக்கும் என்று அவள் நினைக்கவில்லை.

ஆறு வருடங்களுக்கு முன்னால் மகனைக் கனடாவுக்கு அனுப்பியதை எண்ணிப் பார்த்துக் கொள்கிறாள் சிவகாமி.

ஐயா! அம்மா ஆத்தாக் கொடுமையிலதான் உன்னை வெளிநாட்டுக்கு விடுகிறன் ராசா. அம்மா தங்கச்சிக்கு உழைக்க வேண்டுமென்று நினைத்து கஸ்டமான வேலையெல்லாம் செய்யக்கூடாது தம்பி. மற்றது கனகாலம் நிற்காமல் இரண்டு வருசத்தில அம்மாட்ட வந்திடவேணும் என்ன.

மகனிடம் சொல்லி அனுப்பியது நினைவுக்கு வருகிறது. அந்த மனுசன்; நாலு காசு சம்பாதிச்ச தோட்டத்தையும் இந்தப் பொடிக்காக விற்று கடைசியில அந்த மனுசனை மற்றவைக்கு கூலி வேலை செய்ய வைத்ததுதான் மிச்சம்.

பெருமூச்சு விட்டாள் சிவகாமி. தம்பி, நீ வெளிநாடு போகவேணுமென்று நான் நினைக்கவில்லை. படிக்கலாம். இங்கேயே ஒரு வேலையைத் தேடலாம். ஆனால் நீயும் அம்மாவும் வெளிநாடு போக வேணும் என்று ஒற்றைக்காலில் நிற்கிறியள். அப்ப போட்டு வாவன். உழைச்சு கொம்மாவுக்கு அனுப்புறதவிட கெட்ட சேர்க்கையும் கேவலமான நடத்தையும் இல்லாமல் திரும்பிவரப் பார்க்க வேணும். எங்களை மற்றவர்களிடத்தில தலை குனிய வைச்சுப் போடாதே. அவ்வளவுதான்.

அந்த மனிசன் பின்னாலே நடக்கப் போறதை எவ்வளவு தெளிவாகச் சொல்லிப் போட்டுது. முன்பெல்லாம் தபால்காரனைக் கண்டால் அவளுக்கு ஒரே பதற்றம். தம்பியின் கடிதம் வந்ததோ என்று தினமும் கேட்பாள். இனி நான்தான் உனக்கு கடிதம் எழுதிப் போடவேணும்போல இருக்குது. உனக்கு வேற வேலை இல்லையா என்று தபால்காரன் ஒருநாள் ஏசியபிறகு அவனின் விசில் சத்தம் அவளை ஒன்றும் செய்வதில்லை.

நீலநிறத்திலே கட்டுக் கட்டாக அவன் கையிலை வெளிநாட்டுக் கடிதங்களை தூரத்தில் நின்று பார்ப்பாள் சிவகாமி. தனது வீடு தவிர மற்ற எல்லா வீடுகளிலும் அவன் விசில் சத்தம் கேட்கும்போது அவள் மனதுக்கு என்னவோ மாதிரி இருக்கும்.

மாரிமுத்தரிடம் முகம் மலர்ந்து சொன்னாள் சிவகாமி. எங்களின்ர சாரதாவின் தம்பி ஆனந்தன் கனடாவிலை இருக்கிறான் எல்லோ. அவன் தன்னுடைய பிள்ளைக்கு அங்க பிறந்தநாள் கொண்டாடி படம் எடுத்து அனுப்பியிருக்கிறான் அப்பா. அதில எங்களின்ர தம்பியும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான். இருக்கிற ஸ்ரைலும் உடம்பும் அந்தக் காலத்தில நீங்கள் இருந்த மாதிரித்தானப்பா இருக்கிறான். தூ தூ… நாவூறு படக்கூடாது. என்ர பிள்ளை எங்கயாவது நல்லா இருக்கட்டும்.

சிவகாமி அக்கா, இந்தப் படத்தில இருக்கிறது யாரெண்டு தெரியுதோ, உனக்கு வேண்டிய ஆள்தான் என்று அவள் பிள்ளை சாரதா கேட்டபோது நானே கொஞ்ச நேரம் மட்டுக்கட்ட முடியாமல் போட்டன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கோவன்.

எல்லாம் சரிதானப்பா. சின்ன வயதில இருந்து தோட்டம் எல்லாம் அடியன் அடிச்சு இவனை வளர்க்க எவ்வளவு கஸ்டப்பட்டிருப்பேன். வருத்தம் துன்பம் எல்லாம் பார்த்து படிப்பிச்சு விட்டவர் அப்பா என்ற ஒரு நினைப்பு இல்லாமல் போட்டுது. அதைப்பற்றி காரியம் இல்லை. இருக்கிற வரைக்கும் உழைச்சு சீவிக்க என்னாலே முடியும். இந்தப் பிள்ளை எங்களை ஏமாற்றவில்லையடியப்பா. தன்னைத்தானே ஏமாற்றுகிறது. எப்ப இருந்தாலும் ஒருநாளைக்கு தானாய் உணரும். அப்ப நாங்கள் இருக்கிறமோ போறமோ ஆர் கண்டது, விடு.

பழைய நினைவுகளை மனத்திரையில் ஓடவிட்டுக் கொண்டு அரிசிப் பானையை தடவிப் பார்த்தாள் சிவகாமி. அதை முழுமையாக வழித்து; துடைக்கக்கூடாது என்பதற்காக கொஞ்ச அரிசி விட்டு வைத்த ஞாபகம். அதனைக் கையில் எடுத்துக் கொண்டு முருங்கை மரத்தைப் பார்த்தாள். சில கிளைகளில் மட்டும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இலைகள்.

பிள்ளைகள் அடுப்பை மூட்டுங்கோ. முருங்கையிலை போட்டுக் கொஞ்ச கஞ்சி காய்ச்சுவம். அப்பாவைக் கொண்டு அந்தத் தேங்காயை உரிப்பியுங்கோ. சம்பல் அரைப்பம்.

எனக்கு என்னத்துக்கப்பா. அந்தப் பிள்ளையளுக்குக் கொடுத்து நீயும் குடியன். அதுகள் காணக்கூடியளவு குடிச்சு விட்டினம். நீங்கள் இதைக் குடியுங்கோ. சாப்பிடாமல் கிடந்து வருத்தத்தை தேடவல்லோ போறியள். ஒருக்கால் எழும்புங்கோ.

கணவனின் கையில் கஞ்சிக் கிண்ணத்தையும் பலா இலையையும் கொடுத்துவிட்டு வாசற்படியில் வந்து அமர்ந்தாள் சிவகாமி. மாரிமுத்தர் கஞ்சியை உறிஞ்சிக் குடிப்பது அவள் காதுகளுக்குக் கேட்கிறது. இன்னும் கொஞ்சம் குடியுங்கோவனப்பா. காணும் விடு.

மற்றதப்பா ஆனந்தத்தோட கதைக்கிறதுக்கு சாரதான்ரை மனுசன் கொழும்புக்கு போகப் போகுதாம். நாங்களும் தம்பியோட ஒருக்கால் கதைச்சுப் பார்க்கலாம் என்று நினைக்கிறன்.

போய்க் கதைச்சுப் பாரன்.

நான் என்னென்று போறது. சாரதா வந்தாலும் பரவாயில்ல. நீங்கள் ஒருக்கா போட்டு வாங்கோ. நீங்கள் கொஞ்சம் உறுக்கிக் கதைச்சால்தான் கேட்பான்.

போய்ப் பார்க்கிற வேலையப் பார். இவ்வளவு காலமும் எத்தனை கடுதாசி போட்டும் அறிவு வராதவனுக்கு ரெலிபோனில கதைச்சுத்தான் அறிவு வரப்போகுதோ. வீணாய் ஆரிட்டையாவது காசை மாறிக் கொண்டு போய் ஆகப்போகிற காரியம் ஒன்றுமில்லை. அதுமட்டுமில்ல. இப்ப கொழும்புக்குப் போறது என்ன விளையாட்டான வேலையா. கஸ்டப்பட்டு போனால்கூட என்னோட கதைக்கிறானோ என்னவோ.

பிள்ளை கதைக்குமப்பா. ஏதோ கூடாத கிரகபலன். பிள்ளை இப்படியெல்லாம் நடந்து போட்டுது. அம்மா தங்கச்சி ஆட்களை மறந்து போனியோ மோனை என்று ஒருக்கா கேளுங்கோ. நீங்கள் சொன்னால் தட்ட மாட்டான் அப்பா. தங்கச்சி ஆட்களைக் கூப்பிடச் சொல்லி அம்மா சொன்னவ என்று சொல்லுங்கோ.

அப்பா, அண்ணாவோடு கதைச்சு எனக்கொரு சங்கிலி வாங்கிக் கொண்டு வாங்கோ. அப்பா, இவவுக்கு சங்கிலி எனக்கொரு சைக்கிளப்பா. எல்லாம் யோசிப்பம். துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு மாரிமுத்தர் எழுந்தார். சிவகாமி கஞ்சிக் கிண்ணத்தை எடுத்தாள்.

இன்றோடு இருபத்தியொரு நாட்கள். சிவகாமிக்கு மனம் இருப்புக் கொள்ளவில்லை. எப்படியும் பத்துப் பதினைந்து நாள் செல்லும் திரும்பி வர. யோசிக்க வேண்டாமென்று சொல்லிவிட்டுத்தான் போனவர்கள். இவர் தம்பியோட கதைச்சு அதுட்டயும் காசு இருக்காதுதானே. அது மாறி அனுப்ப எப்படியும் பத்து நாளாகும். கடவுளே! இந்த மனுசன் ரெலிபோனில கோபப்பட்டு அவனோட ஏதும் கதைச்சுப் போடுதோ தெரியாது. என்ர பிள்ளை அம்மாவுக்கு என்ன கொடுத்து விடுகிறது என்று பார்த்தால்தான் அன்பு இருக்கோ இல்லையோ என்று தெரியும்.

என்ர மனுசன் ஒருக்காலும் வாய் திறந்து காசு அனுப்பு என்று பிள்ளையைக் கேளாது பாருங்கோ. சொல்வழி கேளாமல் தோட்டம் கொத்தப்போய் உடம்பை வருத்திக் கொண்டு திரியுது. ஒரு தண்ணீர் இறைக்கிய மெசின் வாங்கிக் கொடுத்தால் மண்ணெண்ணெய் கிடைக்கிற நேரத்தில நாலு தோட்டத்துக்கு இறைக்கப் போயாவது ஐஞ்சைப் பத்தை உழைக்கும் என்று தம்பியிடம் ஒருக்கால் சொல்லி விடுங்கோ என்று சாரதாவின் கணவரிடம் சொல்லியிருந்தாள் சிவகாமி.

நான் நினைப்பதுபோல அப்பா இந்தக் காசைக் கொண்டுபோய் ஒரு மிசின் வாங்குங்கோ என்று பிள்ளை கொடுக்க வேணும். கட்டிலில் இருந்து கொண்டு ஒரு சிரிப்பு சிரிப்பார். சிவகாமியின் மனதில் ஆயிரம் சிந்தனைகள்.

அம்மா! அப்பா அண்ணாவுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். கொண்டு போக மறந்து வைத்துவிட்டுப் போட்டார். சிவகாமி பிரித்துப் பார்த்துப் படித்தாள்.

அன்புள்ள மகன் வசந்தகுமாருக்கு அப்பா எழுதிக் கொள்வது, கடவுள் துணையால் நான், அம்மா, தங்கச்சி ஆட்கள் எல்லோரும் சுகமாக இருக்கிறோம். நான் உன்னுடன் கதைக்க கொழும்பு வந்தேன். உன்னோடு தொடர்பு கொள்ள முடியவில்லை. இது நான் எதிர்பார்த்ததுதான். தம்பி! அப்பா அம்மாவை நீ மறந்து போனாயா? இரண்டு தங்கச்சிமாருடன் அம்மா படும் கஸ்டத்தை நீ நேரிலே கண்டால் கண்ணீர் விட்டு அழுவாய். அப்படி ஒரு நிலை எமக்கு. நீ கொம்மாவுக்கு ஏதும் உதவினால் உயிருள்ளவரை உனக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன். மேலும் என்னால் முன்பு போல வேலை செய்ய முடிவதில்லை. ஏதோ மிகவும் சிரமப்பட்டு கூலி வேலைக்குத்தான் போய் வருகிறேன். எனக்கும் உன்னைப் பார்க்க வேண்டும்போல் உள்ளது. உன்னைக் காணாமலேயே கண்ணை மூடி விடுவேனோ என்ற பயம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இப்ப நீ எப்படி இருப்பாயோ தெரியாது. நீ எனது பிள்ளை. அறிவு தடுமாற மாட்டாய். ஆனால் உனது நடவடிக்கைகள் எனக்குப் புரியாத புதிராக உள்ளது. எனவே நீ ஒரு கடிதம் போடு.

இப்படிக்கு
உனது அன்புத்தந்தை மாரிமுத்து

ஒருவேளை அண்ணாவோடு கதைக்க முடியாமல் போனாலும் என்று நினைச்சு அப்பா இதை எழுதியிருக்கிறார் அம்மா. எங்களை அண்ணாவின்ர கதை எடுத்தாலே கோபமாக ஏசுபவர் எப்படி எழுதியிருக்கிறார் பார்த்தியா. மகனைப் பார்க்க ஆசையாய் இருக்கலாமல்லோ.

அதுதான் பெற்ற பாசம் பிள்ளைகளே. அவரோட இருபத்தெட்டு வருசமாய் வாழ்ந்த எனக்குத் தெரியும்தானே அவரைப் பற்றி. பார்வைக்குத்தான் அவர் கல்லுப் போன்றவர். அந்தக் கல்லும் உடைஞ்சால் இப்படித்தான் இருக்கும்.

பிள்ளைகளுக்கு சிவகாமி சொல்லிக் கொண்டிருக்கும்போது தூரத்தே சாரதா ஓடி வருவது தெரிகிறது.

ஐயோ சிவகாமி அக்கா. இவரையும் மாரிமுத்து அண்ணையையும் கொழும்புக்குப் போகும்போது வெட்டிப் போட்டாங்களாம். கூடப்போன செல்லையா அண்ணையின்ர மகன் வந்து சொல்லுது. ஐயோ கடவுளே! தலையில் அடித்து அழுதாள் சாரதா.

சிலையாக நின்றான் சிவகாமி.

இரா.சம்பந்ன்
(எனது வித்தும் நிலமும் சிறுகதைப் புத்தகத்தில் இருந்து)

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.