புகழ் விரும்பாத இணுவில் பேராசான்

புகழ் விரும்பாத இணுவில் பேராசான்

இன்று பண்டிதர் நா. இராசையா அவர்களின் சிரார்த்த தினம்

(30.9.1927 – 22.11.2011)

யாழ்ப்பாணத்தில் உள்ள பெரிய ஊர்களில் ஒன்று இணுவில். புகழ் பெற்ற கோவில்கள் நிறைந்த ஊர். சைவ மக்கள் வாழும் ஊர். ஞானிகள் கலைஞர்கள் அறிவாளிகள் வாழ்ந்த இன்னும் வாழ்கின்ற ஊர். பண்பு செழித்து வளரும் ஊர். நீர் வளம் நில வளம் மனித வளம் குறையாத ஊர். பலரும் நாடி வரும் ஊர்.

 

அந்த ஊரில் சைவ மரபில் வந்தவரே அருணாசலம் என்பவர். இவருடைய மூதாதையினரைச் செட்டி என்று அழைப்பார்கள். இவர்கள் மன்னார் நகரில் சிறந்த பெரிய வியாபாரிகளாக விளங்கியவர்கள். இவர்களே பரராசசேகரப் பிள்ளையார் கோவில் தேர்த் திருவிழா உபயகாரரும் ஆவர்.

 

 

அருணாசலம் அவர்களுக்கு நான்கு பெண் மகவுகளும் அருமையாக ஒரு புதல்வனும் மக்கள். இவருடைய மூன்றாவது புத்திரியான தெய்வானைப் பிள்ளை இணுவில் கிழக்கைச் சேர்ந்தவரும் காரைக்காடு சுவாமியாரின் சந்ததியைச் சேர்ந்தவருமான நாகலிங்கம் என்பவரை மணந்து பெற்ற புத்திரனே அமரர் இராசையா அவர்கள்.

 

இவர் இணுவில் அம்பிகைபாக வித்தியாசாலையில் (தற்போதைய இணுவில் இந்துக்கல்லூரி) கல்வி கற்று 1943ம் ஆண்டு தமிழ் சிரேட்ட தராதரப் பரீட்சையில் சித்தி எய்தினார்.

 

இவர் சகல பாடங்களிலும் வல்லவராகவும் ஞாபக சக்தியில் சிறந்தவராகவும் விளங்கினார். நானும் அவருடன் ஒரு வகுப்பில் கல்வி கற்றேன். இவர் பண்டிதர் காத்தியேசு சரவணமுத்து எழுதி அரங்கேற்றிய சகுந்தலை நாடகத்தில் சகுந்தலையின் தகப்பனாக நடித்து யாவருடைய பாராட்டையும் பெற்றவர்.

 

யாழ்ப்பாணம் பரமேசுவராக் கல்லூரியில் நடைபெற்ற பண்டித வகுப்பில் சேர்ந்து தமிழ் கற்றுப் பண்டிதர் பரீட்சையில் சித்தியடைந்த இராசையா அவர்கள் இலங்கை வித்தியா பகுதியின் ஆசிரியர் தராதரப் பரீட்சையிலும் சித்தியெய்தினார். நீண்டகாலம் ஆனைப்பந்தி உயர்கலைக் கல்லூரியிலும் பின்பு ஆசிரியர் லோகநாதனால் ஆரம்பிக்கப்பட்ட கல்விப் போதனா நிலையத்திலும் தமிழ் ஆசிரியராகப் பணி புரிந்தார்.

 

அது போல பல்வேறு கிராமங்களில் பல கல்வி நிலையங்களில் தமிழ் கற்பித்தார். கோண்டாவில் நிரு கல்வி நிலையம் இருபாலை எக்ஸ்பிரஸ் கல்வி நிலையம் நெல்லியடி மொடன் சயன்ஸ் சென்றர் சுண்ணாகம் ஆனந்தா கல்வி நிலையம் போன்றவை அவற்றுள் சிலவாகும்.

 

இவரும் நானும் பாடசாலையில் படித்து வந்த காலத்தில் வாசிக சாலை ஒன்றை எமது கிராமத்தில் நிறுவி எமது செலவிலேயே பத்திரிகைகளை வாங்கி அதனை நடத்தி வந்தோம்.

 

பண்டிதரின் தமையனார் சுப்பையா சாமியார் ஆவார். அவரிடமும் அவரின் மகன் சுப்பிரமணியம் என்ற குமரகுருவிடமும் மிகுந்த அன்பு கொண்டிருந்த பண்டிதருக்கு சாமியாரின் மறைவு பெரும் தாக்கத்தைத் தந்தது.

 

இவர் தன் வீட்டிலும் தமிழ் கணித வகுப்புகளை நடத்தி ஊர்ப் பிள்ளைகளுக்கும் அயல் கிராமத்து பிள்ளைகளுக்கும் கல்வி ஊட்டியவர். அதற்காக யாரிடமும் கைநீட்டி பணம் பெற்றதில்லை. யாராவது விரும்பிக் கொடுத்ததை மட்டும் ஏற்றுக் கொண்டார். கற்பித்தலை வருமானம் தரும் தொழிலாகப் பண்டிதர் பார்த்ததில்லை.

 

பண்டிதர் புகழையும் பணத்தையும் ஒரு பொருளா  மதிக்காத எளிமை வாழ்வை விரும்பியவர். கோவில்களிலும் சமய தாபனங்களிலும் பொது மேடைகளிலும் சொற்பொழிவு ஆற்றுவதை தனது தொண்டாக கொண்டவர். ஆதனால் பொது மக்களிடம் மிகுந்த மதிப்ப ுப் பெற்றவர் அவர்.

 

பண்டிதர் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவராக விளங்கியவர். 1970ம் ஆண்டு மட்டக்களப்பு நகராட்சி மண்டபத்தில் நேற்று இன்று நாளை என்ற தலைப்பில் பண்டிதர் ஆற்றிய உரையை சபையோர் நீண்ட நேரம் கரவொலி எழுப்பிப் பாராட்டினர். பண்டிதர் க.பொ .இரத்தினம் அவர்களும் அன்றைய மட்டுநகர் முதல்வர் சொல்லின் செல்வர் இராசதுரை அவர்களும் அந்த உரையை மறுநாள் மகாநாட்டிலும் நிகழ்த்துமாறு வேண்டிக் கொள்ளும் அளவுக்கு அந்த உரை உணர்ச்சி மயமானதாக அமைந்தது.

 

அது போல இணுவில் பரராச சேகரப் பிள்ளையார் கோவிலில் வித்துவான் சபா. ஆனந்தர் தலமையில் நடைபெற்ற சிவராத்திரி விழா கவியரங்கில் பல்கலைச் செல்வர் சொக்கன் போன்ற கவிஞர்களுடன் கலந்து கொண்டு சிவனார்க்கும் ஓரிரவோ என்ற தலைப்பில் அவர் பாடிய கவிதை பலராலும் பாராட்டப்பட்டது. சிவநெறிச் செம்மல் ஆசியர் திரு. அ .வை. கதிர்காமநாதன் அவர்கள் மேடைக்கு வந்து என் மாணவன் அல்லவா என்று பாராட்டியது மட்டுமன்றி தம் கையாலேயே மாலை அணிவித்து ஆசீர்வத ித்தார். இது தனக்கக் கிடைத்த மிகப்பெரிய பேறு என்று பண்டிதர் சொல்வார்.

 

தனக்குத் தமிழ் கற்பித்த தமிழ் அறிஞர்களான பண்டிதர் க. கார்த்திகேசு சரவணமுத்து பண்டிதர் சி.க. தம்பையா தமிழ் அறிஞர் அ.வை. கதிர்காமநாதன் பண்டித வகுப்பில் தமிழ் இலக்கணம் இலக்கியம் கற்பித்த வித்துவான் க. வேந்தனார் வித்துவான் கார்த்திகேசனார் பண்டிதர் க. நாகலிங்கம் பண்டிதர் த.சுப்பிரமணியம் தொல்காப்பியம் கற்பித்த குமாரசுவாமிப் புலவர் போன்ற பெரியோரின் திருவடிகளை வாழ்நாள் முழுவதும் தியானித்தவர் பண்டிதர் அவர்கள்.

 

இணுவில் கந்தசுவாமி கோவிலில் நடைபெற்ற இந்திய அறிஞர் கம்பசாகரம் பேராசிரியர் இராதாகிருஷ;ணன் அவர்களின் சொற்பொழிவுக்குப் பண்டிதர் தலைமை வகித்து உரையாற்றினார். அவர் உரையைக் கேட்ட இராதாகிருஷ;னன் அவர்கள் இணுவில் மண்ணிலே  கம்பராமாயணத்தில் இவ்வளவு ஆழ்ந்த பயிற்சியுடைய அறிஞர்கள் இருக்கும் போது எங்களை எல்லாம் ஏன் அழைக்கின்றீர்கள்? என்று வியந்து பாராட்டினார்!

 

இவரும் அமரர் மா. இராசரத்தினம் சோ. பரமசாமி பண்டிதை திருமதி வை. கணேசபிள்ளை போன்றவர்களும் இணைந்து பண்ணிசை மன்றம் ஒன்றை பிள்ளையார் கோவிலில் நிறுவினார்கள். யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலைகளில் இருந்து மாணவர்களை அழைத்து பண் இசைப் போட்டிகள் நாடாத்தி மன்றத்தினால் பரிசில்கள் வழங்கப்படுகின்றன. வருடாவருடம் தேர்த்திருவிழா நாளன்று மாலையில் இவ் விழா நடைபெறும். அம் மன்றத்துடன் அறநெறிப் பாடசாலையையும் இணைத்து பண்டிதை திருமதி வை. கணேசபிள்ளை தலைமையில் சிறப்பாக நடைபெற பண்டிதரும் மிகவும் துணை நின்றார்.

 

பண்டிதர் தனது மச்சாள் முறையான சின்னம்மா என்ற பெண்ணை 1956ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகளும் இரு பெண் குழந்தைகளும் கிடைத்தார்கள் இதில் கடைசி மகளான அருட்செல்வி 2003ம் ஆண்டு நோய்வாய்ப்பட்டு மரணமடைந்தாள். அது பண்டிதரையும் மனையாளையும் மிகவும் துன்பமுறச் செய்தது.

 

பண்டிதர் சைவ சமயத்தின் மீது மிகுந்த பற்று மிக்கவர். எல்லாம் அவன் செயல். அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்ற நம்பிக்கை மிக்கவர். மது மாமிசத்தைத் தீண்டாதவர். விரத அநுட்டானங்களைக் தவறாது கடைப்பிடித்தவர். ஆடம்பரத்தை அடியோடு வெறுத்தவர். வாழ்க்கையில் எத்தனையோ துன்பங்கள் ஏற்பட்டும் கடைசிவரை தன் நேர்மைக் குணத்தை உறுதியாகப் பின்பற்றி நடந்தவர்.

 

அறம் தவறிய செயல்களுக்கு அவர் துணை போனதில்லை. நெறி தவறிச் சொர்க்கம் கிடைத்தாலும் நிராகரிக்கும் பண்பு கொண்டவர் அவர் ஸ்ரீ பரராச சேகரப் பிள்ளையார் கோவில் பிள்ளையார் கதைத் திருவிழாக்கள் இருபத்தி ஒன்றில் ஏழாவது திருவிழா பண்டிதர் குடும்பத்தினுடையதாகும்.

 

போர்ச் சூழலால் புலம் பெயர்ந்து கொழும்பிலும் தமிழ் நாட்டிலும் வாழ்ந்த பண்டிதர் இறுதிக் காலத்தில் தன் மகள் ஆதிலட்சுமியுடன் சென்னையில் வாழ்ந்தார். அங்கும் ஆலயங்களைத் தேடிச் சென்று இறைவனை வணங்குவதே தன் தலையாய கடமை என்று எண்ணி அவ்வாறே ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டார்.

 

தான் வணங்கிய  ஸ்ரீ பரராசசேகரப் பிள்ளையார் ஸ்ரீ விசாலாட்சி சமேத விசுவநாதப் பெருமான் ஸ்ரீசிவகாமசுந்தரி அம்மாள் ஸ்ரீ ஞான வயிரவப்பெருமான் ஸ்ரீ முருகப்பெருமான் ஆகிய ஐம்பெரும் தெய்வங்களையும் போற்றி ஐம்பெரும் கடவுளார் துதி என்று ஒரு பக்தி நூலைப் பண்டிதர் எழுதினார். அது அவர் மனதுக்கு நிறைவு தந்த நூலாகும்.

 

தனக்கு மரணம் நெருங்கிய கணத்திலும் தன்னை விட்டு என்றுமே அகலாத தன் மனைவியை அழைத்து தன் அருகே இருத்திக் கைகளைப் பற்றிக் கொண்டு ஒரு கறுப்புச் சுவாமியும் அம்மனும் இங்கே இருக்கின்றன. அவற்றுக்கு விளக்கு வைத்துக்கொள் என்று கூறிவிட்டு கண்களை மூடி சிவாயநம சிவாயநம சிவாயநம என்று உச்சரித்துக் கொண்டே இயற்கை எய்தினார் பண்டிதர் அவர்கள். பண்டிதரைப் போலவே பிள்ளைகளும் தமிழ் ஆர்வம் உள்ளவர்களாக இருக்கின்றனர்.

எழுதியவர்

முன்னாள் பிரதிக் கணக்காளர் நாயகம்

திரு. ஆ. இராசரத்தினம் அவர்கள்.

 

 

 

 

 

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.