சங்க இலக்கியமும் சமுதாய மடமையும்!
பொழுது மறைந்து எங்கும் இருள் சூழத் தொடங்கி விட்டது. தினைப் புலங்களையும் காட்டு நிலத்தின் ஒற்றையடிப் பாதைகளையும் கடந்து சென்று அந்தக் கிராமத்து மக்கள் மலையடிவாரத்து முருகன் கோவிலுக்கு முன்னே இருந்த பரந்த வெளியில் கூடிவிட்டார்கள்.மணல் பரப்பப்பட்ட அந்த வெளியைச் சுற்றிக் காட்டு மரங்கள் நிறைந்து காணப்பட்டன. நெய்க்களி பூசப்பட்ட தீப்பந்தங்களின் வெளிச்சத்தில் கூட்டமாக அமர்ந்து மக்கள் பேசிக்கொண்டு இருந்தார்கள்.நடுநிசி ஆனதும் பறை மேளங்களும் உடுக்கு என்ற தோற்கருவிகளும் குழல் வாத்தியங்களும் ஒலிக்கத் தொடங்கின. மலைவாழ் மக்கள் தாம் எடுத்து வந்த கம்பங் களியினையும் தினையரிசிச் சோற்றினையும் நெல்லுப் பொரிகளையும் காந்தள் பூ மாலைகளையும் அந்த இறைவனுக்கு முன்னே படைத்துவிட்டு பூசாரியான வேலன் என்பவனின் வரவுக்காகக் காத்திருந்தார்கள்.அந்தத் தாயும் தன் மகளுடன் வந்து ஒரு புறத்தில் இருந்தாள். எவ்வளவோ அழகான தன் மகள் அந்த அழகெல்லாம் இழந்து மெலிந்து வேளாவேளைக்கு உண்ணாமல் தனிமையில் புலம்புவது கண்டு அவள் மிகுந்த வேதனையோடு குறி கேட்டுப் பார்த்தாள்.தெய்வக் குற்றத்தினால் உன் மகளைப் பேய் பிடித்திருக்கிறது. அவள் சாப்பிடமாட்டாள். சரியாக உறங்க மாட்டாள். மெய் மெலிந்து விரைவில் உயிரை விடப் போகின்றாள் என்று ஒருநாள் மதியம் வேலன் ஊருக்குள் வந்து குறி பார்த்துச் சொல்லி விட்டான்.துடித்துப் போனாள் அத்தாய். இதற்கு ஏதாவது பரிகாரம் இருக்குமா என்று கேட்டாள் அவள்.ஏன் இல்லை? இம்முறை மலைக்கோவில் வெறியாட்டு விழாவுக்கு உன் மகளையும் அழைத்துக் கொண்டு வந்துவிடு. அங்கே அறுக்கப்படும் மறியாட்டுக் குட்டியின் இரத்தத்தை எடுத்து உன் மகள் நெற்றியில் பூசிக் கொண்டால் அவளைப் பிடித்த தெய்வக் குற்றம் நீங்கும். அவள் பழைய நிலை அடைவாள்.என்று வேலன் உரைத்த வார்த்தைகளைக் கேட்டு பலமுறை மறுத்த மகளையும் வற்புறுத்தி அழைத்து வந்துவிட்டாள் அந்தத் தாய். ஆனால் அந்தத் தாயையும் மகளையும் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தாள் கூட வந்திருந்த அந்தத் தோழி.அதோ வேலன் வந்து விட்டான் விரித்துவிட்ட தலையும் கழுத்திலே பனம் பூவால் செய்யப்பட்ட மாலையும் கையிலே பிடித்த முருகனின் வேலும் காலிலே சதங்கையும் என்று நிலம் அதிரச் சாமி ஆடியபடி அவன் வந்த கோலம் அனைவரையும் நடுங்க வைத்தது. வலியப் போய் சிலரிடம் அருள் வாக்குச் சொன்னான். கையில் வைத்திருந்த கம்பு வைக்கோலால் சிலர் தலையில் அடித்து ஏதோ சொன்னான். அங்கே படைக்கப்பட்டிருந்த உணவுகளை எல்லாம் கடவுளுக்கக் காட்டி வணங்கிப் பூசை செய்துவிட்டு ஒரு அரிவாளைக் கையில் எடுத்தான்.அங்கே கட்டப்பட்டிருந்த ஆட்டுக் குட்டியின் தலையை வெட்டினான். அந்தப் பெண்ணைக் கைதொட்டு இழுத்துக் கொண்டு கூட்டத்தின் நடுவே வந்து அறுக்கப்பட்ட ஆட்டின் இரத்தத்தை எடுத்து அவள் நெற்றியில் பூசினான். இரத்த வாடையும் வேலனின் கள் வாடையும் கலந்த மணத்தினால் அந்தப் பெண் மயங்கிச் சரிந்தாள்.உன் பெண்ணின் குற்றம் நீங்கிவிட்டது. அழைத்துச் செல் என்றான் வேலன். கூட வந்த உறவினர்கள் தூக்கிச் சென்றார்கள்.இரவு வெறியாட்டில் கோர தாண்டவம் ஆடிய வேலன் மறுநாள் மாலை பூனை போல பதுங்கி பரம சாதுவாக வந்து கொண்டிருப்பதைப் பார்த்தார்கள் அந்தப் பெண்ணும் தோழியும். வீட்டிலே யாரும் இல்லை.சாமி இங்கே வா என்று அழைத்தாள் தோழி. தயக்கத்துடன் வந்தான் வேலன். சாமி உன்னிடம் ஒன்று கேட்கின்றேன். நீ கோபித்துக் கொள்ளக் கூடாது. நேற்று இரவு முருகப்பெருமான் உனது உடம்பிலே வந்துவிட்டான் என்று சொல்லி ஊரை ஏமாற்றிக் கொண்டு பெரிய வார்த்தைகளை அருள் வாக்காகப் பேசினாய் நீ. பல நிறங்களிலே படைக்கப்பட்ட உணவுகளையெல்லாம் நீயே அள்ளி உண்டு மகிழ்ந்தாய். தெய்வத்தின் பெயரால் ஒன்றுமறியாத ஆட்டுக் குட்டியைக் கொன்றாய் அதன் இரத்தத்தை எடுத்து இவளின் நல்ல வாசனை உள்ள நெற்றியிலே பூசிக் கெடுத்தாய் பேய் போய் விட்டது என்றாய்.இவளுக்கு என்ன பிரச்சனை எதனால் மெலிகின்றாள் என்று உனக்கு ஏதாவது தெரியுமா அது எதுவும் தெரியாமல் நீ உன்பாட்டுக்கு வெறியாடிக் குறி சொல்கின்றாயே. சரி அது உன் பிழைப்பு. போகட்டும்.இப்போது தெரிந்து கொள். இவள் ஒருத்தனைக் காதலித்தாள். சிறிது காலமாக அவனைக் காண முடியவில்லை. அதனால் ஏற்பட்ட ஏக்கம் கவலை தான் இவள் மெலிவதற்கும் உண்ணாமல் உறங்காமல் புலம்புவதற்கும் காரணம். இவள் தாய் நினைப்பது போல தெய்வக் குற்றம் அல்ல இந்த நோய். அன்பு மயமான தெய்வம் யாரையும் தண்டிக்காது. அது கேட்கவில்லை படையல் வேண்டும். ஆட்டின் இரத்தம் வேண்டும் என்றுநேற்றுப் பொருளையும் நேரத்தையும் வீணாக்கி நீ கொடுத்த பலிகள் எல்லாம் முருகக் கடவுளைச் சென்றடைவது அப்புறம் இருக்கட்டும் இவளைக் காதலித்தவனைப் போய்ச் சேருமா நீ செய்த பூசைகள் அவனின் மனத்திலே ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்தி இவளை நினைக்க வைக்குமா அப்படி எதுவும் நடக்கப் போவதில்லை. அது எங்களுக்கும் தெரியும். இதை நீயும் புரிந்து கொள்ள வேண்டும் என்றாள் அந்தத் தோழி!முருகு அயர்ந்து வந்த முதுவாய் வேல!சினவல் ஓம்புமதி; வினவுவது உடையேன்;பல் வேறு உருவின் சில் அவிழ் மடையொடு,சிறு மறி கொன்று, இவள் நறு நுதல் நீவி,வணங்கினை கொடுத்தி ஆயின் அணங்கியவிண் தோய் மா மலைச் சிலம்பன்ஒண் தார் அகலமும் உண்ணுமோ பலியே?குறுந்தொகைப் பாடல் 362 பாடியவர் வேம்பத்தூர் கண்ணன்கூத்தன்தோழி சொன்னதை வேலன் புரிந்து கொள்கிறானோ இல்லையோ ஈரோட்டுப் பெரியவர்தான் தான் பகுத்தறிவுப் புரட்சிக்கு முதலில் வித்திட்டவர் என்று எண்ணியிருப்பவர்கள் இல்லை இல்லை பெரியார் பிறப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சங்க இலக்கியத்திலே ஒரு புலவன் இந்த மூட நம்பிக்கை பற்றி அன்றே சிந்தித்திருக்கின்றான். அவன் பாடல் குறுந்தொகையில் இடம் பெற்றிருக்கின்றது என்று புரிந்து கொண்டால் நல்லது.
இரா.சம்பந்தன்.
கனடா தமிழர் தகவல் சஞ்சிகையில் இன்று (5.2.2021) வெளியான எனது கட்டுரை இது.